full screen background image

‘சூரரைப் போற்று’ படத்தில் 18 வயது பையனாக நடித்திருக்கிறார் சூர்யா..!

‘சூரரைப் போற்று’ படத்தில் 18 வயது பையனாக நடித்திருக்கிறார் சூர்யா..!

ஒரு சில படங்களின் ட்ரெய்லரைப் பார்த்தவுடன், இந்தப் படம் எப்போது வரும் என ஆவலுடன் காத்திருப்போம். அப்படி சமீபமாக சமூக வலைதளம் தொடங்கி அனைவரது மத்தியிலும் பேசும் பொருளாக மாறியிருக்கிறது ‘சூரரைப் போற்று’ திரைப்படம்.

சூர்யாவின் நடிப்பு, இயக்குநர் சுதா கொங்காராவின் துல்லியமான இயக்கம், ஜி.வி.பிரகாஷின் மிரட்டலான இசை என அனைத்துமே இந்த எதிர்பார்ப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.

தீபாவளி கொண்டாட்டமாக வரும் நவம்பர் 12-ம் தேதி 200-க்கும் அதிகமான நாடுகளில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.

இதையொட்டி நாயகன் சூர்யா பேட்டியளித்துள்ளார்.

அது இங்கே :

“எனக்கு வருடா வருடம் ராக்கி கட்டிவிடும் சகோதரி இயக்குநர் சுதா கொங்கரா. நண்பர்களுக்குள் வியாபாரம் என்று வரும்போது, கருத்து வேறுபாடு வந்துவிடுமோ என நினைத்து  நட்பாகவே இருப்போமே என்று கூறி அவரிடம் சினிமா பற்றிப் பேசாமல் தவிர்த்தது உண்டு. படம் பண்ணுவோம் என்று சீரியஸாக உட்கார்ந்து பேசியதே கிடையாது.

ஆனால், ‘இறுதிச் சுற்று’ படத்தைப் பார்த்த பின்பு என் கேரியர் முடிவதற்குள் இவரோடு சேர்ந்து ஒரு படம் செய்துவிட வேண்டும் என்று உறுதி செய்தேன். அப்படி செய்த படம்தான் இந்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம்.

விமான போக்குவரத்தை வைத்து இதற்கு முன்பு இந்தியாவில் யாரும் இவ்வளவு பெரிய படமெடுத்தது கிடையாது. ஆகையால், இதில் நிறைய விஷயங்கள் முதல் முயற்சியாக இருந்தது. இதனால், இந்தப் படத்தை நாமே தயாரிக்கலாம் என்று முடிவெடுத்தேன்.

இந்தப் படத்தின் கதைக் கரு ‘SIMPLY FLY’ என்ற புத்தகத்தில் உள்ள ஐடியாவாக இருந்தாலும், அதனை 44 பக்கக் கதையாகக் கொடுத்தார் சுதா கொங்கரா. இந்தக் கதையைக் கேட்டவுடன் ஏன் நாம் இதில் நடிக்கக் கூடாது எனத் தோன்றியது. அதற்குக் காரணம் சுதாவின் எழுத்தில் இருந்த வீரியம்தான்.

அவ்வளவு பெரிய விமான போக்குவரத்து துறையில் எப்படி ஒருவர் 1 ரூபாய்க்கு டிக்கெட் விற்றார். அவருடைய சவாலான வாழ்க்கை நம்மிடம் வரும்போது, எப்படி நடிக்காமல்விட முடியும்…?

அப்போதிலிருந்து கதையில் பல மாறுதல்கள், ஒவ்வொரு காட்சிக்குமான மெனக்கிடல் என நானும் இயக்குநருடன் கூடவே பயணித்தேன். இந்த அனுபவம் எனக்கு வேறு எந்தவொரு படத்திலும் கிடைத்ததே கிடையாது.

இந்தியாவின் முகத்தையே ஒரு சிலர்தான் மாற்றினார்கள். அதில் முக்கியமானவர் கேட்பன் கோபிநாத். ஏனென்றால் விமான போக்குவரத்து துறையை அப்படியே மாற்றினார். அவரைப் பற்றிய விஷயங்களில் எதை எல்லாம் வைத்து கதையாக சொல்லலாம் என யோசித்து சுவாரசியமான திரைக்கதையாக எழுதியிருக்கிறார் இயக்குநர் சுதா.

ஒரு ஊருக்கு போக்குவரத்து எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்குமே புரியும். ஒரு போக்குவரத்தின் மூலம் நினைத்த இடத்துக்கு போக முடிகிறது என்றால் மட்டுமே கல்வி, தொழில் அனைத்திலுமே மாற்றம் உண்டாகும். எல்லா வகையான போக்குவரத்தும் நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் கோபிநாத்தின் உயரிய நோக்கம்.

மாட்டு வண்டி, ஆட்டோ, பஸ் என இருக்காமல் விமான பயணமும் எளிய மனிதர்களுக்கு எளிதாக கிடைத்ததாக இருக்க வேண்டும். ‘ஒருவருக்கு தான் கண்ட கனவில் எந்தளவுக்கு வைராக்கியம் இருந்தால் அது சாத்தியப்படும்’ என்று சொல்கிற படமாகவும் இந்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம் இருக்கும்.

இந்தப் படமே மதுரையில்தான் தொடங்கும். படத்தின் கதையே நீங்கள் கேட்ட மக்களிடமிருந்துதான் தொடங்கும். ஆகையால், எந்த தரப்பு மக்கள் பார்த்தாலும் இது கண்டிப்பாக அந்நியப்பட்ட கதையாக இருக்காது.

சில படப்பிடிப்புகளில்தான் நம் மனதுக்குப் பிடித்த விஷயத்தை செய்து கொண்டிருக்கிறோம்’ எனத் தோன்றும். ‘நந்தா’, ‘பிதாமகன்’, ‘மெளனம் பேசியதே’, ‘காக்க காக்க’ உள்ளிட்ட சில படப்பிடிப்புகளில் எனக்கு அப்படித் தோன்றியது. மறுபடியும் ஒரு புதிய அனுபவத்துக்குள் போகிறோம்; புதுசா ஒரு கற்றல் நடக்குது’ என்று சொல்வது மாதிரி அமைந்தது இந்தப் படம்.

மறுபடியும் நான் நேசிக்கும் சினிமாவை ரொம்பவும் ரசித்த அனுபவம், இந்த ‘சூரரைப் போற்று’ படப்பிடிப்பில்தான் கிடைத்தது.

‘சூரரைப் போற்று’ படத்தின் படப்பிடிப்பு 60 நாட்கள்தான் நடைபெற்றது. ஒவ்வொரு நாளுமே இதுவரை பண்ணாத ஒரு விஷயத்தை செய்து கொண்டிருக்கிறேன் என நினைத்தேன். அது ரொம்பவே ப்ரஷ்ஷாகவும், சந்தோஷமாகவும் இருந்தது.

இயக்குநர் சுதாவால் என்னை வைத்து கோபிநாத்தின் கதாபாத்திரத்தைப் பார்க்க முடிந்தது. இது ரொம்பவும், அழகான ஒரு பயணமாக இருந்தது. இயக்குநராக அவருடன் பணி புரிந்தது என்னால் மறக்க முடியாத ஒரு அனுபவம்.

பாட்டு, சண்டைக் காட்சி என்பதெல்லாம் இல்லாமல் வெறும் கதையை எமோஷனல் காட்சிகள் மூலமாகவே எந்தளவுக்கு நம்ப வைக்க முடியும் என்பதை இந்த ‘சூரரைப் போற்று’ உருவானவிதத்தின் மூலம் தெரிந்து கொண்டேன்.

சுதா இயக்கத்தில் என்னையே நான் வித்தியாசமாக பார்த்தேன். சுதா என்னிடம், சிரிக்காதே’ என்று அடிக்கடி சொல்வார். படம் முழுக்க சிரிக்காமல் நடிப்பதுதான் எனக்குப் பெரிய சவாலாக இருந்தது. ஒரு நடிகராக சுதாவின் இயக்கத்தைப் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

இதில் மனைவியிடம் ‘12 ஆயிரம் ரூபாய் கடன் தர்றீயா?’ என்று கேட்கும் அளவுக்கு உடைந்து போய், தரையோடு தரையாக இருப்பது மாதிரியான ஒரு கேரக்டர் எனக்கு.

நான் பிரமாதமான நடிகரெல்லாம் கிடையாது. என்னால் கேமிரா முன்னால் உடனேயெல்லாம் நடிக்க முடியாது. ஒரு படத்தில் நடிக்கும்போது, அந்தக் கதாபாத்திரமாக வாழ வேண்டும் என்று சொல்வார்கள்.

திடீரென்று சுதா என்னை ‘இந்தப் படத்தில் 18 வயது பையனாக நடிக்க வேண்டும்’ என்று சொன்னார். கடைசிவரை ‘வேறு யாரையாவாது வைத்து செய்துவிடுங்கள். எனக்கு 45 வயதாகப் போகிறது’ என்று சொன்னேன்.  ஆனால் அவர் விடாப்பிடியாக என்னையவே நடிக்க வைத்துவிட்டார்.

மீசை, தாடியுடன் எல்லாம் நடிக்க வேண்டிய காட்சிகளை படமாக்கிவிட்டு, அடுத்த நாளே 18 வயது பையனாக நடிக்க வேண்டியதிருந்தது. ஆகையால், ஒரே சமயத்தில் அதற்காக தயாராகிக் கொண்டிருந்தேன்.

வருடம் முழுக்க 80% உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது, இந்தக் கதாபாத்திரத்துக்கு 100% உடற் பயிற்சி செய்ய வேண்டியதிருந்தது. அவ்வளவுதான். அதுவும், முதல் நாள் படப்பிடிப்பில் முகத்தில் கிராபிக்ஸுக்காக மார்க் எல்லாம் வைத்தார்கள். ஆனால், அதன் பின்பு நானே அந்த வயதுக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறேன் என்று சொல்லி விட்டுவிட்டார்கள்.

இதன் படப்பிடிப்புக்கு முன்பேயே அனைத்து விஷயங்களையும் பேசி முடிவு செய்துவிட்டோம். ஆகையால் அனைத்து காட்சிகளுமே ஒரு டேக், 2 டேக்தான். சுதாவும் ரொம்பவே உணர்ச்சிமிக்க இயக்குநர். அவர் கண்களில் கண்ணீர் வரும்போதுதான் சில காட்சிகள் ஓகே ஆகும்.

இந்தப் படத்தில் மொத்தம் 96 கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள். ஒரு வசனம் பேசக் கூடிய கதாபாத்திரமாக இருந்தாலும், அவர்களை அலுவலகத்துக்கு வரவழைத்து ஸ்கிரீன் டெஸ்ட் செய்துள்ளார் சுதா.

க்ளைமேக்ஸுக்கு முந்தைய காட்சியில் ஒரு டிரைவர் வசனம் பேசி நடிக்க வேண்டிய காட்சி இருந்தது. அந்த டிரைவரைகூட ஒரு நடிகராக, ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக பார்க்க முடியவில்லை. அவர் பேசிய வசனம் படத்தை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தியது மாதிரி இருந்தது. அந்தளவுக்கு ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் மெனக்கிட்டுள்ளார் சுதா.

இதுவரை யாருமே விமானப்படை தளத்தில் போய் படப்பிடிப்பு செய்தது கிடையாது. பழுதடைந்த ஓடாத விமானத்தில்தான் படப்பிடிப்பு செய்திருப்பார்கள். ஆனால், நாங்கள் நிஜமான பயணிகள் விமானம், ஜெட் விமானங்களில் எல்லாம் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். பாலிவுட்டில் முக்கியமான தயாரிப்பாளர்களுக்குகூட அதற்கு அனுமதி கிடைக்கவில்லை.  ஆனால், எங்களுக்குக் கிடைத்தது.

அந்த அனுமதி என்பது ஒரு பெரிய நடைமுறை. படத்தைப் பார்த்துவிட்டு அவர்கள் எதுவுமே சொல்லவில்லை. ஒவ்வொரு அலுவலகத்திலும் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லி, இறுதியில் சான்றிதழ் கிடைத்தது. என்னுடைய தனிப்பட்ட கருத்துகளுக்கும், படத்தின் சான்றிதழ் தாமத்துக்கும் சம்பந்தமில்லை.

புகழுக்காகவோ, நாமளும் இந்தத் துறையில் இருக்கிறோம் என்பதற்காக நான் எப்போதும் சினிமாவில் நடிக்க மாட்டேன். தயாரிக்க மாட்டேன். நாம் எடுக்கின்ற ஒவ்வொரு படமும் திரையுலகத்திலோ அல்லது மக்களிடையோ ஏதாவது ஒரு  தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்… இதுவே எனது கொள்கை..” என்று சொல்லி முடித்தார் நடிகர் சூர்யா.

Our Score