2-டி எண்டர்டெய்ண்ட்மெண்ட் மற்றும் பசங்க புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து விரைவில் வெளிவரவிருக்கும் ‘பசங்க-2’ திரைப்படத்தை பற்றி நடிகரும், படத்தின் தயாரிப்பாளருமான சூர்யா பேசுகிறார்.
“2-டி எண்டர்டெயிண்ட்மெண்ட் என்றால் தியா, தேவ் என் குழந்தைகள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவர்களின் பெயரில் துவங்கப்பட்ட இந்த தயாரிப்பு நிறுவனத்தின் நோக்கம் கல்வி மற்றும் குழந்தைகள் சம்மந்தப்பட்ட அல்லது அவர்களுக்கு பயனளிக்கக் கூடிய திரைப்படங்களை தயாரித்து வெளிக்கொண்டு வருவதுதான்.
அதன் காரணமாக ஆரம்பத்தில் இருந்தே புதிய இயக்குநராக இருந்தாலும், நல்ல கதைகளை தயாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் துவங்கப்பட்டது. அதற்க்காக சுமார் ஐம்பது, அறுபது கதைகள்வரையிலும் கேட்டோம்.
ஆனால் கதைகள் சரியாக அமையாத காரணத்தால் மேற்கொண்டு எந்த முயற்சியும் எடுக்காமல் அமைதி காத்து வந்தோம். அப்போது இயக்குநர் பாண்டிராஜ் என்னை சந்தித்து இந்தக் கதையை சொல்லி ‘இந்த மாதிரியான ஒரு கதையம்சம் கொண்ட திரைப்படம் உங்கள் நிறுவனம் வாயிலாக மக்களை சென்றடைவது பெருமைக்குரிய ஒன்றாக இருக்கும்…’ என்றார்.
இது இயக்குநர் பாண்டிராஜின் துவக்கம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தப் படம் என் மூலம் வெளிவருவதற்கு, அதற்கு நான் என் முதல் நன்றியை இங்கு பதிவு செய்து கொள்கிறேன்.
இயக்குநர் பாண்டிராஜ், இரண்டு வருடங்கள் குழந்தைகள் பற்றி ஆய்வு செய்து மற்றும் குழ்ந்தைகளுடன் ஒன்றிணைந்து பல காட்சிகளை வடிவமைத்து அதை எங்களிடம் காண்பித்து.. ‘இது போல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் உங்கள் மூலமாக வர வேண்டும்’ என்று கூறியதின் பலன்தான் இந்த ‘பசங்க-2’ திரைப்படம்.
மழலைகள் என்றாலே அழகுதான். மழலைகளின் பேச்சில் இருந்து அவர்களின் உலகம்வரை எல்லாமே அழகு என்றுதான் சொல்ல வேண்டும். அவை அனைத்து நாம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றும்கூட. குழந்தைகளின் உலகம் கால நிலைக்கு ஏற்றார் போல மாறுபவை.
எடுத்துக்காட்டாக என்னுடைய சிறுவயதில் நான் அனுபவித்த தருணங்கள் வேறு.. இப்போது இருக்கும் குழந்தைகள் அல்லது இன்னும் ஐந்து வருடத்திற்கு பின் வருங்கால சந்ததியினராக இருந்தாலும் சரி, அவர்களின் உலகம் வேறு. அதே போல் நகரங்களில் வாழும் குழந்தைக்கும் மற்றும் கிராமங்களில் வாழும் குழந்தைக்கும் உள்ள உலகங்கள் வேறு. அவை அனைத்தும் நாம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அவர்கள் கற்றுக்கொள்ளக் கூடியவைகள் நிறைய உள்ளன.
அதனால் இந்தப் படத்தை பார்க்க வரும் குடும்பத்தினர் பார்த்துவிட்டு வீட்டிற்கு போகும்போது ஒரு நல்ல அறிவுரையை எடுத்துச் செல்வார்கள். இதில் நான் மிகவும் சாதாரணமாக நடித்துள்ளேன். இது முழுக்க, முழுக்க குழந்தைகளுக்கான திரைப்படம். இது தவிர, படம் பார்க்க வரும் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ஒரு அறிவுரையைக் கேட்டுவிட்டு செல்வார்கள் என்று நம்புகிறேன்..” என்கிறார் நெகிழ்ச்சியோடு.