full screen background image

“நடிப்பு கற்று கொடுத்தவர் இளைய தளபதி விஜய்” – சொல்கிறார் களம் கதாநாயகன் ஸ்ரீனி.

“நடிப்பு கற்று கொடுத்தவர் இளைய தளபதி விஜய்” – சொல்கிறார் களம் கதாநாயகன் ஸ்ரீனி.

“ஆயிரம் மைல் தூர பயணத்திற்கு விதையாக அமைவது முதல் அடிதான்” என்ற பழமொழிக்கேற்ப, வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீனி.

அதனை தொடர்ந்து  ‘மதராசப்பட்டினம்’,  ‘வேலூர் மாவட்டம்’, ‘தாண்டவம்’ மற்றும் ‘தலைவா’  திரைப்படங்களில் தன் நிலையான கதாப்பாத்திரங்களால் மக்களின் நெஞ்சங்களில் பதிந்த இவர், தற்போது களம்  திரைப்படம் மூலம் கதாநாயகனாக உருவெடுத்துள்ளார்.

DSC_0348

மேலும், சினிமாவின் மீது எல்லையற்ற காதல் கொண்ட ஸ்ரீனி, புகழ்மிக்க இயக்குநர்களான P.வாசு, ஜான் மகேந்திரன் (சச்சின்) மற்றும் மறைந்த ‘தாம் தூம்’  புகழ் இயக்குநர் ஜீவா ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

“இணை இயக்குநராக நான் வாய்ப்பு தேடி சென்றபோதுதான் என்னை நடிப்பதற்கு தேர்வு செய்தனர். அப்படித்தான் நான் ‘வெண்ணிலா கபடி குழு’  திரைப்படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானேன். ஏற்கனவே நான் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அனுபவங்கள் நடிப்பிலும் எனக்குக் கை கொடுத்து உதவியது.

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் கண்டிப்பாக ஒரு கட்டத்தில் யூ டர்ன் ஏற்படும். அப்படி என்னுடைய வாழ்க்கையில் எனக்கு மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது  ‘தலைவா’  திரைப்படம்.  

‘நடிப்பு’ என்னும் வார்த்தைக்கு முழு அர்த்தத்தை எனக்கு கற்று கொடுத்தது இளைய தளபதி விஜய் சார்தான். நான் சிறு வயதில் இருந்தே அவருக்கு தீவிர ரசிகன். ‘தலைவா’ படப்பிடிப்பில் அவரை நெருக்கத்தில் பார்த்த பிறகுதான் அவர் இந்த உச்சத்துக்கு வர காரணம் என்ன என்பதை உணர்ந்துக் கொண்டேன்.

DSC_0630

எந்த வேலை செய்தாலும் அதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதின் பாலபாடத்தை கற்றுக் கொண்ட தருணம் இது.  விஜய்  சார்  படித்த அதே லயோலா கல்லூரியில்தான் நானும் படித்தேன் என்பதையே பெருமையாக சொல்லி திரிந்த நான், அவருடன் நடிக்கும்போது எப்படி பெருமைப்பட்டிருப்பேன் தெரியுமா..?  நல்ல நடிகன் என்று பெயர் வாங்கி அவருக்கு பெருமை சேர்ப்பேன்…” என்று நெஞ்சம் நெகிழ்ந்து கூறுகிறார் ஸ்ரீனி. 

‘களம்’ படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி அவர் கூறுகையில், “களம்’ திரைப்படத்தின் கதை கேட்ட அடுத்த நொடியே இதில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். அந்த அளவிற்கு இந்த படத்தின் கதையம்சம் சக்தி வாய்ந்ததாக இருந்தது. மேலும் என்னுடைய கதாப்பாத்திரம் நம்பகத்தன்மையாக  அமைய வேண்டும் என்பதற்காக நானும்  யதார்த்தமாகதான்  நடிக்க வேண்டும்  என்று கூறினார், நானும் அவ்வாறே செய்தேன். அதன் பலனை படத்தின் பிரத்தியேகக் காட்சியில் படம் பார்த்தவர்கள்  பார்த்து  பாராட்டும்போது அடைந்து விட்டேன்” என்றார்.

ஒரு திகில் படத்தின் கதாநாயகன் நிஜ வாழ்க்கையில் பேய்களுக்கு பயந்தவர் என்பது யாரும் அறியாத உண்மை. “படத்தில் அகோரி வேடத்தில் நடிக்கும் நான்,  என் வாழ்நாளில் இதுவரை ஒரு பேய் படங்களைகூட தனியே அமர்ந்து பார்த்ததில்லை; ஆனால் ‘களம்’ படத்தில் நடித்த பிறகு அந்த பயம் சற்று மறைந்துள்ளது” என்று புன்னகையுடன் கூறுகிறார்.

“களம் திரைப்படம் மூலம் வளர்ந்து வரும் திறமையாளர்களான  கதை ஆசிரியர்  சுபிஷ் சந்திரன், இயக்குநர் ராபர்ட் ராஜ்,  ஒளிப்பதிவாளர் முகேஷ் மற்றும் இசையமைப்பாளர் பிரகாஷ் நிக்கி ஆகியோருடன்  கை கோர்த்தது எனக்கு  புது நம்பிக்கையையும், உற்சாகத்தையும் தருகிறது.

படத்தின் சிறப்பு காட்சி, பிரபலங்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்று இருப்பதை நினைக்கும்  பொழுது எல்லையற்ற மகிழ்ச்சி கொள்கிறேன். இதற்கு அஸ்திவாரமாக இருந்த எஸ்கேப் ஆர்டிஸ்ட் ஸ்டுடியோஸ் மதன் சார் அவர்களுக்கு எங்கள் களம் திரைப்பட குழு சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்” என்றார் ஸ்ரீனி.

மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை உருவாக்கியிருக்கும் இந்த திகில் திரைப்படம் வரும் ஏப்ரல் 29-ம் தேதி வெளியாகிறது.    

Our Score