நடிப்புக் கலையில் அசகாய சூரர்கள் என்று நான் மதித்துப் போற்றுபவர்கள் தமிழ்ச் சினிமாவில் ‘நடிகர் திலகம்’ சிவாஜியும், ‘உலக நாயகன்’ கமலும்தான். அவர்கள் செய்த ‘வெரைட்டி ரோல்களை’ இதுவரை வேறு யாரும் செய்ய முடியவில்லை.
சிவாஜி நடித்த சரித்திர, சமூக, புராண வேடங்களை யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவு அவர் செய்து விட்டார்.
கமல், நீங்கள் நடிப்பதோடு நில்லாமல், தேர்ந்த பரதக் கலைஞர், நடனக் கலையில் வல்லவர், பாடகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர்..!
‘டூப்’ போடாமல் ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ படத்தில் சிங்கத்தோடு மோதியவர் நீங்கள்..!
‘மீண்டும் ஒரு சூர்யோதயம்’ படத்தில் ரன்வே ரோட்டில் பாய்ந்து ஓடிய குதிரை சறுக்கி கீழே விழ, 20 அடி தூரம் குதிரையின் அடியில் உங்கள் கால் மாட்டி எலும்பு நொறுங்க நடித்தவர் நீங்கள்.
1973-ல் ‘அரங்கேற்றம்’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ என்று துவங்கி ‘தங்கத்திலே வைரம்’, ‘மேல்நாட்டு மருமகள்’ என 8 படங்களில் நாம் இருவரும் சேர்ந்து நடித்தோம். நான் கதாநாயகன், கமல், நீங்கள் பெரும்பாலும் வில்லனாக நடித்தீர்கள்..!
வில்லன் வேடங்களில் நடித்து பெரிய ஹீரோவாக எங்கள் தலைமுறையில் உயர்ந்த முதல் நடிகர் நீங்கள்தான் கமல்..!
‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்பது போல உங்களுக்குள் இருந்த ‘பொறி’யை கண்டவன் நான்.
அந்தச் செடி வளர்ந்து இன்று விருட்சமாகி ‘நாயகன்’,’குணா’, ‘அன்பே சிவம்’, ‘அவ்வை சண்முகி’, ‘ஹே ராம் ‘ என்று நடிப்பின் இமயத்தைத் தொட்டுள்ளது.
நடிப்பில் இனி சாதிக்க உங்களுக்கு எதுவும் மிச்சம் இருப்பதாகத் தெரியவில்லை. அரசியல் களம் உங்களுக்காக காத்திருக்கிறது.
அமெரிக்கா கொண்டாடிய ஆப்ரஹாம் லிங்கனே, இரண்டு முறை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த பின்னரே அதிபரானார்.
திரையில் சாதித்ததை உங்களால், அரசியலிலும் சாதிக்க முடியும்.. துணிந்து இறங்குங்கள்..!
நூறாண்டு நீவிர் வாழ்க…!!!