ஸ்ரீசிவகுமார் கல்வி அறக்கட்டளையும் அகரம் பவுண்டேஷனும் இணைந்து 35-வது ஆண்டு கல்வி உதவி தொகை பரிசளிப்பு விழாவை சென்னையில் நடத்தின.
நிகழ்ச்சியில் சிரமப்பட்டு கல்வி பயிலும் 25 மாணவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் என இரண்டரை லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. அத்தோடு கூடவே திண்டிவனம் ‘தாய்த் தமிழ்ப் பள்ளி’க்கு ஒரு லட்சமும் ‘வாழை’ அமைப்புக்கு இரண்டு லட்சமும் நன்கொடையாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவக்குமார், “தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர வேண்டும். தமிழ் மொழியைக் காக்க உடனடியாக சட்டம் கொண்டு வர வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.
அவருடைய உரை :
“இங்கு வந்திருக்கும் பல மாணவர்கள் வறுமைச் சூழலிலிருந்து வந்தவர்கள். அவர்களின் கதைகளைக் கேட்டு வருத்தமாக இருந்தது. என கதையைக் கேட்டால் உங்களுக்கும் வருத்தமாக இருக்கும்.
நான் பிறந்த பத்து மாதத்தில் அப்பா இறந்து விட்டார். எனக்கு நாலு வயதாக இருக்கும்போது எனது 14 வயது அண்ணன் ஒரே நாளில் பிளேக் காய்ச்சலில் இறந்து விட்டான். 1945—46-ல் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடியது. ராகிக்கே கஷ்டம். பொங்கல், தீபாவளிக்குத்தான் அரிசிச் சோறு என்கிற நிலை. தைப்பொங்கலுக்குத்தான் அரிசி சாதம் கிடைக்கும். நான் ஐந்தாம் வகுப்பு படித்தபோது ‘தைப் பொங்கல் அரிசிச் சோறு போட முடியாத நீ என்னை ஏன் பெத்தே..?’என்று என் அம்மாவிடம் கேட்டேன்.
வயலுக்கு அம்மா காலை 6 மணிக்குப் போய் மாலை 6 மணிக்கு வருவார். கழனியில் கஷ்டப்படுவார். 5 குழந்தைகள் இறந்த பின்பு தங்கிய ஒரே ஆண்குழந்தை நான்தான். பிடி அரிசி ஒளித்து வைத்து ஆக்கிய அந்த சோற்றைத்தான் ஸ்கூலுக்கு போகும்போது எனக்குக் கொடுத்தனுப்புவார். சனி ஞாயிறு அதுவும் இருக்காது..! வறுமைச் சூழலால் அக்கா, தங்கையைப் படிக்க வைக்க முடியவில்லை.
இப்போது தீபாவளி, பொங்கல் டிரஸ் எடுப்பது பற்றிப் பேசுகிறோம். எனக்கு சிரிப்பாக வரும். அப்போது இப்படி எடுக்க மாட்டார்கள். சட்டை கிழிந்தால்தான் அடுத்த சட்டை வரும். அப்போது எஸ்.எஸ்.எல்.சிக்கு கட்டணம் ஐந்தே கால் ரூபாய் அது கட்டவே சிரமப்பட்டேன். தேர்வுக் கட்டணமாக 11 ரூபாய் 50 காசை கேட்டபோது அம்மா கோபித்துக் கொண்டார்.
நான் பள்ளியில் படிக்கும்போது க்ரூப் போட்டோ எடுக்க 5 ரூபாயை என்னால் கொடுக்க முடியவில்லை. அதனால் நான் அன்றைக்கு எனது பள்ளித் தோழர்களுடன் இணைந்து புகைப்படம் எடுக்க முடியவில்லை.
192 படங்கள் 175 படங்கள் கதாநாயகன் என்று நடித்ததை கணக்கிட்டால் என் முகம் 4 கோடி ப்ரேமில் இருக்கிறது. ஆனால் அந்த 5 ரூபாய் இல்லாமல் பள்ளியில் க்ரூப் போட்டோ எடுக்க முடியவில்லை.
அப்போது 1957-ல் எடுக்க முடியாத படத்தை 50 வருஷம் கழித்து விஜய் டிவி மூலம் எடுத்தபோது என்கூட படித்த பலர் பாட்டியாகி விட்டனர். எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த இளம் வயது படத்தை இப்போது எடுக்க முடியுமா…? தமிழ் மக்கள் ஏழரை கோடி பேரில் குறைந்தது 3 கோடி பேர் இப்படி வறுமையில்தான் இருக்கிறார்கள்.
படிப்பு அவசியம். படித்து விட்டால் உலகின் எந்த சூழலிலும் பிழைத்துக் கொள்ளாம் எங்கு சென்றாலும் தமிழை மறக்கக் கூடாதுதான். தமிழ் அம்மா போன்றது. ஆங்கிலம் ஆசை மனைவி போன்றது. காதல் மனைவி போன்றது. ஆங்கிலமும் கற்றுக் கொள்ள வேண்டும். நல்ல மொழியோ கெட்ட மொழியோ. ஆங்கிலம் உலகத் தொடர்பு மொழியாக இருக்கிறது. இதெல்லாம் புறவெளி.
அகவெளி இன்பம் காண தமிழ்தான் உதவும். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று 2500 ஆண்டுகளுக்கு முன்பே கூறியவன் தமிழன். ‘செல்வத்துப் பயன் ஈதல்’ என்றவன் தமிழன். எவ்வளவு உயர்ந்தாலும் அடுத்தவருக்கு உதவுங்கள் என்றவன் தமிழன். ஆனால் இவ்வளவு வளமுள்ள தமிழ் இன்று சாகும் நிலையில் உள்ளது.
தமிழ்நாட்டில் தமிழே படிக்காமல் பி.எச்.டி. வாங்க முடியும். இதேபோல தெலுங்கு படிக்காமல் ஆந்திராவில் இருக்க முடியுமா…? கன்னடம் படிக்காமல் கர்நாடகாவில் இருக்க முடியுமா..? மலையாளம் படிக்காமல் கேரளாவில் இருக்க முடியுமா..? இந்தக் கேவலம் உலகில் எங்கும் இல்லை. தாய் மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டாமா..? தமிழ் மொழிப் பாடம் படிக்க வேண்டும் என்றால் நீதிமன்றம் சென்று தடை வாங்குகிறார்கள். இப்படியே போனால்.. மெல்லத் தமிழினி சாகாது… உடனே சாகும்.
அரசுக்கு ஒரு வேண்டுகோள். தமிழ்ப் பாடம் கட்டாயமாக்க உடனே சட்டம் கொண்டு வாருங்கள்… இது ஒன்றுதான் தமிழைக் காக்கும்..”
இவ்வாறு சிவகுமார் பேசினார்.