தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘அயலான்’, ‘டான்’ ஆகியப் படங்களில் நடித்து முடித்துள்ளார். இவர் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா தனக்கு சம்பள பாக்கியான 4 கோடி ரூபாயைத் தர வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில், சிவகார்த்திகேயனின் நடிப்பில், இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ‘மிஸ்டர் லோக்கல்’ திரைப்படம் வெளியானது. படம் சுமாராக ஓடியது.

இந்த ‘மிஸ்டர் லோக்கல்’ படத்திற்கு பேசப்பட்ட 15 கோடி ரூபாய் சம்பளத்தில் 11 கோடியை மட்டுமே தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தனக்குத் தந்துள்ளதாகவும், மீதமுள்ள 4 கோடியைத் தரக் கோரியும், அதற்கான டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறையில் செலுத்த உத்தரவிடக் கோரியும் நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கேட்கப்பட்டுள்ளது.
அதோடு சம்பளப் பாக்கியை செலுத்தும்வரை தயாரிப்பாளர் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கும் படங்களில் அவர் முதலீடு செய்யத் தடை செய்ய வேண்டும் எனவும் ஞானவேல்ராஜாவின் படங்களுக்கான தியேட்டர், ஓடிடி வெளியீடு உரிமைகளை விற்பனை செய்யவும் தடை வேண்டும் எனவும் சிவகார்த்திகேயன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“சிவகார்த்திகேயன் தரப்பில் தொடரப்பட்ட இந்த வழக்கு நாளை மறுநாள் விசாரிக்கப்படும்” என உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர் தெரிவித்துள்ளார்.