ஒரு நாயகரை அறிமுகம் செய்வது என்பது வேறு, ஒரு நடிகரை உருவாக்குவது என்பது வேறு.. அந்த வகையில் இயக்குனர் பாலா நடிகர்களை உருவாக்குவதில் முன்னோடி என்றே சொல்லலாம்..
அவர் உருவாக்கிய நடிகர்கள் வெறுமனே நடிகர்கள் என்ற அடைமொழியை தாண்டி கதாப்பாத்திரங்களாகவே மாறும் தன்மையை கொண்டு இருப்பார்கள்.
சியான் விக்ரம் , சூர்யா, அதரவா, ஆர்யா, விஷால் என்று நீளும் இந்தப் பட்டியலில் ‘தாரை தப்பட்டை’ படத்தில் வில்லனாக அறிமுகமாகி, தற்போது வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘மருது’ படத்தில் வில்லனாக நடித்து கலக்கியிருக்கும் ஆர்.கே.சுரேஷும் இணைகிறார்.
குறைந்த காலக்கட்டத்தில் சிறந்த தயாரிப்பு நிறுவனம் என்று தனது நிறுவனமான ஸ்டுடியோ 9 நிறுவனத்துக்கு பெயர் ஈட்டி தந்த சுரேஷ்… நடிப்பின் மேல் உள்ள தனது காதலால், இன்று எல்லோரும் மெச்சும் ஒரு சிறந்த வில்லனாக உருவெடுத்திருக்கிறார்.
நம்பியார், வீரப்பன் முதல் ரகுவரன், பிரகாஷ்ராஜ் வரை திறமையுள்ள வில்லன் நடிகர்களை வரவேற்கும் தமிழ் திரைப்பட உலகம், இவருக்கும் தாரை தப்பட்டையுடன் இரத்தின கம்பள வரவேற்பு கொடுத்திருக்கிறது.
சமீபமாக நமது நேட்டிவிட்டிக்கு பொருந்தாத வட இந்திய வில்லன்களை பார்த்து சலித்து வரும் தமிழ் ரசிகர்கள், ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தும் தனக்குக் கொடுக்கும் வரவேற்பை கண்டு நெகிழ்ந்து போய் இருக்கிறார் சுரேஷ்.
“எனக்கு கிடைத்திருக்கும் இந்த வரவேற்பு எனக்கு உற்சாகம் தந்த அளவுக்கு பொறுப்பையும் கொடுத்திருக்கிறது என்றுதான் சொல்வேன். இந்த அந்தஸ்து எனக்கு ஒரு நாளில் வந்தது இல்லை. கடினமான உழைப்பும், தீராத நடிப்பு பசியும்தான் காரணம் என்பேன். நான் ஒரு இயக்குநரின் நடிகனாகத்தான் இருக்க விரும்புகிறேன். எனக்கு ஒரு நடிகனாக முகவரி தந்த பாலா சாருக்கு என் ஸவாழ்நாள் முழுக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்..” என்று தன முறுக்கு மீசையை தடவியபடியே கூறுகிறார் ஆர் கே சுரேஷ்.