full screen background image

வெற்றி மாறன் படத்துக்காக தாடி வளர்த்து வரும் நடிகர் கருணாஸ்..!

வெற்றி மாறன் படத்துக்காக தாடி வளர்த்து வரும் நடிகர் கருணாஸ்..!

எழுத்தாளர் பாரதி நாதன் எழுதிய ‘தறியுடன்’ என்ற நாவலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘சங்கத் தலைவன்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 26-ம் தேதி திரைக்கு வருகிறது.

சமுத்திரக்கனி, கருணாஸ், ரம்யா சுப்ரமணியன், சுனு லட்சுமி ஆகியோர் நடித்துள்ள இப்படத்தினை மணிமாறன் இயக்கியுள்ளார். இவர், இயக்குநர் வெற்றிமாறன் பட்டறை படைப்பாளி. இருவரும் சிறு வயது முதல் நண்பர்களும்கூட.

இப்படத்தினை உதய் புரடெக்‌ஷன் நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் வெற்றிமாறன் வெளியிடுகிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் கருணாஸ் பேசும்போது, “இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் மணிமாறன் அவர்களுக்கு நன்றி. இப்படியான படத்தை தயாரித்த வெற்றிக்கும் நன்றி.

‘அசுரனில்’ என் மகனுக்கு வெற்றிமாறன் மூலமாக எப்படி ஒரு பெயர் கிடைத்ததோ.. அதேபோல் எனக்கு இந்தப் படத்தின் மூலமாக ஒரு வாய்ப்பை வெற்றிமாறன் தன் தயாரிப்பில் கொடுத்திருக்கிறார்.

இந்தக் கதையை எழுதிய பாரதிநாதன் சாருக்கு நன்றி. பொல்லாதவன்’ படத்தில் இருந்தே வெற்றிமாறனைப் பார்த்து வருகிறேன். அதேபோல் வெற்றிமாறனும், மணிமாறனும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இரண்டு பேரும் சண்டை போடுவார்கள். ஆனாலும் நட்பைப் பேணி வருகிறார்கள். இப்படியான நண்பர்களோடு இணைந்து வேலை செய்தது பெருமையாக இருக்கிறது.

படத்தில் என் மாப்பிள்ளை சமுத்திரக்கனி மிக சிறப்பாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் நடித்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

இப்போது நான் எங்கே போனாலும் “ஏன் ஸார் தாடியை இவ்ளோவுக்கு வளர்த்து வைச்சிருக்கீங்க. ஏதாவது கோவிலுக்கு வேண்டுதலா…?” என்று கேட்கிறார்கள். இதை ஒரு பெரிய ஹீரோவிடம் போய் கேட்டால் நியாயம் உண்டு. என்னிடம் கேட்பதால் என்ன புண்ணியம்..?

இந்தக் கொரோனா காலத்தில் எல்லார் மாதிரியும் நானும் தாடி அப்படியே இருக்கட்டும். வீட்லதான இருக்கோம் என்று சொல்லி விட்டுவி்ட்டேன். அது இப்போது இப்படி வளர்ந்துவிட்டது.

சரி.. தாடியை எடுத்துவிடலாம் என்று நினைத்து அதற்கு முன்னதாக இந்தத் தாடியை வைத்து ஏதாவது சினிமாவில் வேஷம் கிடைக்க வாய்ப்புண்டா என்பதற்காக இயக்குநர் வெற்றி மாறனிடம் போனில் கேட்டேன். “தாடியை எடுத்திரவா ஸார்…?” என்றேன். அவரும் “இ்ப்போதைக்கு என்கிட்ட கதையே இல்லை. யோசிச்சு சொல்றேன்” என்று சொல்லியிருக்கிறார்.

எப்படியும் எனக்கு இந்தத் தாடியோடு நடிப்பதற்கு ஒரு வாய்ப்பு தருவார் என்று நம்புகிறேன். அதுவரையிலும் நான் இந்தத் தாடியோடு காத்திருப்பேன்..” என்று கலகலப்பாக பேசி முடித்தார் நடிகர் கருணாஸ்.

Our Score