ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரித்த திரைப்படம் ‘சுல்தான்’.
இந்தப் படத்தில் கார்த்தியும், ராஷ்மிகா மந்தனாவும் நடித்திருந்தனர். இந்தப் படம் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி வெளியானது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் பரபரப்புக்கிடையிலும் திரையரங்குகளில் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இப்படம் வெற்றி பெற்றதற்காக நன்றி கூறும் விழா இன்று மதியம் சென்னையில் கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த விழாவில், நாயகன் கார்த்தி, நடிகர்கள் பொன்வண்ணன், மயில்சாமி, லால், அர்ஜித், காமராஜ், படத் தொகுப்பாளர் ரூபன், இசையமைப்பாளர்கள் விவேக் – மெர்வின், இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் நாயகன் கார்த்தி பேசும்போது, “இப்படத்தைப் பார்த்து வாழ்த்தியவர்களுக்கு மிக்க நன்றி. இப்படத்தின் கதையைக் கேட்கும்போது நான் 10 வயது சிறுவனாக உணர்ந்தேன். நான் என்ன சொன்னாலும் கேட்பதற்கு 8 அடியில் கடா மாதிரி ஒரு பாத்திரம். அதேபோல், குள்ளமாக ஒரு பாதுகாவலர். இதுபோக, 100 அடியாள்கள். என்னைப் பாதுகாப்பதுதான் அவர்களின் வேலை. எப்போதும் என்னைச் சுற்றியே இருப்பார்கள் என்று கேட்கும்போது கற்பனைக் கதை போலத்தான் தோன்றியது. அனைவரும் அதை விரும்புவோம்.
இப்படத்தின் ஒவ்வொரு பாத்திரங்களும் ஒரு ஓவியம். அதை வடிவமைத்த பெருமை இயக்குநர் பாக்கியராஜ் கண்ணனையே சேரும். “லால் சார் கண்டிப்பாக இப்படத்தில் நடிக்க வேண்டும்…” என்றார் இயக்குநர். அவர் கூறியதைப் போல லால் சார் கதாபாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
மயில்சாமியின் நகைச்சுவையை நான் மிமிக்ரி செய்ய முயற்சி செய்யும் அளவிற்கு அளப்பரியதாக இருக்கும். அதேபோல, யாருக்கு என்ன தேவையோ அதைக் கடன் வாங்கியாவது செய்யக் கூடியவர். எம்.ஜி.ஆரின் குணத்தைப் பின்பற்றி வருகிறார்.
காமராஜ், சென்றாயன் என்று ஒவ்வொருவரும் நன்றாக நடித்திருந்தார்கள். பாடல்களிலும் கதையைக் கூறி யாரையும் எழுந்து போக விடாமல் செய்திருக்கிறார் ரூபன் சார். இசையமைத்த இசையமைப்பாளர்களுக்கும் நன்றி.
இப்படத்தைப் பார்க்கத் திரையரங்கிற்குக் குடும்பத்துடன் வந்து செல்கிறார்கள். குழந்தைகள் ஆரவாரத்துடன் பார்த்து மகிழ்வதாக என்னிடம் தொடர்பு கொண்டு சொல்லும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
மேலும், இப்படம் திரையரங்கிற்கான படம், அதற்காக 3 வருடங்கள் பொறுமையாக இருந்து வெளியிட்ட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிற்கு நன்றி. ஓடிடியில் இப்படத்தை வெளியிட்டிருந்தால் இந்த அளவு பாராட்டுகள் வந்திருக்காது. அதேபோல், பாதுகாப்போடு ஒரு திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையும் மக்களிடத்தில் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது…” என்றார்.
நடிகர் பொன்வண்ணன் பேசும்போது, “சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட ஊரடங்கு தொடங்கியது. இப்படமும் ஒரு வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்டது. அந்த ஊரடங்கின் முக்கிய நோக்கம் அனைவரும் ஒன்றிணையக் கூடாது என்பதுதான்.
தனியாகச் செய்யும் சில தொழில்கள் தங்களை தக்க வைத்துக் கொண்டது. அதில் ஒன்று விவசாயம்.கூட்டு முயற்சியாக உருவாகும் சினிமா பெரிதும் பாதிக்கப்பட்டது.
நடிகர் கார்த்தியுடன் அவர் நடித்த முதல் படத்தில் ஒன்றரை வருடம் காலம் நாங்கள் இருவரும் இணைந்து பயணித்திருக்கிறோம். அதன் பிறகு, நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்த ‘சுல்தான்’ படத்தில்தான் இருவரும் பணியாற்றினோம்.
அதற்கிடையில், அவர் பல நிலைகளில் நடித்து முன்னேறிக் கொண்டிருக்கிறார். ஆனால், கார்த்தியிடம் முதல் படத்திற்கும், ‘சுல்தான்’ படத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. சில பொறுப்புகள் கூடியிருப்பதை மட்டும்தான் பார்த்தேன்.
கார்த்தியைப் பற்றி கூறுவதற்கான உற்ற நேரமும், ஏற்ற சூழலும் இது என்பதால்தான் கூறுகிறேன். ஒரு ஓட்டல் தொழில் என்றால் சிறிது காலத்தில் அதை நன்றாக வளர்த்து, சில வருடங்களில் உலகம் முழுவதும்கூட கிளைகளைப் பரப்பி வளர்ச்சியடையலாம். அந்தத் தொழிலைப் பார்த்துக் கொள்ள உறவினர்களையும், மேலாளர்களையும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் நடிகர்கள் அப்ப்டிச் செய்ய முடியாது. எவ்வளவு வருடங்கள் ஆனாலும் அவர்களே நடிக்க வேண்டும்.
ரஜினி சார் என்றாலும் ஒவ்வொரு படத்தையும் முதலில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். முதல் படத்தில் செய்த பணியை ஒவ்வொரு படத்திலும் செய்தாகத்தான் வேண்டும்.கார்த்தியும் அப்படித்தான். சில நேரம் துணை நடிகர்கள் நடித்துக் கொண்டிருக்கும்போது கூடவே நின்று கொண்டிருக்கவேண்டும். அதையும் செய்வார் கார்த்தி.
இந்தக் கொரோனா பெருந்தொற்றால் இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டிருந்தாலும் பிடிவாதமாக திரையரங்கில் வெளியிட காத்திருந்தமைக்கு நன்றி…” என்றார்.
நடிகர் மயில்சாமி பேசும்போது, “என்னால் மறக்க முடியாத படம் ‘சுல்தான்’. ஆனால், நான் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக நின்றதால், இப்படம் வெளியானதில் கவனம் சிறிது குறைந்துவிட்டது.
மறக்க முடியாத படம் என்று கூறியதற்குக் காரணம், இப்படம் தொடங்கி முடிவதற்குள் என் இரண்டு பிள்ளைகளுக்கு திருமணத்தை முடித்து விட்டேன். இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு என்று அழைக்கக் கூடாது. மகா பிரபு என்றுதான் அழைக்க வேண்டும். என் இரண்டு பிள்ளைகளின் திருமண சமயத்திலும் பெரும் பொருளாதார உதவிகளைச் செய்தவர் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.
இப்படத்தில் நான் இருக்கிறேனா? நான் நடித்த காட்சிகள் வருமா? என்று கேட்டேன். எல்லாம் இருக்கிறது, வரும் என்று கூறினார் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன். விவசாயம் சார்ந்த படத்தில் நடித்ததற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
மேலும், இப்படத்தின் படப்பிடிப்பில் ஒரு நாளைக்கு குறைந்தது 400 பேருக்கு சாப்பாடு கொடுத்து பார்த்துக் கொள்வது மிகவும் சிரமம். அதைச் சிறப்பாக செய்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிற்கு நன்றி..” என்றார்.
நடிகர் சென்றாயன் பேசும்போது, “திரையரங்கில் கைத்தட்டல் வாங்கி நீண்ட நாள் ஆகின்றது என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். அது ‘சுல்தான்’ படத்தில் நடந்தது. இப்படத்தின் படப்பிடிப்பில் இயக்குநரிடம் “எனக்கு இப்படத்தில் ஏதாவது பஞ்ச் வசனம் கொடுங்கள்..” என்று கேட்டேன். “உனக்கு இப்படத்தில் காது கேட்காது, அதை வைத்து ஒரு பஞ்ச் இருக்கிறது…” என்று கூறினார். கார்த்தி சாரும் “ஆமாம், இருக்கிறது பொறுங்கள்…” என்றார். அதேபோல, நான் நடித்த அந்த காட்சியில் திரையரங்கில் பலத்த கைத்தட்டல்கள் விழுந்தது.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் பிறந்தேன். அங்கு இருக்கும் திரையரங்கில் நான் சிறு வியாபாரி. இப்போது அந்த திரையரங்கில் நான் நடித்த படம் ஓடிக் கொண்டிருக்கிறது. எனது பெற்றோர் பார்த்துவிட்டு “நீ நடித்த காட்சிகளுக்கு எல்லாரும் கை தட்டுறாங்கப்பா..” என்று கூறினார்கள். இதைவிட வேறென்ன சந்தோசம் வேண்டும்…” என்றார்.
படத் தொகுப்பாளர் ரூபன் பேசும்போது, “100 பேரை வைத்துக் கொண்டு ஒரு படத்தைத் தயாரிப்பது சாதாரண விசயமல்ல. அதை பிரமாண்டமாக சிறப்பாகத் தயாரித்திருக்கிறார் எஸ்.ஆர்.பிரபு. மேலும், சிறு படங்கள்கூட ஓடிடியில் வெளியிடும்போது, மீண்டும் திரையரங்கிற்கு வந்து படம் பார்க்கும் கலாச்சாரத்தை கொண்டு வர வேண்டும் என்று பிடிவாதமாக இருந்த எஸ்.ஆர்.பிரபுவிற்கு நன்றி.
அதேபோல, இப்படத்திற்கு கொரோனா பீதியிலும், குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்து படம் பார்த்து செல்கிறார்கள் என்று செய்திகளைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இப்படத்தில் கதாநாயகனின் பெயர் என்ன? அபிமன்யு, சுல்தான், 100 தலை இராவணன், விக்ரம், கிருஷ்ணன், ஓரங்கா என்று ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு பெயர் இருக்கும்.
இதில் எந்தப் பெயர் என்று எனக்கும், இயக்குநருக்கும் நகைச்சுவையான பேச்சுவார்த்தை நடந்துகொண்டே இருக்கும். எங்களுக்கும் மட்டுமல்ல, இப்படத்தை பார்ப்பவர்கள் அனைவருக்குமே இந்த கேள்வி இருக்கும். எனக்கு என் அம்மாவைப் பிடிக்கும். அதுபோல சினிமாவைப் பிடிக்கும். சினிமா நீண்ட காலம் வாழ வேண்டும்,..” என்றார்.
ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் பேசும்போது, “கார்த்தியை இப்போது ‘சுல்தான்’ என்று அழைக்கிறார்கள். அதுபோல, எஸ்.ஆர்.பிரபுவும் சுல்தான்தான். இப்படம் ஆரம்பத்திலிருந்தே பெரிய போராட்டமாகத்தான் இருந்தது. எங்களுக்குச் சவாலாக இருந்தது வெப்ப நிலைதான். காலையில் நாங்கள் எதிர்பார்த்த வெப்பநிலை மாலையில்தான் கிடைக்கும். அவ்வளவு நேரமும் காத்திருந்துதான் எடுப்போம்…” என்றார்.
தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது, “எங்களுக்கு மட்டுமல்ல, எங்கள் துறைக்கும் சிறப்பான படம் ‘சுல்தான்’. திரைத்துறையை மட்டுமே நம்பி இருப்பவர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்கள். நாங்களும் இடையில் ஓடிடிக்கு போகலாம் என்று நினைத்தோம். அதற்கான வாய்ப்பும் இருந்தது. ஆனால், இப்படம் திரையரங்கிற்கான படம் என்பதால் பிடிவாதமாக திரையரங்கிற்கே கொண்டு செல்லலாம் என்று முடிவெடுத்தோம்.
எங்களைப் போலவே படம் எடுத்துவிட்டு வெளியிடக் காத்திருந்தவர்கள், உங்கள் படத்தின் வரவேற்பைப் பார்த்துவிட்டுத்தான் நாங்கள் எங்கள் படங்களை வெளியிடுவோம் என்று கூறினார்கள். அவர்களின் நம்பிக்கைக்காகவும் இப்படத்தை திரையரங்கில் வெளியிட்டோம். இதற்கு கார்த்தி அண்ணாவிற்கும், சூர்யா அண்ணாவிற்கும் நன்றி.
பெரும்பான்மையான விமர்சனங்கள் எங்களுக்கு ஆதரவாக இருந்தது. ஆனாலும், ஒருசில எதிர்மறையான விமர்சனங்களும் இருந்தது. அதைத் தாண்டி, திரையரங்கிற்கு வரும் பார்வையாளர்களை புகைப்படம் எடுத்து அனுப்பி வருகிறார்கள். அதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படத்தில் இறுதிவரை எங்களுக்கு லால் சார் ஆதரவாக இருந்தார். அவருக்கு நன்றி…” என்றார்.
நடிகர் லால் பேசும்போது, “நான் சுலபமாக தமிழில் பேசுவேன். ஆனால், உங்களுக்குப் புரிந்து கொள்ள சிரமமாக இருக்கும். சுல்தான் மாதிரி பிரம்மாண்டமான படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி. இப்படத்தில் சண்டை, நடனம், நடிப்பு, உணர்வுரீதியாக என அனைத்தும் இருக்கும்படியான கதாபாத்திரத்தில் நடித்ததற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்தக் கதாபாத்திரத்தை பிரகாஷ் ராஜ் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. அதைவிட, இப்படத்தில் லால் நன்றாக நடித்திருக்கிறார் என்று செய்தி, வீடியோவில் வந்ததைப் பார்த்தபோது திருப்தியாக இருக்கிறது.
இப்படத்தில் முரட்டுத்தனமாக உடலமைப்பு உள்ளவர்களுக்கு சிறிய அழகான மனசு இருக்கிறது. அதேபோல, சிறிய உடல் கொண்ட பிரபுவிற்கு பெரிய மனது. இதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது…” என்றார்.
இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் பேசும்போது, “இப்படத்தைத் திரையரங்கிற்குக் கொண்டு சென்ற எஸ்.ஆர்.பிரபு ஸாருக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த எங்கள் சுல்தான் கார்த்தி சாருக்கும் நன்றி.
இப்படத்தைப் பார்த்தவர்கள், முதலில் நான் சென்றேன்.. பிறகு எனது குடும்பத்தை அழைத்துச் சென்றேன். எனது பெற்றோர்கள் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்கிறார்கள் என்று என்னைத் தொடர்பு கொண்டு பேசும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இப்படத்தில் எனக்கு அப்பாவாக இருந்தது லால் சார்தான். சுல்தான் என்ன சொன்னாலும் கேட்க வேண்டும் என்று கூறியிருந்தேன். ஆனால், படப்பிடிப்பில் நான் மறந்தாலும்கூட அவர் நினைவு வைத்திருந்து பணியாற்றினார். என் கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நன்றாக நடித்திருப்பார் என்று கூறினார். ஆனால், லால் சார் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.
எங்களுக்கு மிகப் பெரிய ஒத்துழைப்பு தந்த நெப்போலியன் சாருக்கு நன்றி. சுயேட்சையாக தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபை செல்ல வேண்டும் என்று நடிகர் மயில்சாமி அண்ணனை வாழ்த்துகிறேன்.
முதல் பாட்டிலிருந்து இறுதிவரை படம் சிறப்பாக வருவதற்கு இசையமைப்பாளர்கள்தான் காரணம். அவர்களுக்கு நன்றி. இறுதியாக, யுவன் சங்கர் ராஜாவின் இசையில் இருக்கும் அடிப்படை இசையை எடுக்காமல் இசையமைக்க முடியாது…” என்றார்.
இப்படம் ஐந்து நாட்களில் செய்த வசூலில் தயாரிப்பாளரின் பங்காக சுமார் பத்து கோடியை வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.