மலையாள திரையுலகில் இருந்து தமிழ்த் திரைக்கு வரும் நடிகர், நடிகையரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மெகா ஸ்டார் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான், நிவின் பாலி ஆகியோருக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு மற்ற நடிகர்களும் இங்கே படையெடுத்து வர காரணமாகியிருக்கிறது.
இந்த வரிசையில், ‘பூவே பூச்சுட வா’, ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’, ‘காதலுக்கு மரியாதை’, ‘வருஷம் 16’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் பாசிலின் மகனான பஹாத் பாசிலும் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார்.
தனக்கென பொருந்தும் கதாப்பாத்திரம், அது கதையின் போக்கை தீர்மானிக்கும் சிறிய பாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை.. கதாநாயகனாக இல்லாமல் போனாலும் சரி என்று நினைக்கும் வித்தியாச நடிகரான பஹாத் பாசில், மொழி பிரச்சினையையும் தாண்டி தன்னுடைய நடிப்புத் திறமையை தமிழக ரசிகர்களுக்கு வெளிக்காட்ட இருக்கிறார்.
அவர் நடித்த ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ என்ற மலையாளப் படம் சென்னையில் மட்டுமே ஐம்பது நாட்களுக்கு மேல் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதற்கு இதுவே சான்று.
24 AM STUDIOS நிறுவனத்தின் சார்பில் ஆர். டி.ராஜா தயாரிப்பில், இயக்குநர் மோகன் ராஜாவின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் இன்னமும் பெயரிடப்படாத புதிய படத்தில் பஹாத் பாசில் அறிமுகமாகவுள்ளார்.
தனது அறிமுகம் பற்றி பேசிய நடிகர் பஹாத் பாசில், “தமிழ் படங்கள் மீது எனக்கு அலாதி ப்ரியம் உண்டு. அதிலும் ‘தனி ஒருவன்’ படம் பார்த்தபோது நான் என்னையே மறந்து விட்டேன் என சொல்லலாம். நேர்த்தியான இயக்கம், அருமையான காட்சியமைப்பு என்று ஒருங்கிணைக்கப் பெற்ற இயக்குநர் மோகன் ராஜாவின் திறமை, என்னை பொறுத்தவரை ஹாலிவுட் இயக்குநர்களுக்கு நிகரானது எனக் கூறுவேன்.
இப்பொழுது அவர் படத்தின் மூலமாகவே நான் தமிழுக்கு அறிமுகமாவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அதோடு, மிகக் குறுகியக் காலத்தில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சிவகார்த்திகேயன் உடன் நடிப்பது மிக சவாலானதும்கூட. என்னுடைய கதாப்பாத்திரம் தமிழ்த் திரையுலகில் நீங்கா இடம் பிடித்து என் நடிப்பு தொழில், தமிழிலும் நீடிக்க உதவும் என்று நம்புகிறேன்…” என்கிறார் உற்சாகத்தோடு.











