full screen background image

திருமணமானது உண்மைதான்-கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும்-நடிகைக்கு கோர்ட் உத்தரவு

திருமணமானது உண்மைதான்-கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும்-நடிகைக்கு கோர்ட் உத்தரவு

கடந்த 2016-ல் வெளியான பட்டதாரி’ என்கிற படத்தில் நாயகன், நாயகியாக இணைந்து நடித்தவர்கள் அபி சரவணன் மற்றும் அதிதி மேனன்.

பட்டதாரி’ படத்தில் நடித்த போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்கிற தகவலும் வெளியானது.

திருமணம் முடிந்து கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழிந்த நிலையில் அபி சரவணனுக்கும் தனக்கும் திருமணம் நடக்கவில்லை என்றும் ஆனால் போலியான சான்றிதழ்களை வைத்து தன்னை அவர் மிரட்டுகிறார் என்றும் காவல் துறையில் புகார் அளித்தார் மிர்னா மேனன்.

அபி சரவணனுக்கு முன்பே பல பெண்களுடன் தொடர்பு இருந்தது என்றும் அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் அந்த புகாரில் கூறியிருந்தார் மிர்னா மேனன்.

இது குறித்து கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மிர்னா மேனன் மீது குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் அபி சரவணன்.

அந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு உயர்நீதிமன்றத்திற்கு மனு செய்தார் மிர்னா மேனன். தற்போது கடந்த டிசம்பர் 22-ம் தேதியன்று இந்த வழக்கில் தீர்ப்பு கிடைத்துள்ளது.

தற்போது சரவணன், விஜய் விஷ்வா’ என தனது பெயரை மாற்றிக் கொண்டு சில படங்களில் நடித்து வருகிறார். அதேபோல அதிதி மேனன் தற்போது மிர்னா மேனன்’ என தனது பெயரை மாற்றிக் கொண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இது குறித்து நடிகர் அபி சரவணன் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து இந்த வழக்கில் இருக்கும் உண்மைகளை தெரிவித்தார்.

“எனக்கும் மிர்னா மேனனுக்கும் 2016-ல் பட்டதாரி’ படத்தில் நடிக்கும்போது அறிமுகம் ஏற்பட்டது. அப்போது மிர்னாவை எனது வீட்டிற்கு அழைத்துச் சென்று என் பெற்றோரிடம் அறிமுகப்படுத்தினேன். அப்போது நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று என் வீட்டிலும் கூறினார்கள்.

மிர்னா மேனனின்  பெற்றோர் வெளிநாட்டில் இருந்ததால் அவர்களிடம் வீடியோ சேட்டிங்கில் அனுமதியும், வாழ்த்தும் பெற்று 2016-ம் ஆண்டு ஜூன் 9-ம் தேதி மதுரையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். அதன் பின் மதுரையிலும் அதைத் தொடர்ந்து சென்னை வந்த பின்பு தனியாக வீடு எடுத்து ஒரே வீட்டிலும் கடந்த மூன்று வருடமாக ஒன்றாக வாழ்ந்து வந்தோம்.

கடந்த 2018 நவம்பர் மாதம் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக நான் சென்றிருந்த நிலையில், என்னை விட்டு மிர்னா மேனன் விலகிவிட்டார்.

அதன் பின்னர் அது குறித்து விசாரிக்க சென்றபோதுதான், என் மீதும் நான் செய்துவரும் சமூக பணிகள் குறித்தும் அவதூறான குற்றச்சாட்டுகளை என் மீது  சுமத்தினார்.

இரண்டு வருடத்திற்கு முன்பு பத்திரிகையாளர்களை நான் சந்தித்தபோது  எனக்கும் எனது மனைவிக்குமான பிரச்சனையை சட்டபூர்வமாக அணுகி கொண்டிருக்கிறேன் என்றும்  எங்கள் திருமணம் சட்டப்பூர்வமானதா இல்லையா என்பது பற்றி சட்டபூர்வமான விசாரணை போய்க் கொண்டிருக்கிறது என்பதால் அதைப் பற்றி இப்போது பேச விரும்பவில்லை என்றும்  கூறினேன்.

இப்போது அந்த வழக்கில் தீர்ப்பு கிடைத்துள்ள நிலையில் அது குறித்த விபரங்களை உங்களுக்கு தெரியப்படுத்த நான் கடமைப்பட்டுள்ளேன்.

அபி சரவணனுக்கும் எனக்கும் திருமணம் நடக்கவில்லை. நாங்கள் இருவரும் நண்பர்களாகவே பழகி வந்தோம். ஆனால் அவர் போலியான திருமண சான்றிதழை காட்டி என்னை மிரட்டுகிறார் என்று என்னையும் எனது சமூகம் சம்பந்தமான எனது பணிகளையும் கொச்சைப்படுத்தி, என்னை அளவுக்கதிகமான மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறார் மிர்னா மேனன்.

இந்த சமூகத்தில் எனக்கு இருந்த நற்பெயரை கெடுத்து விட்டார். அந்த நிலையில் அவர் என் மனைவிதான் என்பதற்கான ஆதாரங்களை குடும்பநல நீதிமன்றத்தில் சமர்ப்பித்து அவர் மீது வழக்கு தொடர்ந்தேன்.

ஆனால்   அதற்கான முகாந்திரம் எதுவும் இல்லை எனக்கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் மிர்னா மேனன். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் அதிதி மேனன் மீது நான் தாக்கல் செய்திருந்த வழக்கிற்கு முகாந்திரங்கள் இருக்கிறது என்றும் இந்த வழக்கை குடும்பநல நீதிமன்றம் 3 மாதங்களுக்குள் முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் கூறி உத்தரவிட்டு மிர்னா மேனன் மனுவையும் தள்ளுபடி செய்தது.

இதைத் தொடர்ந்து கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று கடந்த டிசம்பர் 22-ம் தேதி தீர்ப்பு வெளியாகியுள்ளது.

அந்த தீர்ப்பில் மிர்னா மேனனும் நானும் திருமணம் செய்து கொண்டது உண்மைதான் என்றும் இரண்டு மாதத்திற்குள் மிர்னா மேனன் அபி சரவணனுடன் இணைந்து வாழ வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் அந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள சில விஷயங்களையும் இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன்.

அபி சரவணனும் நானும் திருமணம் செய்யவில்லை என்று கூறியுள்ள மிர்னா மேனன் எதற்காக தன்னுடைய கடன் விண்ணப்ப பத்திரங்களில் தன்னுடைய கணவர் பெயர் அபி சரவணன் என்று குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு தமிழ் தெரியாததால் அபி சரவணன் பல டாக்குமெண்ட்டுகளிலும் வெற்று பேப்பர்களிலும் கையெழுத்து பெற்றுக் கொண்டார் என்று மிர்னா மேனன் கூறியுள்ளது ஏற்புடையது அல்ல. ஒரு பொறியியல் பட்டதாரியான அவர் இப்படி எந்த ஒரு டாக்குமெண்டையும் படித்துப் பார்க்காமல் கையெழுத்திட்டுள்ளார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

நாங்கள் ஒன்றாக கணவன் மனைவியாக வாழ்ந்ததை நேரடி சாட்சியாக கண்ட எனது பெற்றோர் மற்றும் தனது வீட்டில் வேலை பார்த்த நபர்கள் அனைவரும் அளித்த வாக்குமூலங்கள் உண்மைதான் என்று கூறி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆனால் மிர்னா மேனனோ இந்தத் திருமணம் நடக்கவில்லை என்பதற்கான ஆதாரங்களையும் தன் தரப்பு சாட்சிகள் எதையுமே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை.

இப்படி சில காரணங்களை கூறி மிர்னா மேனன்  தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததுடன் எனக்கு கிடைக்க வேண்டிய நியாயமான தீர்ப்பும் தற்போது கிடைத்துள்ளது.

நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மிர்னா மேனன்  என்னுடன்தான் வாழ வேண்டும் என ஒருபோதும் நான் கட்டாயப்படுத்த மாட்டேன். ஆனால், அவருக்காக எப்போதும் நான் காத்திருப்பேன். ஏனென்றால் என் காதல் உண்மையானது. உண்மையான என் காதலை புரிந்துகொண்டு அவர் மீண்டும் என்னிடம் திரும்பி வந்தால் இந்த உலகத்தில் என்னைவிட சந்தோஷப்படும் நபர் வேறு யாருமில்லை..” என்று கூறினார் அபி சரவணன்.

Our Score