‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் இயக்கத்தில் ‘ஆத்தா’ என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு அறிவிப்பு வெளியானது.
இந்தப் படத்திற்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைக்க இருப்பதாகவும் தெரிவித்தார்கள். இந்தப் படத்தின் கதையை பிரபல எழுத்தாளரும், இயக்குநருமான பாரதி கிருஷ்ணகுமார் எழுதியிருந்தார்.
கொரோனா முற்றிலும் அகன்ற பிறகு இந்தப் படத்தின் வேலைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இப்போது இத்திரைப்படம் கைவிடப்படுவதாக ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது :
“என் இனிய தமிழ் மக்களே..!
15 ஆண்டுகளுக்கு முன்பேயே எடுத்திருக்க வேண்டிய கதை ‘ஆத்தா’.
முன்பே இந்த கதையை படமாக்கி இருந்தால், உங்கள் பாரதிராஜாவை நீங்கள் கண்டிருக்கலாம். காலச் சூழ்நிலை ஒன்று உள்ளது.
நடைமுறையில் நவீன முற்போக்கான இந்தக் கால கட்டத்தில் வந்த பல சினிமாக்களின் கருவுடன் ஒத்துப் போயுள்ளது ‘ஆத்தா’ படத்தின் கதை.
இதை மீண்டும் கையில் எடுத்தால் பொருள் ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் பெரும் நட்டம் ஏற்படும் என்ற காரணத்தினால் ‘ஆத்தா’ திரைப்படம் கைவிடப்படுகிறது.
புதிய படத்திற்கான அறிவிப்பு… புதிய தலைப்புடனும், புதிய தொழில் நுட்ப கூட்டணியுடன், மிக விரைவில் அறிவிக்கப்படும்..” என்று தெரிவித்துள்ளார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா.









