full screen background image

“ஒரு தோல்விப் படத்தைக் கொடுத்தால் எல்லா பேய்களையும் பார்க்கலாம்” – எஸ்.ஜே.சூர்யா பேச்சு

“ஒரு தோல்விப் படத்தைக் கொடுத்தால் எல்லா பேய்களையும் பார்க்கலாம்” – எஸ்.ஜே.சூர்யா பேச்சு

தமிழின் முன்னணி ஓடிடி தளங்களை கடந்து,  தமிழ் மொழிக்கென்றே பிரத்யேகமாக சிறப்பான படைப்புகளை வழங்கி, வெகு வேகமாக வளர்ந்து வருகிறது ‘ஆஹா ஓடிடி’ தளம்.

‘ஆஹா தள’த்தின் அடுத்த படைப்பாக வெளியாகிறது ஆன்யா’ஸ் டுடோரியல்  இணைய தொடர்.

இயக்குநர் பல்லவி கங்கி ரெட்டி இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா, நிவேதிதா சதீஷ் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இத்தொடர் ஒரு புதுமையான ஹாரர் தொடராக உருவாகியுள்ளது. ஆர்கா மீடியா ஒர்க்ஸ்  இத்தொடரை தயாரித்துள்ளது.

வரும் ஜூலை 1 அன்று வெளியாகவுள்ள இந்த இணைய தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு படக் குழுவினர், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்  நடிகை நிவேதிதா சதீஷ் பேசும்போது, “இந்த தொடர் எனக்கு மிகவும் நெருக்கமான தொடர். இது போன்ற பெரிய படைப்பில் இருப்பது எனக்கு மகிழ்ச்சி. இந்த தொடரில் எனது திறமையை காட்டுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்தது. ஒரு பெண்கள் குழுவில் பயணித்தது மகிழ்ச்சி. படத்தின் ஒட்டு மொத்தக் குழுவும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். திரைத்துறையில் நான் அறிமுகமானபோது பல இடங்களில் நான் நிராகரிக்கபட்டுள்ளேன். இப்போது அதையெல்லாம் கடந்து இப்படி ஒரு முக்கியமான தொடரில் நடித்திருப்பது மகிழ்ச்சி. உங்கள் அனைவருக்கும் இந்த தொடர் பிடிக்கும் என நினைக்கிறேன்…” என்றார்.

எழுத்தாளர் சௌமியா பேசும்போது, “இந்த தொடருக்கு இப்போது இருக்கும் இவ்வளவு பெரிய வரவேற்பு, நாங்கள் இந்த கதையை உருவாக்கும்போது இல்லை. முதலில் எந்த  நோக்கமும் இல்லாமல்தான் கதையை உருவாக்க ஆரம்பித்தோம், பின்னர் தீவிரமான கதையாக இது மாற ஆரம்பித்தது. 

பின்னர் தயாரிப்பாளரை சந்தித்து கதையை கூறியபோது, அவருக்கும் பிடித்திருந்தது. பின்னர் நடிகர்கள் உள்ளே வந்தார்கள். எல்லாம் வேகமாக நடப்பதாய் இருந்தது. தொடரும் சிறப்பாக வந்துள்ளது. ஒரு நல்ல படைப்பாக தொடர் உருவாகியுள்ளது உங்கள் அனைவருக்கும் இந்த  தொடர் பிடிக்கும் என்று நம்புகிறேன் நன்றி…” என்றார்.

இயக்குநர் பல்லவி கங்கி ரெட்டி பேசும்போது, “டிரெய்லரை பார்த்து ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை இருக்கும். நான் ஆஹாவில் பணிபுரிந்துள்ளேன். ஆஹா சிறந்த கதைகளை எப்போதும் எடுக்க விரும்புவார்கள். ஆஹா தமிழில் சிறந்த பணிகளை செய்து வருகிறார்கள், தெலுங்கைவிட பெரிய வெற்றியை ஆஹா தமிழ் பெரும் என நான் நம்புகிறேன்.

இந்த தொடர் உருவாக காரணமாக இருந்த தயாரிப்பு நிறுவனம் ஆர்கா மீடியா ஒர்க்ஸ்க்கு நன்றி. இந்த தொடரை இரு மொழிகளில் உருவாக்கினோம். அதற்கு நிறைய உழைப்பு தேவைப்பட்டது. படத்தின் தொழில் நுட்ப கலைஞர்களும், நடிகர்களும் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர். ஒட்டு மொத்த படக் குழுவிற்கும் இந்த இடத்தில் நன்றியை கூறி கொள்கிறேன். அல்லு அரவிந்த் அவர்களுக்கு நன்றி, என் வாழ்கையில் முக்கியமான நபர் அவர். தொடர் சிறப்பாக வந்துள்ளது. உங்களுக்கு பிடித்தமானதாக இருக்கும் என நான் நம்புகிறேன்…” என்றார்.

நடிகை ரெஜினா கஸண்ட்ரா பேசும்போது, “ஆர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் ஓடிடிக்கு வந்துள்ளது பெரிய விஷயம். இந்த படைப்பில் நான் இருப்பது மகிழ்ச்சி. அஜித் மற்றும் அல்லு அரவிந்த் சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆன்யா’ஸ் டுடோரியல் போன்ற சைக்காலஜிகள், திரில்லர் கதைகள் வருவது சந்தோஷம்தான். நான் நடித்த மது கதாபாத்திரத்தை கண்டிப்பாக தவற விடக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தேன்.

பல்லவி போன்ற திறமையான ஆட்கள் சினிமாவிற்கு வருவது மகிழ்ச்சி. நான் அறிமுகமானபோது திரைத்துறையில் பெண்கள் மிக குறைவாக இருந்தார்கள். இன்று இந்த மேடையில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் இருப்பது மகிழ்ச்சி. பல பெண்கள் இணைந்து இந்த தொடர் தயாரிப்பில் பணியாற்றியுள்ளனர்.

ஒளிப்பதிவாளர் விஜய் சக்ரவர்த்திதான் இந்த தொடரின் முக்கியமான தூண், அவரது பணிகள் கதாபாத்திரத்தின் குணங்களை பிரதிபலிக்கும்படி இருக்கும். இந்த தொடர் உங்கள் அனைவரையும் கவரும்…” என்றார்.

நடிகர்-இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பேசும்போது, “பெரிய ஓடிடி நிறுவனங்களுடன் போட்டியிடும் ஆஹாவிற்கு வாழ்த்துகள். இந்த தொடரை இயக்கிய பல்லவி கங்கி ரெட்டிக்கு, வாழ்த்துகளை கூறிக் கொள்கிறேன். படம் இயக்குவதே இந்தக் காலத்தில் பெரிய சவாலான விஷயம். இது மாதிரியான தொடரை இயக்குவது அதைவிட பெரிய விஷயம். ஒளிப்பதிவாளர் விஜய் சக்ரவர்த்தி சிறப்பான விஷுவல்களை கொடுக்க கூடியவர். சிறு வயதில் பேயை பார்க்க ஆசைப்பட்டு பல விசயங்கள் செய்துள்ளேன். இந்த தொடரில் பேயை சுவாரஸ்யமாக காட்டியிருப்பார்கள் என நம்புகிறேன்..” என்றார். 

நடிகர் S.J.சூர்யா பேசும்போது, “அல்லு அரவிந்த்தின் வேகம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய குழுவும், திறமைமிக்க ஆட்கள் நிறைந்த குழுவாக இருக்கிறார்கள். முருகதாஸ் சார் டீமில் உள்ள எனர்ஜிடிக்கான நபர் பல்லவி. அவர் இயக்கிய தொடரின் விழாவிற்கு நான் வந்தது எனக்கு பெருமையான விஷயம்.

ரெஜினா எப்போதும் தன்னுடைய அழகையும், திறமையையும் தொடர்ந்து கச்சிதமாக தக்கவைத்து கொண்டுள்ளார். நிவேதிதா, ரெஜினா கஸண்ட்ரா  இருவரும் இந்த தொடருக்கு பொருத்தமான தேர்வு, இருவரது முக அமைப்பும் சகோதரிகள் போல் அப்படியே இருக்கிறது.

எழுத்தாளரை தமிழுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி. விஜய் ஆண்டனி “பேயை பார்க்க ஆசை…” என்றார். ஒரு தோல்வி படத்தைக் கொடுத்துப் பாருங்க.. எல்லா பேயையும் பார்த்து விடலாம். ஒரு தோல்வி எல்லாவற்றையும் கற்றுத் தரும். பாகுபலி’ போன்ற படைப்பை எடுத்த ஒரு நிறுவனம், தமிழில் ஒரு சீரிஸ் செய்வது மகிழ்ச்சியாக உள்ளது. பெரும் திறமை வாய்ந்த நபர்கள் இணைந்து இந்த தொடரை உருவாக்கி இருப்பது மகிழ்ச்சி. இந்த தொடர் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்.” என்றார்.

நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி பேசும்போது, “ஆஹா தமிழுக்கு எனது வாழ்த்துகள், அவர்கள் மூலமாக புது திறமையாளர்களும், கதைகளும் உருவாவது மகிழ்ச்சி. அல்லு அரவிந்த் ஓடிடியை இவ்வளவு துரிதமாக ஆரம்பித்து, அதில் வெற்றி கண்டுள்ளது மகிழ்ச்சி.

நானும் விரைவில் ஆஹா தமிழுடன் பணிபுரிய விருப்படுகிறேன். ஒரு ஹாரர் தொடரை எழுதுவது சுலபமான காரியம் அல்ல. ஏனென்றால் ஒவ்வொரு எபிசோடுக்கும் நிறைய உணர்வுபூர்மான காட்சிகளை வைக்க வேண்டும். டிரெயிலரை பார்க்கும் போது, ஈர்க்கும் வகையில் உள்ளது. ஒளிப்பதிவாளரின் பணி சிறப்பாக உள்ளது. ரெஜினா கஸண்ட்ரா போன்ற சிறந்த நடிகர்கள் இந்த தொடரில் இணைந்திருப்பது மகிழ்ச்சி. நடிகை நிவேதிதா மிகச் சிறந்த தொடர்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த தொடரில் அவரது நடிப்பு சிறப்பாக உள்ளது. ஒட்டு மொத்த படக் குழுவிற்கும் எனது வாழ்த்துகள்…” என்றார்.

Our Score