full screen background image

பொன்னியின் செல்வனின் ஆழ்வார்க்கடியான் வடகலையா தென்கலையா..?

பொன்னியின் செல்வனின் ஆழ்வார்க்கடியான் வடகலையா தென்கலையா..?

அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நீண்ட வரலாற்று நாவல். இது, இப்போது 120 நிமிடங்கள் கொண்ட முழு நீள 2-டி திரைப்படமாக உருவாகி வருகிறது. 

‘பொன்னியின் செல்லவன்’ கதை அனிமேஷன் படங்களின் அசத்தல் தன்மையோடும் அசல் கதையின் ஓட்டம் மாறாமலும் தயாராகிறது.  5 எலிமெண்ட்ஸ் எண்டர்டெய்னர் மற்றும் வளமான தமிழகம் நிறுவனத்துடன் இணைந்து சரவணராஜா தயாரிக்கிறார். எம். கார்த்திகேயன் இயக்குகிறார். பி.லெனின் படத்தொகுப்பு செய்கிறார்.

இந்தப் படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா நேற்று மதியம் ஆர்.கே.வி. பிரிவியூ தியேட்டரில் நடைபெற்றது. படத்தின் முன்னோட்டத்தை திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் வெளியிட தமிழ்நாடு வேளாண்மைத் துறையின் இயக்குநர் ராஜேந்திரன் ஐ.ஏ:எஸ். பெற்றுக் கொண்டார்.

IMG_4410

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் சரவணராஜா, “இங்கே வந்திருப்பவர்கள்  கல்யாண மாலை மோகன், ராஜேந்திரன் ஐ.ஏ:எஸ்.,பிரபல கார்ட்டூனிஸ்ட் மதன், திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் அனைவருமே இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தபோது காரணம் கேட்டனர். எல்லாருக்குமே உரிய தகுதியும் தொடர்பும் இருப்பதால் தான் அழைத்து இருக்கிறேன். அதற்கான காரணத்தை நான் கூறியதும் மகிழ்ச்சியுடன் வர ஒப்புக் கொண்டனர்.

IMG_4363

இவர்கள் அனைவரும் திரைப்படம், அனிமேஷன், வரலாறு என்கிற வகையில் இவ்விழாவுடன் தொடர்பு உடையவர்கள்தான். இது மூன்றாண்டு கால திட்டம். இப்போது 7 மாதங்கள் மட்டுமே முடிந்துள்ளது. மீதி 2 ஆண்டுகள் 4 மாதங்கள் உள்ளன. 2017-ல் வெளிவரவுள்ள இத்திரைப்படம் டிஸ்னி, Pixar நிறுவனத் தயாரிப்புகளுக்கு இணையாக சுமார் 20 கோடி தயாரிப்பு செலவில் உருவாகிறது. .அனிமேஷன்  படக் குழுவில் 150 பேர் பணிபுரிகிறார்கள் ‘பொன்னியின் செல்வன்’  அனிமேஷன்   படம் திரைப்படத் துறையில் புதிய பரிமாணத்தை உருவாக்கும் என்று நம்புகிறோம்.

இதன் தரம் பற்றிய பலருக்கும் சந்தேகங்கள் வரலாம்; வரும். அதற்கு பதில் அளிப்பதுபோல தரத்தைக் காட்ட அவ்வப்போது  இன்னும் 2, 3 முன்னோட்டத்தை வெளியிடவுள்ளோம்.” என்றார்.

IMG_4383

கல்யாண மாலை மோகன் பேசும்போது, “நான் சரவணராஜாவை ஒரு விமானப் பயணத்தின்போதுதான் சந்தித்தேன். யாரைப் பார்த்தாலும் நல்லா இருக்கீங்களா என்பேன். இப்படி நலம் விசாரிப்பதில் யாருக்கும் நஷ்டம் இல்லை. அவர் பேசும்போது இந்தப் படம் பற்றிக் கூறினார். இதை பழைய கதையாச்சே என்பார்கள். பழையதை சொல்லிப் புரிய வைப்பது  நம் கடமையல்லவா?  இம்முயற்சியின் மூலம் ‘பொன்னியின் செல்லவனை’ அடுத்த தலைமுறை சமூகத்துக்கு எடுத்துச் செல்கிறீர்கள். இதில் இலக்கையும் தாண்டி வெற்றி பெற வாழ்த்துகிறேன்..” என்றார்.

IMG_4393

திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பேசும்போது, “இந்த  அனிமேஷன் முயற்சி வரலாற்றில் முக்கிய நிகழ்வு. இது சாதாரண விஷயமல்ல. எம்.ஜி.ஆரே இதை எடுக்க விரும்பியிருக்கிறார்.

நானும் ஆரம்பத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், அனிமேஷன் என்று ஈடுபட்டு பைத்தியமாகத் திரிந்தவன்தான். சோழர் கால வரலாறு மிகப் பெரியது.பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் ஒரு தகவலைக் கூறியபோது ஆச்சரியப்பட்டேன்.

சோழர்களின் கப்பல் படை பெரியது. இப்போதாவது திசை காட்ட கருவி உள்ளது. அப்போது திசையை அறிய தேவாங்கை பயன்படுத்தினார்களாம். அது எப்போதும் மேற்கு நோக்கியே பார்க்குமாம். பிறந்த குட்டியும்கூட மேற்கு நோக்கியே பார்க்குமாம். அவைகளை வளர்த்து இதற்காகவே அவைகளை கப்பலில் பயன்படுத்தியிருக்கிறார்கள். என்ன ஒரு விஞ்ஞான நுணுக்கம் பாருங்கள்…? இந்த முயற்சியில் என்னால் முடிந்த உதவியை செய்யத் தயாராக இருக்கிறேன்.” என்றார்.

IMG_4394

பிரபல கார்ட்டூனிஸ்டும் எழுத்தாளருமான மதன் பேசும்போது,  “இப்போதெல்லாம் சாதாரணமான ஒரு படத்தினை தயாரிப்பதே சவாலான விஷயம். அதிலும்  ‘பொன்னியின் செல்வனை’ அனிமேஷன் படமாக பிரமாண்டமாக எடுப்பது அதைவிட பெரிய சவால். இது எல்லாமே மிகப் பெரிய விஷயம்.

அதனால் இதைத் தயாரிக்கும் சரவணராஜா வந்தியத்தேவனைவிட பெரிய வீரனாக எனக்குத் தெரிகிறார். சுமார் 2500 பக்கங்கள் கொண்ட இக்கதையை 10 முறை படித்தவர்களே பல ஆயிரம் பேர் இருப்பார்கள். அவர்கள் எல்லாருமே இந்த பொன்னியின் செல்வனுக்கு அத்தாரிடி போல் பேசுவார்கள். அவர்களை சமாளிப்பதே முதல் வேலையாக இருக்கும்.

எவரெஸ்ட்டில் ஏறிய எட்மண்ட் ஹிலாரியிடம் ‘ஏன் ஏறினீர்கள்?’ என்று கேட்டபோது, ‘சிகரம் இருந்தது. ஏறினேன்’ என்றாராம். அது போல இதுவும் காலத்தின் கட்டாயம். 3-டி என்பது சிக்கல் நிறைந்தது. ஆனால் 2-டி பல வசதிகள் கொண்டது. ஸ்பீல்பெர்க் ‘டின்டின்’  எடுத்தபோது 3-டி பற்றி கேள்வி வந்தது. பெரிய ஹிட்டான லயன்கிங், ஜங்கிள்புக் எல்லாம் 2-டியில் பார்த்திருப்பீர்கள்.

இன்னொரு தலைமுறைக்கு கொண்டு செல்லும் இம்முயற்சி சாகாவரம் பெறப் போகிறது. இந்த முன்னோட்டம் வெளியானால் நிச்சயம் ஒரு சர்ச்சை எழும். அது ஆழ்வார்க்கடியான் கதாப்பாத்திரம் அணிந்திருக்கும் நாமம் வடகலையா? தென்கலையா? என்கிற சர்ச்சையை உண்டாக்கும். இதற்காகத் தமிழகத்தில் கலவரமே நடக்கப் போகிறது. ஏற்கெனவே காஞ்சிபுரம் கோவில் யானைக்கு நாமம் போடும்போது வடகலையா.. தென்கலையா.. என்று சண்டையாகி உச்சநீதிமன்றம்வரைக்கும் சென்றார்கள். இது தஞ்சை பெரிய கோவில் கட்டியதைப்போல பெரிய வேலை.. சரவணராஜா முழுமையாகக் கட்டி முடிக்க வேண்டும்…” என்று கூறி வாழ்த்தினார்.

Our Score