தமிழ்த் திரையுலகில் திகில் படங்களுக்கு என தனி இடம் எப்பொழுதும் உண்டு. அப்படி வெற்றிவாகை சூடிய திகில் படங்களில் ‘ஈரம்’, ‘யாவரும் நலம்’, ‘யாமிருக்க பயமே’ மற்றும் பல திரைப்படங்களை கூறலாம். எல்லா தரப்பினரையும் கவரும்படி உள்ளது திகில் படங்கள் மட்டுமே. அந்த வரிசையில் மிகுந்த எதிர்பார்புடன் வெளிவரவிருக்கும் இந்த திரைப்படம் எல்லோரையும் ‘ஆ’ என அலற வைக்கும்.
‘ஆ’ என்பது வெறும் அலறும் சத்தம் மட்டுமில்லை. ‘ஆ’ என்பது இத்திரைப்படத்தின் பெயரும்கூட. இத்திரைப்படத்தின் இயக்குனர்கள் ஏற்கனவே ‘ஓர் இரவு’ மற்றும் ‘அம்புலி’ ஆகிய இரண்டு வெற்றிகரமான திகில் படங்களை இயக்கிய ஹரி சங்கர் மற்றும் ஹரிஷ் நாராயண் ஆவர்.
டோக்கியோ, துபாய், ஆந்திரா நெடுஞ்சாலை, வங்க கடலின் நடுப்பகுதி மற்றும் தமிழ்நாட்டில் ஒரு வங்கியின் ஏ.டி.எம் என ஐந்து வெவ்வேறு இடங்களில் படம் பிடித்துள்ளனர். இத்திரைப்படம் ஒரு உண்மைச் சம்பவத்தை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் பெயருக்கு ஏற்றவாறு ஆரோ ஒலி தொழிற்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் ‘அம்புலி புகழ்’ கோகுல்நாத், சிம்ஹா, பால சரவணன் ஆகிய மூவரும் நண்பர்களாக நடித்துள்ளனர். மேக்னா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், பாஸ்கி, ஸ்ரீஜித் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு சதிஷ்.ஜி, இசை கே.வெங்கட்பிரபு சங்கர், பின்னனி இசைக்கோர்ப்பு சாம்.சி.எஸ், படத்தொகுப்பு ஹரிஷ் சங்கர். கே.டி.வீ.ஆர் க்ரியேடிவ் ப்ரேம்ஸ் தயாரிப்பில் வி.லோகநாதன், வி.ஜனநாதன் மற்றும் ஸ்ரீனிவாஸ் லோகநாதன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் கதையை பற்றி இயக்குனர்கள் கூறும்போது, “நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்து கொள்ளும் மூன்று கல்லூரி நண்பர்கள் அவர்கள் சந்தித்த திகில் அனுபவங்களை பற்றி பகிர்ந்து கொள்கிறார்கள். அனைவரின் அனுபங்களும் ஒரே விஷயத்தை மையமாக வைத்து நடந்திருக்கும். அதனால் மூவரும் சேர்ந்து எல்லா இடங்களுக்கும் பயணிக்கின்றனர். திகிலான மூவரின் பயணமும், அவர்கள் பயணத்தில் சந்திக்கும் அனுபங்களும் மிகவும் திகலாக படம் பார்ப்பவர்களுக்கு அமையும்…” என்றனர்.