சினிமா துறையில் சாதிக்க துடிக்கும் பல இளம் திறமையாளர்களுக்கு வழிகாட்டியாக அமைந்திருக்கிறது டில்லி பாபுவின் ஆக்சஸ் பிலிம் நிறுவனம்.
லாபத்தை மட்டும் பார்க்காமல், திறமைக்கு முக்கியத்துவம் கொடுத்து, சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இளம் தயாரிப்பாளர் டில்லி பாபு.
தங்கள் நிறுவனத்தின் முதல் வெற்றி படமான ‘உறுமீன்’ திரைப்படத்தை தொடர்ந்து தற்போது இவர்கள் தயாரிக்கும் இந்த பெயர் சூட்டப்படாத திரில்லர் திரைப்படத்தை புதிய இயக்குநரான ஏ.ஆர்.கே. சரவண் இயக்குகிறார். இதில் கதாநாயகனாக ஆதி நடிக்க நிக்கி கல்ராணி அவருக்கு இணையாக நடிக்க உள்ளார். பி.வி.ஷங்கர் ஒளிப்பதிவில், புதிய இசையமைப்பாளரான திபுவின் இசையில் தயாராகும் இந்த படம் விரைவில் படப்பிடிப்புக்கு செல்ல உள்ளது.
“என் பள்ளி பருவத்தில் இருந்தே, சினிமா மீது எனக்கு எல்லையற்ற மோகம் உண்டு. எனக்கென்று ஒரு நிலையான பெயரை சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இந்த ‘உறுமீன்’ திரைப்படம் மூலம் நிறைவேறியது.
அதனை தொடர்ந்து இளம் திறமையாளர்களுக்கு ஏணிப்படியாக இருக்க வேண்டும் என கருதி உருவாக்கப்பட்டதுதான் இந்த ஆக்சஸ் பிலிம் நிறுவனம்.
பொதுவாக படத்தில் இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர்கள் என பலரின் பங்கு இருந்தாலும் அந்த திரைப்படத்தின் தலையாய பொறுப்புகள் அனைத்தும் தயாரிப்பாளரையே சாரும். அந்த வகையில் தரம் வாய்ந்த படங்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதுதான் ஆக்சஸ் பிலிம்ஸின் முக்கிய குறிக்கோள்.
எங்கள் நிறுவனத்தின் இந்த இரண்டாவது படைப்பில், தனித்துவமான நடிகர் ஆதி மற்றும் தமிழ் சினிமாவின் தற்போதைய லக்கி ஸ்டாராக திகழும் நிக்கி கல்ராணி ஆகியோருடன் இணைந்து செயல்படுவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.
நிச்சயம் எங்களின் இந்த ஆக்சஸ் பிலிம் நிறுவனம், சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று வாய்ப்பு தேடி கொண்டிருக்கும் அனைத்து திறமையாளர்களுக்கும் ஒரு படிக்கல்லாக அமையும் என நம்புகிறேன்..” என்கிறார் தயாரிப்பாளர் டில்லி பாபு.