நடிகர் விமல் கொடுத்த புகாரின் அடிப்படையில் தயாரிப்பாளர் உள்பட 3 பேர்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விமல் தன்னிடம் பண மோசடி செய்துவிட்டதாகச் சொல்லி தயாரிப்பாளர் சிங்காரவேலன் உள்ளிட்ட 3 பேர் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் அந்தப் புகார் மீது மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து இது குறித்து நடிகர் விமல் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தயாரிப்பாளர்கள் 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தும்படி சைதாப்பேட்டை நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விமல் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், “நான் கடந்த 2016-ம் ஆண்டு இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கிய ‘மன்னர் வகையறா’ என்ற படத்தில் நடித்தேன். பணப் பிரச்னை காரணமாக அந்தப் படத்தை தனது A3V தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிட்டேன்.

பைனான்சியர்களான சிங்காரவேலன், கோபி ஆகியோர் இந்தப் படத்தை தயாரிக்க பணம் ஏற்பாடு செய்து தந்தனர். அவர்களை நம்பி பல காசோலைகள் மற்றும் ஆவணங்களிலும் நான் கையெழுத்திட்டுக் கொடுத்தேன்.
இந்நிலையில் படத்தை தயாரிக்க 3 கோடி ரூபாய் செலவானதாகவும், அதனை விற்பனை செய்ததில் 4 கோடி ரூபாய் கிடைத்ததாகவும் சிங்காரவேலன் தெரிவித்தார். அந்த 4 கோடி ரூபாய் பணமும் கடனாக வாங்கிய 3 கோடி ரூபாய் பணத்திற்கான வட்டிக்கு செலவாகி விட்டதாக சிங்காரவேலன் என்னிடம் தெரிவித்தார்.
அசல் 3 கோடி ரூபாய் பணத்துக்காக எதிர்வரும் காலத்தில் படங்கள் நடித்து சம்பளத்தின் மூலமாகக் கொடுத்தேன். இதனிடையே ‘மன்னர் வகையறா’ படத்தை விற்பனை செய்ததில் 8 கோடி ரூபாய் கிடைத்ததை மறைத்து பொய் கணக்கு மூலம் என்னை சிங்காரவேலன் மோசடி செய்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.
மேலும் தன் தயாரிப்பு நிறுவனத்தை தவறாக பயன்படுத்தி பல ஆவணங்கள் மற்றும் காசோலைகளில் கையெழுத்து வாங்கி பண மோசடி செய்துள்ளனர். தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்கு உடந்தையாக கோபி மற்றும் விக்னேஷ் ஆகியோர் செயல்பட்டுள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்…” என்று குறிப்பிட்டிருந்தார்.
விமல் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த இந்த புகார் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. பிறகு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, மூவர் மீதும் வழக்கு தொடர்வதற்கான உத்தரவைப் பெற்றார்.
அதன் பிறகு தற்போதுதான் விருகம்பாக்கம் போலீசார் சிங்காரவேலன், கோபி, விக்னேஷ் உள்ளிட்ட மூவரும் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.