full screen background image

‘கத்தி’, ‘புலிப்பார்வை’ படங்களுக்கெதிரான வழக்கு மதுரை ஐகோர்ட்டில் தள்ளுபடி..!

‘கத்தி’, ‘புலிப்பார்வை’ படங்களுக்கெதிரான வழக்கு மதுரை ஐகோர்ட்டில் தள்ளுபடி..!

‘கத்தி’, ‘புலிப்பார்வை’ படங்களுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை கே.கே.நகரை சேர்ந்த வி.ரமேஷ் என்ற வழக்கறிஞர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் கத்தி, புலிப்பார்வை படங்களுக்கெதிராக மனு தாக்கல் செய்திருந்தார். 

அவர் தன்னுடைய மனுவில், “கத்தி’, ‘புலிப்பார்வை’ ஆகிய படங்கள் தீபாவளிக்கு வெளிவர உள்ளன. இந்த 2 படங்களும் இலங்கை போர் பற்றியும், தமிழர்களின் உணர்வுகளை மோசமாக சித்தரிக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

‘கத்தி’ படத்தை இலங்கை அதிபர் ராஜபக்சேயின் உறவினர் சுபாஷ்கரனுக்கு சொந்தமான லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 8 கோடி தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அந்த படம் தயாரிக்கப்படுவதால் தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்.

அதே போன்று ‘புலிப்பார்வை’ படமும் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றதை கருவாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களை தேச விரோதிகள் போன்று சித்தரிக்கும் காட்சிகள் இந்த படத்தில் இடம் பெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் வெளியானாலும் பிரச்சினை ஏற்படும். எனவே, ‘கத்தி’, ‘புலிப்பார்வை’ ஆகிய படங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு வழக்கறிஞர் ரமேஷின் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி அதனை தள்ளுபடி செய்தார்.

அவர் அளித்த தீர்ப்பில் “கத்தி’, ‘புலிப்பார்வை’ ஆகிய படங்களுக்கு ‘சென்சார் போர்டு’ சான்று அளித்துள்ளது. சென்சார் போர்டு உறுப்பினர்கள் படங்களை பார்த்து திருப்தி அடைந்துள்ளனர். மனுதாரர் படங்களை பார்க்காமலே படங்களில் வரும் வசனங்கள், காட்சிகள் ஆட்சேபனைக்குரியதாக உள்ளதாக யூகத்தின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த படங்களை வெளியிட்டால் சட்டம்–ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று மனுதாரர் கூறி உள்ளார். அவ்வாறு சட்டம்–ஒழுங்கு பிரச்சினை வந்தால் அரசு பார்த்துக்கொள்ளும். மனுதாரர் அது பற்றி கவலைப்பட தேவையில்லை.

சினிமா தொழில் என்பது வியாபார நோக்கத்தில் மட்டுமல்லாமல் சமூக நோக்கத்துடனும் இருக்க வேண்டும். பழைய காலங்களில் சினிமாக்கள் சமூக மற்றும் அரசியல் மாற்றங்களை கொண்டு வந்தன. உலகம் முழுவதும் உள்ள பல நடிகர்கள் தலைவர்களாக உருவாகி ஒரு வரலாற்றையே உருவாக்கி உள்ளனர்.

நடிகர் ரொனால்டு ரீகன், அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்தார். எம்.ஜி.ஆர். தமிழக முதல்–அமைச்சராக இருந்தார். ஆந்திர பிரதேசத்தில் என்.டி.ஆர். முதல்வராக இருந்தார். கலிபோர்னியா மாநிலத்தின் கவர்னராக ஹாலிவுட் நடிகர் அர்னால்டு இருந்துள்ளார். ஆட்சியாளர்களாக இருந்துள்ள இவர்கள் எல்லோரும் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதிநிதிகள். அவர்கள் அனைவரும் சினிமாவால்தான் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

சமூக பிரச்சினையான கருக்கலைப்பு குறித்து ‘கருத்தம்மா’ படமும், தேசிய முக்கியத்துவம் குறித்து ‘பராசக்தி’, ‘நாடோடி மன்னன்’ ஆகிய படங்களும், தேசப்பற்று குறித்து ‘ரத்தத் திலகம்’ படமும், கலப்புத் திருமணம் குறித்து ‘அலைகள் ஓய்வதில்லை’ படமும், குடும்பப் பாசம் குறித்து ‘பாசமலர்’, ‘பாலும் பழமும்’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ ஆகிய படங்களும், ஊழல் ஒழிப்பு குறித்து ‘இந்தியன்’ படமும் மிக அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளன. இது போன்று ஏராளமான படங்களை கூறலாம்.

ஆனால், சமீபகாலமாக எதிர்மறையான கருத்துக்களை தரக்கூடிய படங்கள் அதிக அளவில் வெளியாகின்றன. அதில் ஒன்று, பள்ளியில் படிக்கும் மாணவனும், மாணவியும் காதலிப்பது போன்று படம் எடுப்பதாகும். இது போன்ற காட்சிகள் எதிர்காலத்தில் அடியெடுத்து வைக்கக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு எதுபோன்ற ஒரு எண்ணத்தை ஏற்படுத்தும் என்பதை சினிமா தயாரிப்பாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

சில படங்களில் மாணவர்களை தாதாக்கள் போன்று காண்பிப்பது, மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொள்வது, புகை பிடிப்பது, மது அருந்துவது போன்று காண்பிப்பது போன்றவை சமூகத்தில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஒரு படத்தை தயாரிப்பதற்கு முன்பு அந்த படத்தின் கதை சமூகத்தில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை சினிமா தயாரிப்பாளர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். சினிமா தயாரிப்பாளர்கள் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். சர்ச்சைக்குரிய படங்களை எடுக்கக்கூடாது. மக்களின் நம்பிக்கைக்கு எதிரான படங்களை எடுப்பது நல்லதல்ல.

சமீபகாலமாக திரைப்படங்கள் வெளியாகும் சமயத்தில் சாதி, மதம், சமுதாயத்துக்கு எதிராக உள்ளதாக கூறி படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதன் காரணமாக சில நேரங்களில் தயாரிப்பாளர்கள் பரிதாப நிலைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

சினிமா தொழிலுக்கு யாரும் மிரட்டல் விடுக்க முடியாது. மொழி, சாதி, மதம், சமுதாய அடிப்படையில் திரைப்படங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது. இது தவிர்க்கப்பட வேண்டும். இது போன்ற செயல் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானதாகும்.

தியேட்டர்களுக்கு செல்லும் பொதுமக்கள் திரைப்படத்தை பார்த்து மகிழ வேண்டும். அத்தோடு விட்டு விட வேண்டும். சினிமா மக்களுக்காகத்தான் தயாரிக்கப்படுகிறது.

சென்சார் போர்டு அனுமதி அளித்த சில படங்களில்கூட மிருகத்தனமான வன்முறை காட்சிகள், ஆயுத கலாசாரம், கொடூரக் கொலை போன்ற காட்சிகள் உள்ளன என்று மனுதாரர் கூறுவது சரியானதுதான்.

சென்சார் போர்டு உறுப்பினர்களின் ஊழல் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வந்ததையும் நிராகரிக்க முடியாது. பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் உண்மையாகவும், நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டும். இதில் இருந்து விலகும்போது, அது சமூகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்..” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Our Score