வெறும் இரண்டே கால் லட்சத்தில் ஒரு படம் எடுக்க முடியுமா..? இன்று இருக்கும் சினிமா சூழலில் டிஸ்கஷனுக்கே அது போதாது என்கிறீர்களா..?
மிகக் குறைந்த செலவில் படம் எடுப்பதுதான் திறமையான இயக்குநருக்கு சவால் என்பதை நிரூபிக்கும்வகையில் இந்தியாவின் பிரபல இயக்குநரான ராம்கோபால்வர்மா வெறும் இரண்டே கால் லட்சம் ரூபாயில் ‘ஐஸ்கிரீம்’ என்ற பெயரில் ஒரு படம் எடுத்து வெளியிட்டு அதனை சூப்பர் ஹிட்டும் ஆக்கியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் சினிமாவுக்கு வரத் துடிக்கும் இளம் இயக்குநர்களுக்கு அந்த படம் ஒரு பாடமாக அமையட்டுமே என்ற பரந்த மனப்பான்மையில் அந்த தெலுங்கு படத்தை வாங்கி தமிழ் மொழியில் டப் செய்து ‘சாக்கோபார்’ என்ற தலைப்பில் வெளியிடுகிறார் தயாரிப்பாளர் மதுராஜ்.
இந்த படம் பற்றி மதுராஜ் என்ன சொல்கிறார்..?
‘’இந்திய சினிமாவில் ஒரு வரலாற்று சாதனை செய்த திரைப்படம் தமிழில் ’சாக்கோபாரா’க வெளிவருகிறது.
ஒரு திரைப்படம் எடுக்க ஒரு அலுவலகம் அமைப்போம். அதற்கே குறைந்தபட்சம் 2 லட்சத்தில் இருந்து 3 லட்சம் அட்வான்ஸாக கொடுப்போம். ஆனால் அந்த அட்வான்ஸ் பணத்திலேயே படத்தை முடித்திருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா..? நம்ப முடியவில்லை என்றால் வரும் 26-ம் தேதி தியேட்டருக்கு வந்து பாருங்கள்.
வெறும் இரண்டே கால் லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் ஒரு தரமான படத்தை இயக்குநர் ராம்கோபால் வர்மா உருவாக்கி கொடுத்துள்ளார். இதில் இதுவரை இந்திய சினிமாவில் காட்டப்படாத காட்சிக் கோணங்கள் இடம் பெற்றிருக்கிறது.
கிளாமர் ப்ளஸ் ஹாரர் படமான ‘சாக்கோபார்’ படத்தில் ஆறு பேர் மட்டுமே நடித்து இருக்கிறார்கள். ஆறு நாட்கள் மட்டுமே இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது. அதன் பிறகு இப்படத்திற்கு ராம்கோபால்வர்மா ஒன்றரை கோடி ரூபாயை சம்பளமாக வாங்கியிருக்கிறார். தெலுங்கிலும், இந்தியிலும் சக்கைபோடு போட்ட இந்த படம் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என வெளிவந்து கொண்டிருக்கிறது.
நான் ஹைதராபாத் சென்றபோது யதார்த்தமாக பார்த்த படம்தான் இது. படத்தைப் பற்றி கேள்விப்பட்டதும் வாங்கி வெளியிட முடிவு செய்துவிட்டேன்.
எப்போதும் சர்ச்சைக்கு பெயர் பெற்ற இயக்குனர் ராம்கோபால்வர்மா ‘என் படம் தமிழ் ரசிகர்களுக்கு புரியாது’ என்று சொல்லி படத்தைத் தருவதற்கு மிகவும் தயங்கினார். நான் என் கோரிக்கையில் உறுதியாக இருந்து படத்தை வாங்கி, டப்பிங் செய்து வெளியிட்டுள்ளேன்.
ஒரே ஒரு லொக்கேஷனில் மிகக் குறைந்த கலைஞர்களை வைத்து, மிகக் குறைந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ‘சாக்கோபார்’ படம் தமிழ்த் திரைத்துறையினருக்கு மிகவும் உதவும். சாதாரண ரசிகனையும் திருப்திபடுத்தும் அளவுக்கு திகில் காட்சிகளும், கவர்ச்சியும் நிறைந்திருக்கிறது.
அடுத்து தமிழில் வெளியாகும் ‘குற்றமே தண்டனை’ படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை வாங்கியிருக்கிறேன். அந்த பணிகள் போய்க் கொண்டிருக்கிறது. இங்கே ‘குற்றமே தண்டனை’ வெளியாகும் நாளிலேயே தெலுங்கிலும் வெளியாகும்’’ என்றார்.













