படத்தின் தலைப்பை பரபரப்பானதாக வைத்தால் அதுவே படத்திக்கு மிகப் பெரிய விளம்பரமாக இருக்குமென்று நினைப்பார்கள் சினிமாக்காரர்கள்.
அப்படித்தான் ‘சரவணன் என்கிற சூர்யா’ என்றொரு படத்தைத் துவக்கினார் தயாரிப்பாளரும், இயக்குநருமான ராஜா சுப்பையா. புதுமுகங்களின் நடிப்பில் இத்திரைப்படம் துவங்கிய உடனேயே பரபரப்பை தோற்றுவித்தது..!
நடிகர் சூர்யாவின் இயற்பெயர் சரவணன்தான். இதனை நன்கு தெரிந்துதான் ஒரு பப்ளிசிட்டிக்காக இந்தப் பெயரை வைத்திருப்பதாக இயக்குநர் ராஜசுப்பையா வெளிப்படையாகத் தெரிவித்தார். சூர்யா தரப்பில் இருந்து இந்தப் படத்தின் டைட்டிலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்து நடந்தும் இயக்குநர் தனது தலைப்பில் உறுதியாக இருந்ததால் மேற்கொண்டும் ஏதும் பேச முடியாமல் விட்டுவிட்டார்கள்.
இப்போது இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக புதுமையான ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறார் இதன் தயாரிப்பாளர்.
அதாகப்பட்டது என்னவெனில்.. ‘சரவணன் என்கிற சூர்யா’ என்கிற தலைப்பில் நீங்கள் ஒரு கதையை எழுத வேண்டுமாம். சிறந்த கதைக்கு 10000 ரூபாய் பரிசு தருகிறார்களாம்..!
இதற்கான விதிமுறைகள் :
1. எழுதிய கதையை பேஸ்புக்கில் facebook.com/saravananengirasurya என்ற பக்கத்தில் போஸ்ட் செய்ய வேண்டும்.
2. இந்தக் கதை ஆங்கிலம் அல்லது தமிழில் இருந்தாக வேண்டும்.
3. குறைந்த வார்த்தைகள் கொண்ட கதைக்கு சிறப்புப் பரிசு உண்டு.
4. நீங்கள் போஸ்ட் செய்யும் கதைக்கு குறைந்தது 5 நண்பர்களாவது கமெண்ட் செய்திருக்க வேண்டும்.
5. சிறந்த கதைக்கும், சிறந்த கமெண்ட்டுக்கும் பரிசு உண்டு.
6. பரிசு பெறுபவர்களில் முதல் இருவர், இதே பட நிறுவனம் தயாரிக்கும் அடுத்தப் படத்தில் நடிக்க வைக்கப்படுவார்கள்.
7. கதைகளை போ்ஸ்ட் செய்வதற்கு கடைசி தேதி ஏப்ரல் 10-ம் தேதி நள்ளிரவு 11.59 மணி.
எழுத்தாளர்களே.. இலக்கிய சூடாமணிகளே முந்துங்கள்.. எழுத்துக்கு பரிசும் கிடைச்ச மாதிரியுமிருக்கும். அடுத்தப் படத்துல ஒருவேளை ஹன்ஸிகாகூட நடிக்க வாய்ப்பு கிடைச்சாலும் கிடைக்கும்..
மிஸ் பண்ணிராதீங்க மக்களே..!










