‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் நடித்த ஜெய் – அஞ்சலி கூட்டணிக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு. பல வருடங்கள் கழித்து இந்த வெற்றி கூட்டணியானது புதுமுக இயக்குனர் சினிஷ் இயக்கும் காதல் கலந்த திகில் படத்தில் மீண்டும் ஒன்று சேர்ந்திருப்பது, ரசிகர்களின் ஆர்வத்தை வெகுவாக கவர்ந்து உள்ளது. முழுக்க முழுக்க கொடைக்கானலில் படமாக்கப்பட உள்ள இந்த படத்தில் நடிகர் ஜெய் மூன்று வேடங்களில் நடிக்கிறார்.
’70 எம்.எம்.’ நிறுவனத்தின் உரிமையாளர்களான டி.என்.அருண் பாலாஜி – கந்த சுவாமி நந்தகுமார் மற்றும் ‘பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்’ தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் திலீப் சுப்பாராயன் ஆகியோர் இந்தப் படத்தை இணைந்து தயாரித்துள்ளனர்.
‘தயாரிப்பாளர் அருண் பாலாஜியின் தந்தையும் ‘மெட்ராஸ்’ படத்தில் நடித்தவருமான நந்தகுமார் கேமராவை ஆன் செய்ய, தயாரிப்பாளர் திலீப் சுப்பராயனின் தந்தையும், தமிழ் சினிமா துறையின் மூத்த ஸ்டண்ட் மாஸ்டருமான ‘சூப்பர் சுப்பராயன்’ இந்த படத்தின் முதல் காட்சியை கிளாப் போர்டு அடித்து ஆரம்பித்து வைத்தார்.
இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளராக R சரவணன், கலை இயக்குநராக சக்தி வென்கட்டராஜ், படத் தொகுப்பாளராக ரூபன், ஸ்டன்ட் மாஸ்டராக திலிப் சுப்பராயன், ஆடை வடிவமைப்பாளராக N.J.சத்யா மற்றும் நடன இயக்குநராக ஷெரிப் ஆகியோர் பணியாற்றவுள்ளனர்.
1989-ம் ஆண்டை பின்னணியாக கொண்டு உருவாக்கப்படும் இந்த திகில் படமானது, நடிகர் ஜெய்யின் சினிமா வாழ்க்கையில் அடுத்த ஒரு மைல் கல்லாக அமையும் என்பதை உறுதியாக சொல்லலாம்.











