full screen background image

“தர்ஷன் கணேசன் சிறப்பாக நடித்துள்ளார்” – ‘இசைஞானி’ இளையராஜா பாராட்டு!

“தர்ஷன் கணேசன் சிறப்பாக நடித்துள்ளார்” – ‘இசைஞானி’ இளையராஜா பாராட்டு!

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் D.D. பாலச்சந்திரன் இயக்கத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனான தர்ஷன் கணேசன் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

T.G. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ள இத்திரைப்படம், மணல் கொள்ளையை மையமாக வைத்து நம் மண்ணின் வாழ்வியலையும் எளிய மக்களின் உரிமைகளையும் பேசும் அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ளது.

இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் கங்கை அமரன், ரோஜா, ஸ்ரித்தா ராவ், அர்ச்சனா, இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வரும் செப்டம்பர் 25-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் அறிமுக விழாவில் திரைப் பிரபலங்கள் மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் அம்மா சிவா ஆகியோர், “சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சமூக மதிப்புகளைப் பேசும் தரமான படங்களைத் தொடர்ந்து தயாரித்து வருகிறது.

‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக தேசிய விருது பெறவிருக்கும் T.G. தியாகராஜன் சாருக்கு எங்களது வாழ்த்துக்கள்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்திலிருந்து தமிழ் சினிமாவுக்குக் கிடைத்திருக்கும் பொக்கிஷமாக தர்ஷன் கணேசன் விளங்குகிறார். அவரது இயல்பான நடிப்பு, சிவாஜி சாரின் ஆரம்பகால நடிப்பை நினைவுபடுத்துகிறது.

இந்த வயதிலும் கங்கை அமரன் காட்டியுள்ள அசாத்திய எனர்ஜியும், தனது இமேஜைத் தாண்டி நடிகை ரோஜா கொடுத்துள்ள அசாத்திய பங்களிப்பும் படத்திற்குப் பெரிய பலம்” என்றனர்.

இயக்குநர் பி. வாசு மற்றும் கண்ணன் ஆகியோர் பேசுகையில்,

“எப்போதும் ஜாலியாக இருக்கும் கங்கை அமரனை மிகவும் கோபமான, அழுத்தமான கதாபாத்திரத்தில் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.

ஒவ்வொரு பிரேமிலும் அவர் காட்டியுள்ள நடிப்பு ரசிகர்களை வியக்க வைக்கும்.

சத்யஜோதி பிலிம்ஸ் கதையைத் தேர்வு செய்துவிட்டாலே பாதி வெற்றி உறுதி.

முதல் படத்திலேயே தர்ஷனுக்கு இவ்வளவு வலிமையான போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் கிடைத்திருப்பது அவரது சிறப்பான எதிர்காலத்திற்கு வித்திடும்” என்றனர்.

நடிகர் இளவரசு பேசுகையில்,

“‘லெனின் பாண்டியன்’ என்ற தலைப்பு கம்யூனிஸ்ட் இயக்கத்தை வளர்த்த மதுரையின் ரெட்ரோ கால நினைவுகளைக் கொண்டு வருவதாகக்” கூறினார்.

இசையமைப்பாளர் இளையராஜா பேசுகையில்,,

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நேர மேலாண்மை குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். மேலும், “சிவாஜி கணேசனின் நடிப்பு வம்சாவளியையும் பெயரையும் காப்பாற்றும் வகையில் தர்ஷன் கணேசன் இத்திரைப்படத்தில் மிகவும் நேர்த்தியாக நடித்துள்ளார்” என்று பாராட்டி வாழ்த்தினார்.

அறிமுக இயக்குநர் D.D. பாலச்சந்திரன் பேசுகையில்,

“தன் போன்ற ஒரு புதுமுகத்தை நம்பி இந்த மாபெரும் வாய்ப்பை வழங்கிய சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்குத் எனது நெஞ்சார்ந்த நன்றி.

நாயகன் தர்ஷன் கணேசன் பேசும்போது, “செப்டம்பர் 12, 2026 எனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள். எனது நடிப்புப் பயணத்திற்கு ஆதரவாக நின்ற குடும்பத்தினருக்கும், என் மீது நம்பிக்கை வைத்த சத்யஜோதி பிலிம்ஸ் குடும்பத்திற்கும் நன்றி. கங்கை அமரன், ரோஜா மற்றும் ஸ்ரித்தா ராவ் ஆகியோருடன் பணியாற்றியது ஒரு சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது” என்றார்.

இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில்,

“எனது அப்பா கங்கை அமரன் எப்போதுமே சற்று ஓவராக நடிப்பார். ஆனால், இப்படத்தில் அவரை மிகவும் இயல்பாக நடிக்க வைத்த பெருமை இயக்குநர் பாலச்சந்திரனையே சேரும்.

ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, எவ்வித கமர்சியல் சமரசமும் இன்றி மிகவும் அழுத்தமான கதையாக இப்படம் உருவாகியுள்ளது” என்றார்.

நடிகை ரோஜா பேசுகையில்,

“எனது முதல் படமான ‘செம்பருத்தி’ படத்திற்கு இசையமைத்த இளையராஜா சாரே இந்த ரீ-என்ட்ரி படத்திற்கும் இசையமைத்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சி.

இயக்குநர் பாலச்சந்திரன் விவரித்த கதையின் பார்வையும், சத்யஜோதி பிலிம்ஸின் பாரம்பரியமும் தன்னை மீண்டும் நடிக்கத் தூண்டியது..” என்றார்.

75 வயது முதியவர் ஒருவர் போலீஸ் பாதுகாப்புடன் இருப்பதன் பின்னணி என்ன என்ற விறுவிறுப்பான கேள்வியுடன், உண்மைக்கு மிக நெருக்கமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த “லெனின் பாண்டியன்” திரைப்படம் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தரும் எனப் படக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Our Score