நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘தகப்பன்’.
இந்தப் படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய அனுபவம் கொண்ட சுயாதீன இசைக்கலைஞர் மார்ஷல் ராபின்சன் இசையமைக்கிறார்.
M.சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் படத் தொகுப்பையும், K.B. நந்தபாலன் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர்.
சண்டைக் காட்சிகளை மகேஷ் மேத்யூ, ஆடை வடிவமைப்பை M. செல்வராஜ் மற்றும் ரிதேஷ் செல்வராஜ், ஒலிப்பதிவை T. உதய் குமார் மேற்கொள்கின்றனர்.
புகைப்படங்களை அன்பு பதிவு செய்கிறார். நிர்வாகத் தயாரிப்பாளராக R. பாலகுமார், விநியோகத் தலைவராக பிரிதிவிராஜா சின்னசாமி, பத்திரிக்கை தொடர்பாளராக யுவராஜ், விளம்பர வடிவமைப்பாளராக தினேஷ் அசோக் பணியாற்றுகின்றனர்.
‘தெனாவெட்டு’ திரைப்படத்திற்குப் பிறகு, முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் ஜீவா நடிக்கும் படமாக இந்தத் ‘தகப்பன்’ உருவாகியுள்ளது.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்ப பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாக வைத்து உருவாகும் ஆழமான குடும்பக் கதையாக இந்த ‘தகப்பன்’ படம் உருவாகியுள்ளது.
முழுக்க, முழுக்க கிராமத்து மண்வாசனையுடன் உருவாகியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.
45 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க படக் குழு திட்டமிட்டிருந்த நிலையில், படக் குழுவினர் அனைவரின் சிறப்பான ஒத்துழைப்பால் வெறும் 40 நாட்களிலேயே படப்பிடிப்பினை முடித்துள்ளார்கள்.
படப்பிடிப்பு நிறைவு குறித்து இயக்குநர் ரா. வெங்கட் கூறுகையில்..,
“திட்டமிட்டதைவிட முன்னதாக படப்பிடிப்பை முடிக்க முடிந்ததற்கு நடிகர் ஜீவாவின் அபாரமான அர்ப்பணிப்பும் ஒத்துழைப்பும்தான் முக்கிய காரணம்.
மேலும், கதாநாயகி ரஜிஷா விஜயனின் சிறப்பான ஒத்துழைப்பு, ஒளிப்பதிவாளர் சுகுமாரின் பங்களிப்பு மற்றும் ஒட்டு மொத்த தொழில் நுட்பக் குழுவினரின் அர்ப்பணிப்பான உழைப்பாலேயே 45 நாட்கள் திட்டமிடப்பட்ட படப்பிடிப்பை 40 நாட்களில் நிறைவு செய்ய முடிந்தது. இதற்காக படக் குழுவினர் அனைவருக்கும் எனது நன்றி” என்றார்.
இந்தத் ‘தகப்பன்’ படத்தின் பயணம் மேலூர் பகுதியில் உள்ள கோயிலில் நடைபெற்ற துவக்க விழாவுடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு கட்டங்களாக படப்பிடிப்பு நடத்தப்பட்டதுடன், மதுரை நகரிலும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
சிறப்பம்சமாக, படப்பிடிப்பு தொடங்கிய அதே மேலூர் பகுதியில் உள்ள மேலவளவு கருப்பு கோயிலிலேயே படத்தின் இறுதிக்கட்ட இரவு நேரப் படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது.
படம் தொடங்கிய இடத்திலேயே படப்பிடிப்பை நிறைவு செய்தது ஒட்டு மொத்த படக் குழுவினருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, படக் குழுவினர் மேலூர் மேலவளவு கருப்பு கோயிலில் கிடா வெட்டி, பொதுமக்களுக்கு விருந்து வழங்கி, அப்பகுதி மக்களுடன் இணைந்து இந்த மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளனர்.
படப்பிடிப்பு நிறைவைக் கொண்டாடிய படக் குழுவின் இந்த செயல், அப்பகுதி மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஜீவாவின் திரைப் பயணத்தில் வித்தியாசமான மற்றும் முக்கியமான படமாக இது அமையும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.
தற்போது இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வரும் படக் குழு, இப்படத்தை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது.










