எஸ்.வி.புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவசங்கர் தயாரிப்பில் உருவாகும் படம் ‘அழகர் யானை’.
இந்தப் படத்தில் புகழ் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் ‘காடுவெட்டி’ விஸ்மியா, நந்தினி, ஆர்யன், ஆடுகளம் முருகதாஸ் மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் காருண்யா, கோகுல் நடிக்கின்றனர். இவர்கள் தவிர 80 அடி உயர யானை ஒன்று இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது.
தயாரிப்பு ; SV புரொடக்ஷன்ஸ் / சிவசங்கர் இயக்கம் ; மங்களேஷ்வரன் இசை ; ஸ்ரீகாந்த் தேவா படத்தொகுப்பு ; சாபு ஜோசப் ஒளிப்பதிவு ; சபா குமார் பாடல்கள் ; அருண் பாரதி, நந்தலாலா, சாரதி, பத்திரிக்கை தொடர்பு ; KSK செல்வகுமார்.
படம் குறித்து இயக்குநர் மங்களேஷ்வரன் கூறும்போது, “இன்றைய சூழலில் வாழ்வின் மீதான நம்பிக்கை என்பது வாழ்க்கையில் பலருக்கும் குறைந்து வருகிறது. ஒருவருக்கு பணமோ மருத்துவ உதவியோ கொடுத்து உதவுவதைவிட அவர்களுக்கு மனோரீதியாக நாம் தரும் நம்பிக்கை என்பதே மிக அவசியமாக இருக்கிறது.
அப்படி ஒரு நம்பிக்கையை தரும் படமாக இந்த ‘அழகர் யானை’ உருவாகிறது.. எல்லோருக்குமான மழையையும் காற்றையும் போல எல்லோருக்கும் அன்பையும் நம்பிக்கையையும் விதைப்பதே இந்த ‘அழகர் யானை’ திரைப்படம்.
கங்கை கொண்ட சோழபுரத்தில் 169 அடி உயரத்தில் ஒரு யானை சிலை இருக்கிறது. ராஜேந்திர சோழன் வெற்றி கொண்ட பிறகு அந்த யானையை நிறுவி அதற்கு ‘அழகர் யானை’ என பெயர் வைத்தார்.
ஒரு சோழ மன்னன் பாண்டிய நாட்டில் பயன்படுத்தப்படும் ‘அழகர்’ என்கிற பெயரை வைத்துள்ளார். அந்த மாதிரி ஒரு நம்பிக்கையை விதைக்கும்விதமாகத்தான் ‘அழகர் யானை’ என்கிற பெயரை படத்திற்கு வைத்துள்ளோம்.
எம்ஜிஆரின் ‘நல்ல நேரம்’, ரஜினிகாந்தின் ‘அன்னை ஓர் ஆலயம்’, கமலின் ‘ராம் லட்சுமண்’ ஆகிய படங்களைப் போல யானையை மையப்படுத்தி குழந்தைகள் ரசிக்கும்விதமாக இந்தப் படம் உருவாகிறது.
இந்த படத்தில் குழந்தைகள் நடிப்பதுடன் யானையும், குழந்தைகளுக்கு ரொம்பவே பிடித்த விஜய் டிவி புகழும் நடிப்பதால் நிச்சயம் குழந்தைகள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரையும் இந்த படம் கவரும். நகைச்சுவை நடிகரான ‘ஆடுகளம்’ முருகதாஸ், வில்லன் நடிகர் ஆர்யன் இருவருமே இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்” என்றார்.
இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இஸ்ரோ இணை இயக்குநர் S.V. சர்மா, கர்நாடக டிஜிபி K. ராமச்சந்திர ராவ், பிரதாங்குமார் IAS, நீதி அரசர் ராஜீவ் கவுடா, அக்ஷ்ய் பூதகிரே ஆகியோர் பூஜையை துவக்கி வைத்தனர்.
மலை அடிவாரத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நடக்கும் கதை என்பதால் இதன் படப்பிடிப்பு கிருஷ்ணகிரி மற்றும் கேரளாவில் நடைபெற இருக்கிறது.









