இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு நாயகனாக நடித்து பெரும் வெற்றி பெற்ற ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ மற்றும் விஜய், ஶ்ரீ தேவி, சுதீப் நடித்த ‘புலி’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய சிம்புதேவனின் புதிய பான்-இந்தியா படம் ‘போட்’.
மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் பிரபா பிரேம்குமாரின் பிரமாண்ட தயாரிப்பில் முழுக்க முழுக்க கடலில் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த ‘போட்’ திரைப்படம்.
யோகி பாபு, கௌரி ஜி.கிஷன் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த், லீலா மற்றும் பிரபல நடிகர், நடிகைகள் நடித்துள்ள இத்திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது.
முற்றிலும் வித்தியாசமான இந்த ‘போட்’ திரைப்படத்தின் கதை 1940-ம் ஆண்டின் பின்னணியில் நடைபெறுகிறது. சென்னை மீது ஜப்பானிய கப்பலான எம்டனில் இருந்து குண்டு வீசியபோது உயிருக்கு பயந்து 10 பேர் ஒரு சின்ன படகில் கடலுக்குள் தப்பிக்கிறார்கள். எதிர்பாராதவிதமாக நடுக்கடலில் அந்த படகு நகர முடியாமல் நின்று விடுகிறது.
அந்த பரபரப்பான சமயத்தில் படகு ஓட்டையாகி கொஞ்சம் கொஞ்சமாக மூழ்க, ஒரு பெரிய சுறாவும் படகை சுற்றி வர, படகில் உள்ளவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
முழுக்க, முழுக்க கடலில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் திரில்லர், ஆக்ஷன், பொலிட்டிக்கல் காமெடியாக இருக்கும்.
ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்த ‘போட்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவை மாதேஷ் மாணிக்கம் கையாண்டுள்ளார். படத் தொகுப்புக்கு தினேஷும் தயாரிப்பு வடிவமைப்புக்கு டி சந்தானமும் பொறுப்பேற்றுள்ளனர்.
இந்த ‘போட்’ திரைப்படம் வரும் 2024-ம் ஆண்டு பிப்ரவரியில் 5 மொழிகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.










