full screen background image

சூப்பர் ஸ்டார் ரஜினி பாராட்டிய ‘காவி ஆவி நடுவுல தேவி’ படத்தின் டிரெயிலர்

சூப்பர் ஸ்டார் ரஜினி பாராட்டிய ‘காவி ஆவி நடுவுல தேவி’ படத்தின் டிரெயிலர்

தனது 55 வருட தமிழ்த் திரையுலக பயணத்தில் 250 படங்களுக்கு மேல் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் கதாசிரியரும், இயக்குநருமான வி.சி.குகநாதன். 

புரட்சித் தலைவர்  எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோரின் படங்களுக்கு    கதாசிரியராகப் பணியாற்றியவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இரண்டு வெற்றிப் படங்கள் உட்பட கிட்டத்தட்ட 25 படங்கள்வரை இயக்கியவர்.

தற்போது சினி கம்பைன்ஸ் சார்பில் ஆரூரான் தயாரிப்பில் உருவாகும் ‘காவி  ஆவி நடுவுல தேவி’ என்கிற படத்திற்கு கதை எழுதியுள்ளார் வி.சி குகநாதன்.

இந்தப் படத்தை பல படங்களுக்கு வசனம் எழுதிய புகழ்மணி திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். 

ராம்சுந்தர், பிரியங்கா இருவரும் நாயகன் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் நகைச்சுவை நடிகரான யோகிபாபு, மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளதுடன் 11 விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

வசனம் & இயக்கம் – தமிழ்மணி, தயாரிப்பு- ஆரூரன், ஜெயா குகநாதன், கதை – வி.சி.குகநாதன், இசை – ஸ்ரீகாந்த் தேவா, ஒளிப்பதிவு – கணேஷ், படத் தொகுப்பு  – ராஜகீர்த்தி, பாடலாசிரியர் – கிருத்திகா , ஜீவன் மயில், நடனம் – சிவசங்கர், ‘ராஜ்’ சங்கர், சண்டை – சூப்பர் சுப்பராயன், தயாரிப்பு நிர்வாகி – பி.என்.சுவாமிநாதன், பத்திரிகை தொடர்பு – விஜய முரளி, ரியாஸ் K.அஹ்மத்.

இந்தப் படத்தின் கதை பற்றி கதாசிரியரும் இயக்குனருமான வி.சி.குகநாதன்  பேசும்போது, “இது நான் கதை எழுதும் 275-வது படம். என்னுடைய 55 வருட திரையுலக அனுபவத்தில் ஒவ்வொரு படத்திலும் புதிது, புதிதாக ஏதாவது ஒரு விஷயத்தை முயற்சிப்பேன். அந்த வகையில் காமெடி கலந்து இந்த படத்தின் கதையை உருவாக்கி உள்ளேன்.

நகரத்தில் மையப் பகுதியில் 3 சடலங்கள் தொங்க விடப்பட்டுள்ளன. கடத்தல், ரவுடியிசம் என அராஜகம் பண்ணிய இவர்களை கொன்றது யார் என போலீஸ் தீவிரமாக விசாரிக்கிறது. மருத்துவ பரிசோதனையில்கூட இவர்கள் கொல்லப்பட்டார்களா, தற்கொலை செய்து கொண்டார்களா என்கிற உறுதியான முடிவு தெரியாத நிலையில் போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். 

அந்தப் பகுதியில் பாபா கேபிள் டிவியில் புலனாய்வு பத்திரிக்கையாளராக பணியாற்றும் அதிசயா என்கிற இளம்பெண், போலீசாரே கண்டுபிடிக்க திணறும் இந்த மூன்று கொலைகளை செய்தது யார் என்பதை நான் கண்டுபிடித்து மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்துவேன் என சவால் விடுகிறார்.

இந்த இரண்டு தரப்பில் யார் கொலையாளிகளை கண்டுபிடிக்கிறார்கள் என்பதுதான் கதை. இதை முழுக்க, முழுக்க நகைச்சுவை கலந்து கொடுத்திருக்கிறேன்…” என்றார்.

தற்போது இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த டிரைலரை பார்த்துவிட்டு, “ரொம்ப இன்ட்ரஸ்டிங்காக  இருக்கு” என்று பாராட்டியுள்ளார்.

தற்போது இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Our Score