full screen background image

பிரியங்கா உபேந்திராவின் ‘டிடெக்டிவ் தீக்‌ஷனா’ ஐந்து மொழிகளில் வெளியாகிறது

பிரியங்கா உபேந்திராவின் ‘டிடெக்டிவ் தீக்‌ஷனா’ ஐந்து மொழிகளில் வெளியாகிறது
மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவரான நடிகை பிரியங்கா திரிவேதி 1990-களின் பிற்பகுதியிலும், 2000-களின் முற்பகுதியிலும் பெங்காலி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடத் திரைப்படங்களில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தார். பிரபல கன்னட ஸ்டார் ஹீரோவாந உபேந்திராவை திருமணம் செய்து பிரியங்கா உபேந்திராவாக மாறியும் பல படங்களில் நடித்தவர்.
 
இவர் நடித்திருக்கும் 50-வது படம்  ‘டிடெக்டிவ் தீக்‌ஷனா”. இந்த ‘டிடெக்டிவ் தீக்‌ஷனா” படத்தை த்ரி விக்ரம் ரகு இயக்கியிருக்கிறார். தயாரிப்பாளர்கள் குத்த முனி பிரசன்னா & ஜி.முனி வெங்கட் சரண் ஆகியோர் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.  புருஷோத்தம்.பி (SDC) உடன் இணைந்து தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
 
இந்தப் படம் குறித்து நடிகை பிரியங்கா உபேந்திரா பேசும்போது, “நான் அமெரிக்காவிலும், சிங்கப்பூரிலும் வளர்ந்தேன். என்னுடைய 16-வது வயதில் ‘மிஸ் கொல்கத்தா’ ஆனேன். பெங்காலி திரைப்படத் துறையில் எனது வாழ்க்கையைத் தொடங்கினேன்.
 
 
1999 – 2003-க்கு இடைப்பட்ட குறுகிய காலத்தில் பெங்காலி, ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் ஒடியா படங்களில் பணியாற்றினேன். அந்த நேரத்தில் பெரிய நட்சத்திரங்களுடன் பணியாற்றினேன். விஜயகாந்த் சார், விக்ரம் சார், பிரபுதேவா, உபேந்திரா ஆகியோருடன் படங்களில் நடித்தேன்.
 
எனது முதல் திரைப்படம் பெங்காலி திரைப்படம். தேசிய விருது பெற்ற இயக்குநரான பாசு சாட்டர்ஜி இயக்கிய ‘ஹதத் பிரிஷ்டி’ திரைப்படம் சமீபத்தில் 25 ஆண்டுகளை நிறைவு செய்தது.
 
எனது வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் நான் நிறைய கற்றுக் கொண்டேன். பிறகு எனக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்தன. அந்த நேரத்தில், நான் என் நடிப்பு வாழ்க்கையை மீண்டும் தொடங்குவேன் என்று நினைக்கவில்லை. நான் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தேன். பின்னர், மெதுவாக மீண்டும் எனக்கு வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.
 
 
அப்போதெல்லாம் சூப்பர் ஸ்டார்களை திருமணம் செய்து கொண்டு திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்த நடிகைகள் அதிகம் இல்லை. அப்படியே நடிக்க வந்தாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது அவ்வளவு சுலபமல்ல.
 
யாருடன் நடிப்பது? என்ன மாதிரியான கதைகளை தெர்ந்தெடுப்பது..? மற்ற ஹீரோக்களுடன் நடித்தால் பார்வையாளர்கள் ஏற்றுக் கொள்வார்களா..? என்ன மாதிரியான வேடங்களில் நடிக்கலாம் போன்ற பல குழப்பங்கள் இருந்தன ஆனாலும் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தேன். எனக்கென்று ஒரு இடத்தையும்  நான் தக்க வைத்துக் கொண்டேன் .
 
எனக்குக் குழந்தைகள் பிறந்த பிறகு 8 பெங்காலி படங்களில் நடிக்கும் வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. ஆனால், குழந்தைகளுடன் என்னால் கொல்கத்தா செல்ல முடியவில்லை. அதனால், கன்னட படங்களில் மட்டுமே  நடிக்க விரும்பினேன். 
 
பாலிவுட் படமான ‘ஐத்ராஸ்’ படத்தின் ரீமேக்கான ‘ஸ்ரீமதி’ படத்தில் உபேந்திராவுடன் நடித்தேன். அப்புறம் ரவிச்சந்திரன் சாருடன் ‘கிரேஸி ஸ்டார்’ பண்ணினேன்.
 
 
 
தற்போது பெண்களை முதன்மைப்படுத்தி  வரும் படங்களுக்கு மார்க்கெட் இருக்கிறது என்பது  ஒரு புதிய வழியைத் திறந்து விட்டிருக்கிறது. எனக்கு நிறைய திகில் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன. ஆனால் அந்த வகையான படங்களைத் தொடர்ந்து  செய்யக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். பிறகு ‘இரண்டாம் பாதி’, ‘தேவகி’ ஆகிய படங்களில் நடித்தேன்.  இப்போது இந்த ‘டிடெக்டிவ் தீக்‌ஷனா’ படத்தில் நடித்துள்ளேன். இது என்னுடைய 50-வது படம்.
 
ஒரு ஸ்கிரிப்டைக் கேட்கும்போது, அதை என் குழந்தைகளுடன் அமர்ந்து பார்க்கும்  படமாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். ரசிகர்களிடமிருந்து பெரும் அன்பு கிடைக்கும்பொழுது அவர்களை ஒரு போதும் ஏமாற்றிவிடக்கூடாது என்பதிலும், பெண்கள் மற்றும் குழந்தைகளை ஊக்குவிக்கும் பாத்திரங்கள் மற்றும் படங்களில் நடிக்க விரும்புகிறேன்.
 
சமூக வலைதளங்களில் பல திருமணமான பெண்கள் என்னை சக்தி வாய்ந்த வேடங்களில் பார்க்கும்பொழுது சக்தி வாய்ந்ததாக உணர்கிறேன் என்று என்னிடம் கூறுகிறார்கள். அதைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறேன்.
 
இந்த ‘டிடெக்டிவ் தீக்‌ஷனா’ படத்தின் இயக்குநரான ரகு கடின உழைப்பாளி.  நான் ஏற்கனவே அவருடன்  பணியாற்றியிருக்கிறேன், அவருடைய அர்ப்பணிப்பு எனக்குத் தெரியும். படத்தின் கதையை என்னிடம் சொன்ன பொழுது. இதுவரை யாரும் செய்திடாத கதாபாத்திரமாக எனக்கு தோன்றியது. எனவே நான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
 
இப்படிப்பட்ட சூப்பர் ஹீரோ  ஆக்‌ஷன் படம் செய்ய உடல் ரீதியாக ஃபிட்டாக இருக்க வேண்டும். கதாபாத்திரத்தின்  உடல் மொழி, சின்ன சின்ன நுணுக்கமான விசயங்களைக்கூட பார்த்து, பார்த்து செய்திருக்கிறோம். இந்த கதாபாத்திரம்  சக்திவாய்ந்த, அறிவார்ந்த, துணிச்சலான பெண்களை பிரதிபலிக்கிறது.
 
இது பல பெண்களுக்கு ஊக்கமளிக்கும். குறிப்பாக ஆண் ஹீரோக்களைப் பார்க்கும் பெண்கள் இப்போது பெண் சூப்பர் ஹீரோக்களை ‘டிடெக்டிவ் தீக்‌ஷனா’-வில் பார்க்கலாம்.
 
பெண்கள் சக்தி வாய்ந்தவர்களாகவும், புத்திசாலிகளாகவும், துணிச்சலானவர்களாகவும் இருக்க முடியும் என்பதையும், ஆண்களைப் போலவே குற்றங்களைத் தீர்க்க முடியும் என்பதையும் இந்தப் படம் சொல்கிறது.   இது நிச்சயமாக புதுவிதமான அனுபவத்தை தரும்.
 
‘டிடெக்டிவ் தீக்‌ஷனா’ ஒரு மிடுக்கான ஆக்‌ஷன் எண்டர்டெய்னர்.  பார்வையாளர்களுக்கு மிகவும் பொழுதுபோக்காகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும். இது பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். வணிக ரீதியாகவும் இந்தப் படம் பெரும் வெற்றியை கொடுக்கும் என நம்புகிறோம்.
 
‘பாகுபலி’க்குப் பிறகு ‘கே.ஜி.எஃப்.’, ‘ஆர்.ஆர்.ஆர்.’, ‘காந்தாரா’ போன்ற திரைப்படங்கள் தென்னிந்திய திரைப்படத் துறைகளுக்கு இடையே இருந்த எல்லைகளை திறந்துவிட்டுள்ளன. இதனால் இந்த ‘டிடெக்டிவ் தீக்‌ஷனா’வை கன்னடம், தெலுங்கு, இந்தி, தமிழ், பெங்காலி ஆகிய மொழிகளிலும் வெளியிடுகிறோம்.
 
இந்த ‘டிடெக்டிவ் தீக்‌ஷனா’ படத்திற்குப் பிறகு நான் தற்போது ‘கர்த்தா கர்மா கிரியா’, ‘விஸ்வரூபினி ஹல்லிகெம்மா’, ‘கைமாரா’ மற்றும் பெங்காலி படமான ‘மாஸ்டர் ஆங்ஷுமான்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். இவை தவிர ‘தி வைரஸ்’, ‘கமரோட்டு செக்போஸ்ட் 2’, ‘உக்ரா அவதாரா’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன…” என்றார் பிரியங்கா உபேந்திரா.
Our Score