‘கொட்டேஷன் கேங்’ என்று உலகம் முழுவதும் அழைக்கப்படும் பணத்துக்காக சட்ட விரோத செயல்களைச் செய்யும் குழுக்களின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டு ‘கொட்டேஷன் கேங்’ என்ற பெயரிலேயே ஒரு திரைப்படம் உருவாகியிருக்கிறது.
இந்தப் படத்தை Filminati Entertainment நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் காயத்ரி சுரேஷ், விவேக் கே.கண்ணன் மற்றும் Sri Gurujothi Films நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜி.விவேகானந்தன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
பான் இந்திய படமாக பல மொழிகளில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், பிரியாமணி மற்றும் சாரா அர்ஜூன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மேலும் அஷ்ரப் மல்லிசேரி, ஜெய பிரகாஷ், அக்ஷயா, பிரதீப் குமார், விஷ்ணோ வாரியர், சோனல் கில்வானி, கியாரா, சட்டிண்டர், ஷெரின் என்று பல்வேறு மொழி நடிகர், நடிகையரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – விவேக் கே.கண்ணன், தயாரிப்பு – காயத்ரி சுரேஷ், விவேக் கே.கண்ணன், இணை தயாரிப்பு – ஜி.விவேகானந்தன், இசை – டிரம்ஸ் சிவமணி, ஒளிப்பதிவு – அருண் பத்மநாபன், படத் தொகுப்பு – கே.ஜே.வெங்கட்ராமன், கலை இயக்கம் – ஜெயக்குமார் சீனிவாசன், சண்டை இயக்கம் – ஓம் பிரகாஷ், சிறப்பு ஒப்பனை – தசரதன், பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி ஒன்.
இந்தப் படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. டீஸரில் வெளியான காட்சிகளில் அதீத வன்முறையும், வித்தியாசமான கேஸ்டிங், மேக்கப், ஆக்சன் காட்சிகள் என்று படம் வேறுவிதமான உணர்வைத் தந்திருக்கிறது.
இந்தப் படம் பற்றி இயக்குநர் விவேக் கே.கண்ணன் பேசும்போது, “இந்தக் கதையை நாங்கள் ஓடிடிக்கான படமாகத்தான் ஆரம்பித்தோம். ஆனால், இது தியேட்டருக்கான படம் என்பதை பின்புதான் உணர்ந்தோம்.
இந்தப் படம் கேங் வார் குறித்தானது கிடையாது. ஆனால் உணர்ச்சி மிகுந்த கதையாக இருக்கும். பணத்துக்காக கொலை செய்யக் கூடிய கொலைகாரர்கள் பற்றிய கதை இது. ஆக்ஷன் பற்றிய கதையும் கிடையாது. ஆனால் அங்கிருக்கும் வாழ்க்கையின் உணர்ச்சிகளைக் கொண்டது.
சென்னை, மும்பை மற்றும் காஷ்மீர் ஆகிய இடங்களில் ஹைப்பர்லிங்க் எமோஷனல் ட்ராமாவாக உருவாக்கி உள்ளோம். இந்த கதையை கோவிட் காலத்திலும் படமாக்கி உள்ளோம்.
ஏற்கனவே, நான் பிரியாமணியுடன் ஒரு புராஜெக்டில் வேலை செய்ய வேண்டி இருந்தது. நான் எப்போது இந்த கதையை அவரிடம் சொன்னேனோ அவருக்கு கதை பிடித்துப் போய் உடனே நடிக்க சம்மதம் தெரிவித்தார். அதேபோல, ஜாக்கி ஷெராப் கதைக்கு உள்ளே வந்ததும் இது பான் இந்தியா படமாக மாறிவிட்டது.
படத்தில் சன்னி லியோன் தீவிரமான நடிப்பைக் கொடுத்துள்ளார். அவரது அர்பணிப்பும் கடின உழைப்பும் மிகச் சிறந்ததாக இருந்தது. சாரா அர்ஜூன் இதுவரை கண்டிராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
படத்தின் மற்றொரு ஹை லைட் ட்ரம்ஸ் சிவமணியின் இசைதான். அவர் இந்தப் படத்திற்காக தனது சிறப்பான இசையையும், கடும் உழைப்பையும் கொடுத்துள்ளார். அதை டீசரின் இசையிலேயே நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்”. என்றார்.
இசையமைப்பாளர் சிவமணி பேசும்போது, “நாங்கள் இருவருமே வட சென்னையை சேர்ந்தவர்கள். அதனால், அவரது பார்வையை என்னால் இன்னும் சிறப்பாக புரிந்து கொள்ள முடிந்தது. என்னுடைய ஏரியாவில் இது போன்ற கேங் மற்றும் அதன் சண்டைகளைப் பார்த்து வளர்ந்திருக்கிறேன். அதனால், எங்களுடைய லோக்கல் இசை மற்றும் அதன் தன்மையை சேர்த்துள்ளோம். இந்தக் கதைக்கு அது தேவையான எமோஷனைக் கொண்டு வந்துள்ளது. இந்தக் கதையில் இசை முக்கியமானதொரு பங்கு வகிக்கிறது…” என்றார்.
படம் மிக விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.










