M.S.V. புரொடக்ஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் பொறி.செந்திவேல் கதை, வசனம் எழுதி தயாரித்துள்ள படம் ‘பரிவர்த்தனை’.
‘வெத்து வேட்டு’, ‘தி பெட்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் எஸ்.மணிபாரதி திரைக்கதை எழுதி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘நம்ம வீட்டு பொண்ணு’ தொடரின் நாயகன் சுர்ஜித் இந்த படத்தின் நாயகனாகவும், ‘ஈரமான ரோஜாவே’ தொடரில் நாயகியாக நடித்து வரும் சுவாதி இந்த படத்தின் நாயகியாகவும் நடித்துள்ளனர்.
மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ தொடரில் நடித்துள்ள ராஜேஸ்வரி மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘அன்பே வா’ தொடரின் வில்லன் பாரதி மோகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இவர்களோடு இளம் வயது நாயகர்களாக விக்ரம் ஆனந்த், மாஸ்டர் விதுன் மற்றும் இளம் வயது நாயகிகளாக சுமேகா, ஹாசினி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ரயில் கார்த்தி, திவ்யா ஸ்ரீதர், பாரதி, மேனகா, சுண்ணாம்பு செந்தில், வெற்றி நிலவன், கார் செல்வா ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – K.கோகுல், இசை – ரஷாந்த் அர்வின். நடனம் – தீனா, படத் தொகுப்பு – பன்னீர் செல்வம் ஆகியோர் தொழில் நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்துள்ளனர்.
இந்தப் படம் பற்றி இயக்குநர் மணிபாரதி பேசும்போது, “காத்திருந்தால் காலம் கடந்தாலும் காதல் கை கூடும் என்ற கருத்தை மையமாக வைத்து முழுக்க, முழுக்க இளமை ததும்பும் காதல் கதையாக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம்.
இன்றைய டிஜிட்டல் வாழ்க்கை முறையில் எதை எதையோ பரிவர்த்தனை செய்கிறோம் அதுபோல இந்தக் காதல் பரிவரித்தனையும் அனைவராலும் ரசிக்கும்படியாக இருக்கும்.
படம் முழுவதும் திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் இடமான புளியஞ்சோலையில் படமாக்கியிருக்கிறோம்.
இறுதி கட்ட பணியில் இருக்கும் இத்திரைப் படம் விரைவில் வெள்ளித்திரையில் வெளியாக உள்ளது…” என்றார் இயக்குநர் மணிபாரதி.











