full screen background image

‘ஜீவி’ படத்தின் இரண்டாம் பாகம் ரெடி..!

‘ஜீவி’ படத்தின் இரண்டாம் பாகம் ரெடி..!

வெங்கட் பிரபு – சிம்பு கூட்டணியில் ‘மாநாடு’ என்கிற மிகப் பெரிய வெற்றிப் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ் புரொடக்சன்’ நிறுவனம் தற்போது இயக்குநர் ராமின் இயக்கத்தில் நிவின்பாலி, அஞ்சலி நடிப்பில் உருவாகும் படத்தை தயாரித்து வருகின்றது.

அதேசமயம் இன்னொரு பக்கம் ‘ஜீவி-2’ என்கிற படத்தையும் சத்தமில்லாமல் தயாரித்து முடித்து விட்டது.

கடந்த 2019-ல் நடிகர் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்ற படம் ‘ஜீவி.’

இயக்குநர் V.J.கோபிநாத் இயக்கிய இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் தற்போது இந்த ‘ஜீவி-2’ உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் வெற்றி, கருணாகரன், அஸ்வினி சந்திரசேகர், ரமா, ரோகிணி, மைம் கோபி, ‘அருவி’ திருநாவுக்கரசு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – வி ஹவுஸ் புரொடக்சன் – சுரேஷ் காமாட்சி, இணை தயாரிப்பு – வெற்றிகுமரன், நாகநாதன் சேதுபதி, எழுத்து இயக்கம் – V.J.கோபிநாத், இசை – கே.எஸ்.சுந்தரமூர்த்தி, ஒளிப்பதிவு – பிரவீண் குமார், படத் தொகுப்பு – பிரவீண் கே.எல்., சண்டை பயிற்சி இயக்கம் – சுதேஷ், மக்கள் தொடர்பு – A.ஜான்.

“ஜீவி’ படத்தின் கதையே தொடர்பியல் விதியை மையப்படுத்தித்தான் உருவாக்கப்பட்டிருந்தது. எங்கோ ஏதோ ஒரு இடத்தில் ஒருத்தர் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் திரும்பவும், இன்னொரு இடத்தில் வேறு ஒருவருக்கு நடப்பதற்கு நிச்சயம் ஒரு தொடர்பு இருக்கும். அதைத் தெரிந்து கொண்ட நாயகன் அந்த நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்வார். அவரால் அது முடிந்ததா என்பதுதான் முதல் பாகத்தின் கதை.

இந்த தொடர்பியல் விதி அத்துடன் முடிந்துவிட்டதா… இல்லை மீண்டும் தொடருமா என ஹீரோவின் நண்பன் கேட்கும் கேள்வியில்தான் இந்த இரண்டாம் பாகத்தின் கதை தொடங்குகிறது. மீண்டும் இவர்கள் வாழ்வில் தொடர்பியல் விதி விளையாடியதா..? அதன் மூலம் என்னென்ன பிரச்சனைகள் உருவாகின..?

அதையெல்லாம் நாயகன் தனது புத்திசாலித்தனத்தால் கண்டுபிடித்து அதை சரி செய்தாரா..? என்பதை இந்த ‘ஜீவி-2’-வில் சொல்லியிருக்கிறோம்…” என்கிறார் இயக்குநர் V.J.கோபிநாத்.

 
Our Score