‘ஷேடோ லைட் எண்டர்டெயின்மெண்ட்’ என்ற நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தூநேரி’.
‘சதுரங்க வேட்டை’, ‘பாரிஜாதம்’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நிவின் கார்த்திக் இந்தப் படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இதில் இவர் கண்டிப்பான காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
பல மலையாளப் டங்களில் நடித்து புகழ்பெற்ற மியாஶ்ரீ கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். நடிகர் ஜான் விஜய் கதையின் நாயகனாக கருப்பசாமி என்ற வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் அஸ்மிதா, நகுல், அபிஜித், சாத்விகா என்று நான்கு குழந்தை நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.
தயாரிப்பு, இயக்கம் – சுனில் டிக்சன், ஒளிப்பதிவு – கலேஷ் மற்றும் ஆலன், ஒலி வடிவமைப்பு – ஃபிடல் காஷ்ரோ, கலை இயக்கம் – ரூபேஷ், இசை – கலையரசன், சண்டை இயக்கம் – டிரகன் ஜீரோஷ், பயர் கார்த்தி, மக்கள் தொடர்பு – A.ஜான், வெளியீடு – ‘ஆக்ஷன் ரியாக்ஷன்’ ஜெனீஷ்.
இயக்குநர் சுனில் டிக்சனை பொறுத்தவரை சினிமா இயக்கத்திற்குத்தான் இவர் புதிதே தவிர ஆன்லைன் எடிட்டிங் மற்றும் அனிமேசன் கலையில் வித்தகர். தவிர. சென்னை சில்க்ஸ், அருண் ஐஸ், சில நகைக்கடை விளம்பரங்கள் என பல விளம்பர படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர் .
‘பாபா’, ‘ஆளவந்தான்’, ‘ஆடுகளம்’, ‘கோச்சடையான்’, ‘குசேலன்’ உள்ளிட்ட பல படங்களில் இடம் பெற்ற அனிமேசன் காட்சிகளை வடிவமைத்ததில் சுனில் டிக்சனுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு.. ‘ஆடுகளம்’ திரைப்படத்தில் இடம் பெற்ற சேவல் சண்டை காட்சிகளை அனிமேசனில் செதுக்கியவர் இவரே. தற்போது இந்த ‘தூநேரி’ படத்திலும் 30 நிமிடங்களுக்கு மேல் அனிமேசன் காட்சிகளால் பிரமிக்க வைக்கும்படி உருவாக்கியுள்ளார்..
இந்தப் பட உருவாக்கம் குறித்தும் படப்பிடிப்பு ஆனுபவம் குறித்தும் இயக்குநர் சுனில் டிக்சன் பத்திரிகையாளர்களிடத்தில் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் இது குறித்துப் பேசும்போது, “விளம்பரப் படங்கள் பலவற்றில் ஆன்லைன் எடிட்டராக பணியாற்றினேன். அதில் பணிபுரிந்த அனுபவம் ஒருபக்கம் இருந்தாலும், எனக்குள் புதுப் புது கான்செப்ட்டுகளை உருவாக்கவேண்டும் என ஆர்வம் உருவானது. அதனால் விளம்பரப் படங்களை இயக்க ஆரம்பித்தேன். அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரும்விதமாக இதோ ‘தூநேரி’ படத்தின் மூலமாக சினிமாவிலும் இயக்குநராக நுழைந்துள்ளேன்.
விஷுவல் எபெகட்ஸ் துறையில் பல வருட அனுபவம் எனக்கு இருப்பதாலும், ஹாரர் படங்களில் அதற்கு நன்றாக முக்கியத்துவம் கொடுக்க முடியும் என்பதாலும் இந்த ஜானரில் முதல் படத்தை உருவாக்க முடிவு செய்தேன். மேலும் அது குழந்தைகளை மையப்படுத்திய படமாகவும் இருக்கவேண்டும் என்றும் விரும்பினேன். இந்தப் படத்தில் கிளாமருக்கு இடமே இல்லை. சொல்லப் போனால் இந்த படத்திற்கு யு சான்றிதழ்தான் தருவார்கள் என இப்போதே சொல்வேன்.
‘தூநேரி’ என்பது ஊட்டி பகுதியில் உள்ள ஒரு அழகான கிராமத்தின் பெயர். இந்தக் கதை நிகழும் களம் என்பதால் படத்திற்கும் அதே பெயரையே வைத்துவிட்டோம்.
பகலில் அழகாக காட்சியளிக்கும் இந்த கிராமத்தில் இரவில் அடுத்தடுத்து மர்மமான முறையில் சில மரணங்கள் நிகழ்கின்றன. அதனை கண்டுபிடிக்க போலீஸ் அதிகாரி நிவின் கார்த்திக் தனது மனைவி இரண்டு குழந்தைகளுடன் அங்கே வருகிறார்.
அந்த இரண்டு குழந்தைகளும் அங்கே கிராமத்தில் இருக்கும் இரண்டு சிறுவர்களுடன் நட்பாகி இந்த மரணங்களுக்கான பின்னணியில் இருக்கும் மர்மத்தை தங்கள் பாணியில் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.
அதனால் இது வழக்கமான ஹாரர் படமாக இல்லாமல், குழந்தைகளை ஈர்க்கும் விதமாக குடும்பத்தோடு கண்டு களிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட பேய் படமாக இருக்கும். குறிப்பாக சிறுவர்களோடு பேய்கள் நடத்தும் அமானுஷ்ய விளையாட்டுகள் பார்வையாளர்கள் அனைவரையும் வசியப்படுத்தும்.
இந்தப் படத்தில் நடிகர் ஜான் விஜய் கதிகலங்க வைக்கும் கருப்பசாமியாகவும், கண் கலங்க வைக்கும் கருப்பசாமியாகவும் வலு மிகுந்த அந்த பாத்திரத்தை தனது தோளில் சுமந்து நடித்துள்ளார். அடிக்கடி படப்பிடிப்பு நடைபெறும் இடங்களை மாற்றினாலும், அவரது பிசியான ஷெட்யூலிலும் எங்களுக்கு சரியான நேரம் ஒதுக்கி மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தார்.
ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, வாகமன் என நான்கு மலைப்பிரதேசங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். குறிப்பாக வாகமன் பகுதியில் ஆள் நடமாட்டமே இல்லாத காட்டுப் பகுதியில் உள்ள பங்களா ஒன்றில் இதன் படப்பிடிப்பை நடத்தினோம்.
இந்த பங்களாவுக்கு சென்று படப்பிடிப்பு நடத்திவிட்டுத் திரும்பி வருவதே மிகப் பெரிய சவாலாக இருந்தது. இரவு நேர படப்பிடிப்பின்போது புலி உறுமும் சத்தமெல்லாம் கேட்டது எங்களை அச்சுறுத்துவதாக இருந்தது. அந்தவிதமாக பல சவால்களுக்கு இடையே கிட்டத்தட்ட 70 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்…” என்றார் இயக்குநர் சுனில் டிக்சன்.
இந்த ‘தூநேரி’ திரைப்படம் வெகுவிரைவில் உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியாகிறது.









