பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான ஜே.எஸ்.கே.சதீஷ் குமார், கடந்த 2006-ம் ஆண்டிலிருந்தே திரைப்படத் துறையில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருபவர். பல தேசிய, மாநில விருது பெற்ற படங்களை தயாரித்து, தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர். சிறந்த நடிக – நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களையும் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.
சமூகத்தின் மீது கொண்ட அக்கறையால் ‘தமிழக அரசியல்’ என்ற வார இதழையும் நடத்தி வருபவர். தற்போது செல்போனில் பயன்படுத்தக் கூடிய ஒரு புதிய செயலியை அறிமுகப்படுத்தவுள்ளார்.
‘ஜே.எஸ்.கே.பிரைம் மீடியா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய செயலி அரசியல், சினிமா, ஆன்மீகம், பெண்கள், மருத்துவம், தொடர் கதைகள், சிறுகதைகள், கவிதை, கார்ட்டூன் என பல பகுதிகளை தன்னகத்தே கொண்டிருக்கும்.
அதோடு, இந்த புதிய செயலியை பயன்படுத்தி, நீங்கள் திரைப்படங்களையும் பார்க்க முடியும். இந்த செயலியை தரவிறக்கம் செய்து நிறுவியவுடனேயே உங்களுக்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை பார்க்கும் வாய்ப்பும் கிடைத்துவிடும்.
சிறந்த படங்களை, உயர்ந்த தரத்தில் இச்செயலியின் மூலம் வழங்குவதற்காக, தன்முனைப்புடன் செயல்பட்டு வரும் இக்குழுவினர், திரைப்படங்களை பகிர்மான அடிப்படையிலும், ஒட்டு மொத்தமாகவும் கையகப்படுத்தும் வேலையிலும் மும்முரம் காட்டி வருகின்றனர்.
மேலும் இத்தளத்தில் புதிய திரைப்பட வெளியீடுகளையும், தனித்துவமான வெளியீடுகளையும் அரங்கேற்ற முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.
வருகின்ற ஜூன் மாதத்தில் செயல்பாட்டுக்கு வரவுள்ள இந்த செயலியை அமேசான் ஃபயர், கூகுள் பிளே, ஆப்பிள் ஐ ஸ்டார், மற்றும் விண்டோஸ் ஆப் ஸ்டோர்களிலும் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.










