ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் K.E.ஞானவேல்ராஜா மற்றும் அபி & அபி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காட்டேரி’.
காமெடி வித் ஹாரர் திரில்லரக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க, நாயகிகளாக வரலட்சுமி, ஆத்மிகா, சோனம் பஜ்வா ஆகியோர் நடித்துள்ளனர். இதில் சோனம் பஜ்வா ஏற்கனவே ‘கப்பல்’ என்கிற படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடித்தவர்.
இவர்கள் தவிர கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பொன்னம்பலம், சேத்தன், ஜான் விஜய், ரவி மரியா, மைம் கோபி, ‘லொள்ளு சபா’ மனோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
‘யாமிருக்க பயமே’ என்கிற வெற்றிப் படத்தை இயக்கிய இயக்குநர் டீகே இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். படத்தின் ஒளிப்பதிவை விக்கி கவனிக்க, ‘யாமிருக்க பயமே’ படத்தில் பின்னணி இசையமைத்த பிரசாத் இசையமைத்திருக்கிறார்.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று காலை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் K.E.ஞானவேல்ராஜா, இயக்குநர் டீகே, வைபவ் சோனம் பஜ்வா, பொன்னம்பலம், சேத்தன், ஜான் விஜய், ரவி மரியா, மைம் கோபி, ‘லொள்ளு சபா’ மனோகர் மற்றும் படக் குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர்கள் அனைவரும் படத்தில் தாங்கள் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரத்தின் தோற்றம் மற்றும் உடையில் வந்து ஆச்சரியப்படுத்தினர்.
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்தபின் நடிகர் பொன்னம்பலம் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுதான். சொல்லப் போனால் இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்த நான்காவது நாளே படக் குழுவினர் யாருக்கும் சொல்லாமல் சஸ்பென்சாக பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுவிட்டாராம் பொன்னம்பலம்.
இந்த நிகழ்வில் பேசிய நடிகர் பொன்னம்பலம், “இந்தப் படத்தில் மிக முக்கியமான கேரக்டரை இயக்குநர் டீகே எனக்குக் கொடுத்துள்ளார். நாங்கள் ‘பிக்பாஸ்’ வீட்டில் எல்லோருக்கும் பேர் வைப்பதுபோல, இயக்குநர் டீகேவுக்கு ‘டிராகுலா கிங்’ என்கிற பட்டத்தை வழங்குகிறேன்…” என்றார்.
நடிகர் சேத்தன் பேசும்போது, “எனக்கு காமெடி பண்ண ரொம்ப ஆசை.. ஆனால் எல்லோரும் என்னை சீரியஸான ஆளாகவே பார்க்கிறார்கள். ‘தமிழ்ப் படம்-2’ அந்தக் குறையை போக்கியது. அதை தொடர்ந்து இந்த ‘காட்டேரி’ படத்திலும் காமெடி ரோலில் நடித்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது…” என்கிறார்.
‘லொள்ளு சபா’ மனோகர் பேசும்போது, “இந்தப் படத்தில் ஒரு மந்திரவாதி கேரக்டரில் நடித்துள்ளேன்.. இயக்குநர் டீகே என்னை பக்குவப்படுத்தி நடிக்க வைப்பதற்காக இலங்கைக்கெல்லாம் அழைத்து சென்றார். அதிலும் அந்த விஷ ஊசி அடிக்கும் காட்சிகளை அவர் என்னை வைத்து எடுத்தவிதம் இருக்கிறதே, ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்…” என கலகலப்பூட்டினார்.
படக் குழுவினரிலேயே ரவிமரியாவின் பேச்சுதான் கலகலப்பாகவும் மீடியாவுக்கு தீனி போடும் விதமாகவும் அமைந்தது. இந்தப் படத்திற்குள் தான் வந்தது, ஷூட்டிங் ஸ்பாட் கலாட்டாக்கள், தனக்கேற்பட்ட சோகங்கள் என அனைத்தையும் கலகலப்பாக மேடையில் கொட்டினார் ரவிமரியா.
ரவிமரியா பேசும்போது, “இந்தப் படத்தில் ஐந்து நாட்கள் நடித்திருந்த நிலையில் திரையுலக ஸ்ட்ரைக் வந்தது.. ஸ்ட்ரைக் முடிந்து படப்பிடிப்பு ஆரம்பித்தபோது இயக்குனர் டீகே என்னை அழைத்து வேறு ஒரு கேரக்டரை கொடுத்து இது சூப்பராக இருக்கும் நடியுங்கள் என கூறிவிட்டார். பின்னர்தான் தெரிந்தது.. கிட்டத்தட்ட என்னை மூன்றாவது ஹீரோயின் ரேஞ்சுக்கு மாற்றிவிட்டார்கள் என்பது.. சொல்லப் போனால் அரை ரம்பாவாகவே என்னை மாற்றிவிட்டார்கள்.
இதுவொரு பக்கம் என்றால் நாயகன் வைபவும், கருணாகரனும் என்னை படப்பிடிப்பு நாட்கள் முழுவதும் கதாநாயகி பக்கமே நெருங்க விடாமல் சதி செய்து பார்த்துக் கொண்டார்கள்.. இப்படி சின்னச் சின்ன விஷயங்கள் சோகமாக அமைந்தாலும் எனக்கு இந்த கேரக்டரில் நடிப்பது புது அனுபவமாக இருந்தது.
இதுவரையிலும் வில்லன், காமெடி கலந்த வில்லன் போன்ற கேரக்டர்களில் நடித்து வந்தேன். இயக்குநர் டீகேதான், நீங்க காமெடியனாகவே நடிங்க சார் என புது கேரக்டரில் என்னை பொருத்தியுள்ளார்.
ஹாரர் படங்களில் சந்திரமுகிக்கு பின்னர் புதுவிதமான திரைக்கதை அமைப்பில் உருவாகியுள்ள படம் என்றால் அது இந்த காட்டேரிதான் என அடித்துச் சொல்வேன்.. பாக்யராஜை போல திரைக்கதையில் வித்தியாசமாக யோசித்துள்ளார் டீகே.
அதேபோல வரலட்சுமியுடன் நடித்ததும் புது அனுபவமாக இருந்தது. ஒரு காட்சியில் அவர் என்னை உதைக்க வேண்டும். என்னிடம் ‘பாதுகாப்பு கவசம் அணிந்திருக்கீங்களா..?’ என கேட்டார் வரலட்சுமி. நான் ‘எதற்கு..?’ என கேட்க அவரோ ரொம்ப கூலாக, ‘நான் பாலா சார் ஸ்டூடண்ட்.. உதைக்கிறது எல்லாமே ரியலாவே பண்ணித்தான் பழக்கம்…’ என தன் பங்குக்கு டெரர் ஏற்றினார் வரலட்சுமி.
இன்னொரு நாயகி சோனம் பஜ்வா என்னுடன் கடைசி வரை ஒட்டவே இல்லை.. எப்படியோ இந்தப் படத்தில் என்னை கனவுக் கண்ணனாக ஆக்கிட்டாங்க…” என கலகலப்பாக தனது அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார்.
இசையமைப்பாளர் பிரசாத் பேசும்போது, “பொதுவாகவே ஹாரர் படங்கள் என்றால் எனக்கு பயம்.. அதுவும் இந்தப் படத்தின் ஹாரர் காட்சிகளை பார்த்து, இரவில் இசையமைக்க பயந்து கொண்டு பகலில்தான் இசையமைத்தேன்” என்றார்.
சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பேசும்போது, “ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு இது அறுவடைக் காலம் என சொல்லலாம்.. பண்டிகை நாட்கள் ஏதாவது ஒன்றில் புதுப் படத்திற்கு பூஜை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.. முக்கியமான ரிலீஸ் தேதிகளில் வெளியிட படங்களை தொடர்ந்து தயாராக வைத்திருக்கிறார்கள். இந்த ‘காட்டேரி’யும் மிகப் பெரிய வெற்றியைப் பெறும்” என கூறினார்.
நாயகன் வைபவ் பேசும்போது, “ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தில் ஒரு படம் நடித்துவிட வேண்டும் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை நான்கு வருடமாக துரத்தி தூரத்தில் லவ் பண்ணினேன்.. பரிசாகத்தான் இந்த ‘காட்டேரி’ வாய்ப்பு கிடைத்தது…” என்றார்.
இயக்குநர் டீகே பேசும்போது, “யாமிருக்க பயமே’ ஹிட்டானாலும் அடுத்ததாக ‘கவலை வேண்டாம்’ படம் சரியாக போகவில்லை. ஆனாலும் என் மீது நம்பிக்கை வைத்து இந்த படம் இயக்கும் வாய்ப்பை தந்தார்.. இந்தப்படத்தின் டைட்டிலையும் அவர்தான் எனக்கு கொடுத்தார்.. அவர் நம்பிக்கையை காப்பாற்றியுள்ளேன் என நினைக்கிறன்…” என்றார்.
நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, “நான் பார்த்தவரையில் இயக்குநர் டீகேவின் திறமையை இங்கே பலரும் குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்றே தோன்றுகிறது. அடுத்து மீண்டும் ஹாரர் படமா என தயங்கிய அவரை நான்தான் வற்புறுத்தி இந்தப் படம் பண்ண வைத்தேன். காரணம் இது வழக்கமான பேய்ப் படம் இல்லை.
டீகேவிடம் சூர்யா, விக்ரம் என மாஸ் ஹீரோக்களுக்கான கதைகள் கைவசம் இருக்கின்றன.. ‘காட்டேரி’ ரிலீஸுக்கு பிறகு அவர் மாஸ் இயக்குநராக மிகப் பெரிய இயக்குநர்களின் பட்டியலில் இடம் பிடிப்பார். அதேபோல வைபவுக்கும் அவரது திறமைக்கு தீனி போடும் கதைகள் கிடைக்கவில்லை என்றே சொல்வேன். அவரும்கூட, இங்கே குறைத்தே மதிப்பிடப்படுகிறார்…” என்றார்.


















