விஷால் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் நடிகர் விஷால் தயாரித்து, நடித்திருக்கும் ‘துப்பறிவாளன்’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த விழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான நடிகர் விஷால், இயக்குநர் மிஷ்கின், தயாரிப்பாளர் நந்தகோபால், இசையமைப்பாளர் அரோல் கொரொலி, ஒளிப்பதிவாளர் கார்த்திக், இயக்குநர்கள் சுசீந்திரன், பாண்டிராஜ், நடிகர் அஜய் ரத்தினம், நடிகை சிம்ரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இந்த விழாவில் நடிகர் விஷால் பேசும்போது, “ஒரு தயாரிப்பாளராகவும், நடிகராகவும் எனக்கு ‘துப்பறிவாளன்’ ‘பாண்டிய நாட்டை’ விடவும் முக்கியமான படமாகும்.
நானும் இயக்குநர் மிஷ்கினும் கடந்த எட்டு வருடங்களாக இணைந்து பணியாற்ற வேண்டும் என்று காத்திருந்தோம். அது தற்போது இந்த ‘துப்பறிவாளன்’ என்ற அருமையான படம் மூலமாக நிஜமாகியுள்ளது.
மிஷ்கின் சாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எனக்கு கிடைத்த பொக்கிஷம். ‘துப்பறிவாளன்’ திரைப்படத்தில் என்னுடைய கேரியர் பெஸ்ட் சண்டை காட்சிகளை பார்க்கலாம்.
நானும், பிரசன்னாவும் சிம்ரன் அவர்களின் மிகப் பெரிய ரசிகர்கள். அவரோடு இந்த படத்தில் பணியாற்றியது நல்ல அனுபவம். எனக்கு துப்பறியும் நிபுணர்களின் உடல் மொழி மிகவும் பிடித்துவிட்டது.
நான் பைரசி வேலை செய்யும் நபர்களை கண்டுபிடித்துவிட்டேன். எனக்கு அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றுகூட தெரியும். அவர்கள் யார்..? அவர்கள் தனி நபரா அல்லது ஒரு குழுவா என்பதை இன்னும் இரண்டு வாரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அறிவிப்பேன்.
நான் காமராஜர் அய்யா அவர்களின் வழியில் நடப்பேன். ஆனால் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன். கல்யாணம் இல்லை என்று சொன்னால் வீட்டில் அப்பா கேள்வி கேட்பார். அப்புறம் அந்த லட்சுமிகரமான பொண்ணும் சண்டைக்கு வரும். அதனால் லட்சுமிகரமான பெண்ணை கண்டிப்பாக விரைவில் திருமணம் செய்வேன். ஒட்டு மொத்த திரையுலகமே சேர்ந்து நிச்சயம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு 100-வது ஆண்டு விழாவை சிறப்பாக நடத்துவோம்…” என்றார் நடிகர் விஷால்.