தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வரும் நவம்பர் 22-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் ஏற்கனவே இரண்டு அணிகள் போட்டியிடும் நிலையில், மூன்றாவதாக ஒரு அணி களம் இறங்கியுள்ளது. ‘முன்னேற்ற அணி’ என்ற பெயரில் இவர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.
இந்த அணியில், தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பதவிகளுக்கு யாரும் போட்டியிடவில்லை. அனைவரும் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு மட்டுமே போட்டியிடுகிறார்கள்.
21 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடும் இந்த ’முன்னேற்ற அணி’யின் வேட்பாளர்களின் அறிமுக விழா இன்று காலை, சென்னையில் உள்ள பாம்குரோவ் ஓட்டலில் நடைபெற்றது.
இந்த விழாவில் 21 வேட்பாளர்களும் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
வேட்பாளர்களின் பெயர்கள் வருமாறு :
1.எஸ்.ரங்கா (எ) ரங்கா ரெட்டி
- எஸ்.வி.தங்கராஜ் – சுந்தரா டிராவல்ஸ்
- ஏ.ஏழுமலை
- எஸ்.சீனிவாசன் (எ) பவர் ஸ்டார்
- பி.ஜி.பாலாஜி
- கே.சுரேஷ் கண்ணன்
- பி.ராஜேந்திரன் (எ) கெட்டப் ராஜேந்திரன்
- எஸ்.ஜோதி
- கே.வி.குணசேகரன்
- வின்னர் பூமா ராமச்சந்திரன்
- எஸ்.கமலக்கண்ணன்
- பி.ராஜசேகரன் (எ) சாந்தகுமார்
- ஏ.ஜெமினி ராகவா
- எஸ்.சேகர்
- கே.ஆர்.சுரேஷ்
- Lr.Dr.ஆதிவெங்கடாசலம் MA, ML, D.HUM.,
- வி.சி.கணேசன்
- பி.ராஜேந்திரன்
- பெஞ்சமின்
- எம்.எஸ்.யாகூப்தீன்
- பி.செல்வகுமார் (எ) நண்டு பாஸ்கி
வேட்பாளர்கள் அறிமுக விழாவில் முன்னேற்ற அணியினர் பேசும்போது, “இந்தத் தேர்தலில் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகப் பதவிகளுக்கு நாங்கள் யாரும் போட்டியிடவில்லை. அனைவரும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு மட்டுமே போட்டியிடுகிறோம்.
இதற்கு காரணம், ஒவ்வொரு முறையும் போட்டியிடும் அணி மற்றும் அந்த அணியைச் சார்ந்தவர்கள், சிலருக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால், சிறு பட தயாரிப்பாளர்களின் கோரிக்கைகள் மற்றும் தேர்தலுக்கு முன்பு கொடுக்கப்பட்டும் வாக்குறுதிகள் அனைத்தும் கிடப்பில் போடப்படுகின்றன.
எனவேதான் நாங்கள் எந்த அணியையும் சாராமல், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு மட்டுமே போட்டிடுகிறோம்.
எங்களது ‘தயாரிப்பாளர்கள் முன்னேற்ற அணி’யில் இருப்பவர்கள் அனைவரும் 15 வருட திரைப்பட தயாரிப்பு அனுபவம் கொண்டவர்கள். அதுமட்டுமின்றி, நாங்கள் அனைவரும் பல வருடங்களாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் செயற்குழு உறுப்பினர்களாக பதவி வகித்ததோடு, பலரது வெற்றிக்காக உழைத்திருக்கிறோம்.
சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறோம்.
அதனால், நாங்கள் அனைவரும் வெற்றி பெறுவது உறுதி.
நாங்கள் வெற்றி பெற்று வரும்பட்சத்தில், தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புக்கு யார் வந்தாலும், அவர்களை வரவேற்போம்.
அதே சமயம், எங்களுடைய கோரிக்கைகளையும், சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் நடவடிக்கைகைகளும் அவர்கள் மேற்கொள்ள வேண்டும். அப்படி அவர்கள் செய்யவில்லை என்றால், நாங்கள் அவர்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டோம்.
எங்களுடைய முக்கிய கோரிக்கைகள் என்னவென்றால்,
சிறு முதலீட்டு திரைப்படங்களை தொலைக்காட்சிகள் வாங்க வேண்டும்.
எப்.எம்.எஸ். என்று செல்லக் கூடிய வெளிநாட்டு உரிமம் விற்பனையாக வேண்டும்.
கியூப் உள்ளிட்ட டிஜிட்டல் தொழில் நுட்பங்களை ஒழுங்கு முறைப்படுத்தி சிறு பட தயாரிப்பாளர்களுக்கு இழப்பீடு ஏற்படாமல் செய்ய வேண்டும்.
இந்தி டப்பிங் உரிமை விற்பனை முறைப்படுத்த வேண்டும்.
இந்த நான்கு கோரிக்கைகளும் அனைத்து சிறு முதலீட்டு படங்களுக்கும் நிறைவேறும் வகையில் நாங்கள் செயல்படுவோம்.
தற்போதைய காலக்கட்டத்தில் முதலீடு செய்து திரைப்படம் தயாரிக்கும் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு வருமானம் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. ஆனால், வருமானம் வருவதற்கான அனைத்து சூழல்களும் இருந்தாலும், அவற்றை சிலர் திட்டமிட்டு தடுக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எதிராக நாங்கள் செயல்பட்டு சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு வருமானம் வரும் வகையில் பணியாற்றுவோம்…” என்றனர்.