“24’ படத்தில் நடிகர் சூர்யா மூன்று வேடங்களுக்கும் ரிஸ்க் எடுத்து நடித்தார் என்பதே உண்மை…” என்கிறார் படத்தின் ஒளிப்பதிவாளரான திரு.
பி.சி.ஸ்ரீராமின் சீடரான திருநாவுக்கரசு என்ற திருவை தனது ‘மகளிர் மட்டும்’ படத்தின் மூலமாக ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தியவர் உலக நாயகன் கமல்ஹாசன்தான்.
இதன் பின்பு திரு ‘ஹேராம்’, ’ஆளவந்தான்’, ’காதலா காதலா’, என்று வரிசையாக கமல் படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். பிரியதர்சன் இயக்கிய ‘காஞ்சிவரம்’ இவரது மற்றொரு அடையாளம். இந்தியில் ‘கரம் மசாலா’, ‘பூல் புகல்யா’, ‘ஆக்ரோஷ்’. ‘க்ரிஷ்-3’ என்று பத்துக்கும் மேற்பட்ட மெகா பட்ஜெட் இந்தி படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர் பட்டியலில் இடம் பிடித்தவர்.
இப்போது ஆறு வருட இடைவெளிக்குப் பின் சூரியாவின் ‘24’ படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார்.
அவர் ‘24’ படம் பற்றியும், நடிகர் சூர்யா பற்றியும் விரிவாகப் பேசினார் திரு.
“சூர்யா தவிர வேறு யார் தயாரிப்பாளராக இருந்திருந்தாலும் இந்த ‘24’ திரைப்படம் இவ்வளவு சீக்கிரமாக முடிவடைந்திருக்காது. தடையின்றி படப்பிடிப்பு நடத்த, படப்பிடிப்பு குழுவுக்கு என்னென்ன தேவைப்படுகிறதோ அவை அனைத்தையும் ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் உடனுக்குடன் வாங்கிக் கொடுத்து எங்களை ஊக்குவித்தார் சூர்யா.
எல்லா ஹீரோக்களுமே தங்களை சினிமாவுக்காக அர்ப்பணித்து கொண்டவர்கள்தான் என்றாலும் சூர்யா இன்னும் ஒரு படி மேல் தனது டெடிக்கேசனை ப்ராக்டிக்கலாகவும் செயல்படுத்துவார். இதில் ‘ஆத்ரேயா’ என்கிற வில்லன் கதாப்பாத்திரத்தை மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்தார் சூரியா.
இன்று சினிமாவில் தொழில் நுட்பம் மிகவும் வளர்ந்துவிட்டது. இது சினிமாவுக்கு மிகவும் பெரிய சவாலாகவும் உள்ளது. ஆனால் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் விதமாக கதைகள் அமைவதில்லை.. ஆனால் அந்த தொழில் நுட்பத்தை நன்கு செயல்படுத்த உதவும்விதமாக அமைந்தது இந்த ‘24’ படத்தின் கதைக் களம். இயக்குநர் விக்ரம் குமாரின் நுணுக்கமான திரைக்கதை இதன் சிறப்பு அம்சம்.
ஆறு ஆண்டு காலமாக தமிழுக்கு ஏன் வரவில்லை என்று என்னிடம் இப்போதும் கேட்கிறார்கள். ஹிந்தியில் நான் பணியற்றிகொண்டிருந்ததால் நேரமின்மை ஒரு காரணம் என்றாலும், ஒரு நல்ல படத்துக்காக காத்திருந்தேன் என்பதுதான் உண்மை. அந்த ஏக்கம் இந்த ‘24’ படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது.
இதற்கு முன் விக்ரம் குமார் அவர் படங்களுக்கு என்னை அழைத்தபோதெல்லாம் அவருடன் பணியாற்ற நேரம் அமையவில்லை. விக்ரம் குமார் என்னிடம் இந்தப் படத்தின் கதையைச் சொல்லும்போது, நான் அவர் கதை சொல்லும்விதத்தை கூர்ந்து கவனித்தேன்.
கதை சொல்லி முடிந்தவுடன் நான் பதில் எதுவும் சொல்லாமல் செல்போனில் டயல் செய்தேன். அந்த ஒரு நிமிடம் அவர் என்ன இவர் என்னிடம் பதில் எதுவும் சொல்லாமல் போனை கவனித்து கொண்டிருக்கிறாரே என்று மனம் வருத்தப்பட்டிருக்கலாம். ஆனால் நான் போன் செய்தது சூர்யா ஸாருக்குத்தான்..
சூர்யாவிடம், ‘சார் கதை கேட்டேன். எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. எனக்கு இந்த படம் செய்ய வேண்டும்’ என்று விக்ரம் குமார் முன்னிலையில் சொன்னேன். எனக்கு அவ்வளவு மனநிறைவு அளித்தது. படத்தை இப்போது முழுவதுமாக பார்த்தபோது அந்த மன நிறைவு இரட்டிப்பானது.
ஒரு நல்ல படம் ரசிகர்கள் மனதில் நீங்காது இடம் பெறும். கதை, திரைக்கதையின் புதுமையுடன் புதிய தொழில் நுட்ப யுக்திகளையும் பயன்படுத்தி இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம் என்ற திருப்தியை இந்த ‘24’ படம் எனக்கு தந்துள்ளது…” என்றார் பெருமையாக..!














