தயாரிப்பாளர் குருநாத் சலசானி தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘18.05.2009.’
இந்தப் படத்தில் சுபாஷ் சந்திர போஸ், பிரபாகரன். நாகி நீடு, தான்யா, ஜேக்கப், ஸ்ரீராம், பாலாஜி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
எழுத்து – இயக்கம்: கு.கணேசன் (இவர் ஏற்கனவே தமிழ் ஈழம் பற்றி ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற படத்தை இயக்கியவர்.)
இசை – இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவு – பார்த்திபன், சுப்பிரமணியன், கலை இயக்கம் – பிரவீண், பாடல்கள் – மு.மேத்தா, பழனிபாரதி, நா.முத்துக்குமார், ஒலிக் கலவை – யுவராஜ், மக்கள் தொடர்பு – மௌனம் ரவி, தயாரிப்பு – குருநாத் சலசானி.
தமிழின வரலாற்றில் மறக்க முடியாத நாள் 2009, மே 18. ஆம்.. அன்றுதான் ஈழப் போராட்டத்தின் முள்ளிவாய்க்கால் போர் முடிவுக்கு வந்தது. லட்சணக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள். சிங்கள இனவாத அரசு தமிழ் ஈழத்து கனவை முற்றிலுமாக சிதைத்த நாள்.
2008-ம் ஆண்டு இலங்கை அரசால் திட்டமிட்டுத் தொடங்கப்பட்ட தமிழினப் படுகொலை, 18.05.2009 வரை நீடித்தது. சுமார் ஆறு மாதங்களில் ஒன்றரை லட்சம் அப்பாவி ஈழத் தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்டதையும், கடைசி நாளில் மட்டும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் உள்பட 40,000 தமிழ் உறவுகள் கொல்லப்பட்டதையும் நாம் மறந்துவிட முடியாது.
தமிழினத்தில் பிறந்த ஒரே குற்றத்துக்காக அப்பாவிப் பெண்களைக்கூட வெறி பிடித்த மாதிரி வேட்டையாடியது சிங்கள ராணுவம். நீதி கேட்டுக் கதறிய அந்த அபலைகளின் குரல் ஈழத்தின் காற்று வெளிகளில் கரைந்துவிட்டன.
தமிழின வரலாற்றில் ரத்தக் கறை படிந்த அந்த நாளை, எந்த சமரசத்துக்கும் இடம் கொடுத்துவிடாமல், ரத்தமும் சதையுமாகச் சித்தரித்திருக்கிறது இந்த ‘18.05.2009’ திரைப்படம்.
அந்த மண்ணில் விடுதலைக்காகப் போராடிய மாவீரர்கள், ராணுவத்தின் துப்பாக்கி முனையிலிருந்து அப்பாவி மக்களைக் காப்பதற்காகவே ஆயுதம் ஏந்தினர். தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல், தங்கள் மக்களுக்கு பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தனர்.
மரணத்தைத் தழுவும் நிலையிலும் தங்களது விடுதலை வேட்கையை வெளிப்படுத்த அவர்கள் தயங்கவில்லை. தமிழினத்தைத் தலை நிமிரச் செய்கிற அந்த வீரவரலாற்றை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்திருக்கிறது இந்த ‘18.05.2009’ திரைப்படம்.
18.05.2009 திரைப்படம் தமிழரின் குருதியால் எழுதப்பட்டிருக்கும் துயர வரலாறு.
தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்கும் குரலை வலுப்படுத்துகிற வரலாறு.
இதுவரை தமிழ்த் திரை மொழியில் எழுதப்படாத வரலாறு.
இந்தப் படம் வருகிற மே 18-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த வரலாற்றுக்குத் திரை வடிவத்தைத் தந்த இயக்குநர் கு.கணேசன் கர்நாடகாவில் வாழும் தமிழர். இவரது முதல் திரைப்படமான ‘ஆஷா ஜோதி’ என்ற கன்னடப் படம் மூலமாக கன்னட திரையுலகின் கவனத்தை கவர்ந்தவர். ‘சவி நிலையா’ என்கிற திரைப்படத்தின் மூலம் குழந்தைகளின் உளவியலைப் படம் பிடித்தவர்.
‘நானே சத்யா’, ‘மானவியத்தே’, ‘நவபாரதி’, ‘மன்னின மக்களு’, ‘யாரே நீ மோகினி’, ‘நம்ம மகு’, ‘அம்மடு (தெலுங்கு)’, ‘மனிதம்’(தமிழ்), தற்போது தடை செய்யப்பட்டிருக்கும் ‘போர்க்களத்தில் ஒரு பூ’ ஆகிய படைப்புகளின் மூலம் தென்னிந்திய மொழிகளில் தடம் பதித்தவர்.
2009-ல், ஈழத்தில் இனப் படுகொலை நடந்து கொண்டிருந்த சமயத்தில் பல்லாயிரக்கணக்கான கர்நாடகத் தமிழர்களை ஒருங்கிணைத்துப் போராடுவதில் பின்னணியாய் இருந்தவர்.
இனப் படுகொலைக்கு நீதி கேட்கும் ‘பொங்கு தமிழ்’ மாநாட்டை பெங்களூரில் பிரம்மாண்டமாக நடத்தி, எடியூரப்பா போன்ற கன்னட தலைவர்களைக்கூட தமிழர்களுக்காகக் குரலெழுப்ப வைத்தவர்.
தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு கர்நாடகத்தில் நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தின்போது வாங்கிய பல்லாயிரம் கையெழுத்துப் படிவங்களை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில்(ஜெனிவா) நேரடியாக ஒப்படைத்தவர்.