இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் தயாரிப்பாளர்கள் சைலேந்திர குமார், சுஜாய் குட்டி, பி. கிருஷ்ணகுமார் மற்றும் சூரஜ் சர்மா ஆகியோர் இணைந்து பக்கிம் சந்திர சட்டர்ஜியின் வங்காள நாவலான ‘ஆனந்த மட’த்தை தழுவி, ‘1770’ எனும் பெயரில் புதிய திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கிறார்கள்.
இந்த ‘1770’ திரைப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் வங்காள மொழிகளில் உருவாகவிருக்கிறது.
இந்தப் படத்தை ‘நான் ஈ’, ‘பாகுபலி’ ஆகிய படங்களின் இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமௌலியின் உதவியாளரும், ‘ஆகாஷ்வாணி’ எனும் படத்தை இயக்கிய இயக்குநருமான அஸ்வின் கங்கராஜு இயக்குகிறார்.
இந்தப் படம் பற்றி இயக்குநர் அஸ்வின் கங்கராஜு பேசுகையில், ”இந்த தலைப்பு எனக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது. ஆனால், இந்தியாவின் பிரபலமான கதாசிரியர் வி.விஜயேந்திர பிரசாத் கதை மற்றும் திரைக்கதையை எழுதி எளிமைப்படுத்தியதால், இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும் படைப்பாக உருவாகும் என நினைக்கிறேன்.
ஒரு படைப்பாளியாக, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திய படைப்புகள், வாழ்க்கையை விட உணர்வுகளும் ஆக்ஷனும் மிகுந்த கதைகளை நோக்கி ஈர்க்கப்பட்டேன். அந்தத் தருணத்தில் இந்த கதை எனக்கு பொருத்தமானதாக இருக்கும் என தோன்றியது.
தொடக்கத்தில் சிறிது தயக்கம் எட்டிப் பார்த்தது. ஆனால் கதாசிரியர் ராம் கமல் முகர்ஜியை சந்தித்ததும், கதையை அவரது கோணத்தில் கேட்டதும் எனக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டது.
தயாரிப்பாளர்களான சைலேந்திர குமார், சுஜாய் குட்டி, பி. கிருஷ்ணகுமார், சூரஜ் சர்மா ஆகியோரை மும்பையில் சந்தித்தேன். அவர்களிடம் படத்தை பற்றியும், அதனை எப்படி சாத்தியப்படுத்துவது என்பது குறித்தும் நீண்ட நேரம் விவாதித்தோம்.
தயாரிப்பாளர்களின் அக்கறையுடனான அரவணைப்பும், குழுவாக பணியாற்றும் அவர்களது அணுகுமுறையும் எனக்கு பிடித்தது. இதன் காரணங்களால் அவர்களுடன் உடனடியாக இணைந்து பணியாற்ற தொடங்கிவிட்டேன்.” என்றார்.