Jio Star Entertainment என்கிற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கோடீஸ்வர ராஜு தயாரித்துள்ள புதிய படம் ‘12.12.1950’.
வித்தியாசமான தலைப்பாக 1950-ம் வருடம் டிசம்பர் மாதம் 12-ம் தேதியைக் குறிக்கும் இந்த நாள், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளாகும். ஒரு தீவிர ரஜினி ரசிகனை பற்றிய கதை என்பதால் இதையே தலைப்பாக வைத்திருக்கிறார்களாம்.
ரஜினி சாருடைய தீவிர ரசிகனாகவும், கதையின் நாயகனாகவும் நடிகர் செல்வா நடித்திருக்கிறார். மேலும் தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், டெல்லி கணேஷ், ஜான் விஜய், பொன்னம்பலம், ரமேஷ் திலக், ஆதவன், அஜய், சாமிநாதன், ரிஷா, ஷபி, அஸ்வினி சந்திரசேகர், பிரஷாந்த், மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இளம் இசை அமைப்பாளர்கள் ஆதித்யா – சூர்யா இசை அமைக்க, தினேஷ் பொன்ராஜ் படத் தொகுப்பு செய்ய, விஷ்ணுஸ்ரீ ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எழுத்து, இயக்கம் – செல்வா.
நடிகர் செல்வா தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரியப்படுத்தி இருக்கிறார். பல்வேறு படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள இவர் ‘கோல்மால்’ என்கிற வெற்றி படத்தை இயக்கியும் உள்ளார். நீண்ட இடை வெளிக்கு பிறகு இவர் இயக்கும் இரண்டாவது படம் இதுவாகும். இந்தப் படத்தில் இவர் ‘கபாலி’ ரஜினி கெட்டப்பில் நடித்திருக்கிறார்.
நேற்று நடிகர் சிவகார்த்திகேயனால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த படத்தின் motion போஸ்டர் ரஜினி ரசிகர்களிடம் மட்டுமின்றி எல்லா தரப்பு ரசிகர்கள் இடையேயும் பெரிய வரவேற்பு பெற்றது.
படம் பற்றிப் பேசிய இயக்குநரும், நடிகருமான செல்வா, “இந்தப் படத்தின் தலைப்பு சூப்பர் ஸ்டார் ரஜினியின் சாதனையை மட்டுமின்றி, அவரது பிறந்த நாளை மட்டுமின்றி, அவரது பிறப்பையே கொண்டாடும் ஒரு தீவிர ரசிகனை பற்றிய கதை. அவரது புகழும், சாதனையும், என்னை போன்ற ரசிகர்களுக்கு மிக பெரிய உந்துதல் ஆகும்.
’12-12-1950′ என்கிற திரைப்படம் ரஜினி என்னும் மாமனிதனுடன், அவரது சாமானிய ரசிகனுக்கு இருக்கும் உறவை பற்றி சொல்லும் உணர்வுபூர்வமான கதை.
தான் தெய்வமாக கருதும், சூப்பர் ஸ்டாரின் படம் வெளிவரும் நாள் ஒரு ரசிகனுக்கு பண்டிகை போல. அத்தகைய ஒரு நாளில் அந்த படத்தை பார்க்க முடியாத சூழ்நிலை ஒரு ரசிகனுக்கு ஏற்படுகிறது. அது என்ன, அதை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதை நகைச்சுவை கலந்து உணர்வுபூர்வமாக சொல்லி இருக்கிறோம். படத்தில் அவருடைய பஞ்ச் வசனங்களை எதையும் நாங்கள் பயன்படுத்தவில்லை.
தற்போது படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து போஸ்ட் புரொடெக்சன்ஸ் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த படம் 72% நகைச்சுவையும் 28 % GST(Ganster, Comedy and Thriller)யும் கலந்தது..” என்று கூறினார் செல்வா.












