சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிக்கும் ‘ரெண்டாவது ஆட்டம்’ படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜூலை 14-ம் தேதி துவங்குகிறது.
பிக் பிரிண்ட் pictures என்னும் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பி.கார்த்திகேயன் தயாரிக்கும் ‘ரெண்டாவது ஆட்டம்’ மூலம் அறிமுகமாகிறார் புதிய இயக்குநர் பிருதிவி ஆதித்யா.
இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்க அவருடன் லட்சுமி ப்ரியா, மைம் கோபி, நந்தினி ராய், சுரேஷ் மேனன், சேதன் ஆகியோர் நடிக்கின்றனர்.
கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவில், கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைக்க, பிரவீன் ஆன்டினி படத் தொகுப்பு செய்ய , வைரபாலன் அரங்கமைக்கிறார்.
“எங்களுடைய இளம் படக் குழுவினரின் உற்சாகத்துக்கு அளவே இல்லை என்றுதான் கூற வேண்டும். சரத் சார் போன்ற ஒரு ஜாம்பவானுடன் இணைந்து பணியாற்றுவது எங்களுக்கு கிடைத்த பாக்கியம். இன்றைய சினிமாவை பற்றிய அவரது புரிதல் போற்றக் கூடியது. அவரது திறமைக்கு சவால் விடும் அளவுக்கு காட்சி அமைப்புகள் இருக்க வேண்டும் என நாங்கள் உழைக்கிறோம். பூஜையுடன் எங்கள் பணிகளை துவக்கி இருக்கிறோம். படப்பிடிப்பு ஜூலை 14-ம் தேதி துவங்க உள்ளது…” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் இயக்குநர் பிருதிவி ஆதித்யா.