இயக்குநர் வெற்றி மாறனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘விசாரணை’ திரைப்படம் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த மனித உரிமைகளுக்கான திரைப்படப் பிரிவில் விருதினைப் பெற்றுள்ளது. இந்த மாதிரியான ஒரு சர்வதேச விருதினை தமிழ்த் திரைப்படம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
மு.சந்திரகுமார் என்பவர் எழுதிய ‘லாக்கப்’ என்கிற கதையை அடிப்படையாகக் கொண்டது இந்த விசாரணை திரைப்படம். சந்திரகுமார் விசாரணைக் கைதியாக போலீஸிடம் பிடிபட்டிருந்தபோது தனக்கு நேர்ந்த கொடுமைகளைத்தான் ஒரு கதையாக இதில் பதிவு செய்திருந்தார். இன்றைக்கு ஒரு ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வரும் சந்திரகுமார் இதற்கு பின்பு மேலும் 2 நாவல்களை எழுதி புகழ் பெற்றிருக்கிறார்.
இந்த ‘விசாரணை’ திரைப்படத்தில் ஆனந்தி, சரவணா சுப்பையா, கிஷோர், முருகதாஸ், முத்துகுமார், சந்திரன், அஜய் கோஷல், மூனார் ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இசை – ஜி.வி.பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு- ராமலிங்கம், படத்தொகுப்பு – கிஷோர்.டி.இ, கதை – சந்திரகுமார் , கலை – ஜாக் , சண்டை பயிற்சி- திலீப் சுப்ராயன், ஒலிக் கலவை – பிரதாப், போர் பரம்ஸ் உதயகுமார்.
தனுஷின் வுண்டர் பார் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும், வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி இந்தப் படத்தினை இனைந்து தயாரித்துள்ளன.
படம் இன்னமும் வெளியாகவில்லையென்றாலும் இத்திரைப்படம் திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளும் தகுதியுள்ள படம் என்பதால். தற்போது இத்தாலி நாட்டின் வெனிஸில் நடைபெற்று வரும் 72-வது சர்வதேச திரைப்பட விழாவுக்கு அனுப்பப்பட்டது. அங்கு திரைப்பட விழாவின் போட்டிகள் பிரிவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டது.
இதையொட்டி படத்தின் கதாசிரியர் சந்திரகுமார், இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் தனுஷ், இயக்குநர் சமுத்திரக்கனி ஆகியோர் வெனிஸ் சென்றிருந்தனர். திரைப்பட விழாவின் இறுதியில் ‘விசாரணை’ திரைப்படம் இத்தாலியின் உலக மனித உரிமைகள் அமைப்பு வழங்கும் மனித உரிமைகளை உரக்கச் சொல்லும் திரைப்படத்திற்கான விருதினை பெற்று பெருமை பெற்றது. இதைத் தொடர்ந்து படக் குழுவினர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
இந்தப் படத்திற்கு விருது கொடுத்த்து பற்றி பேசிய இத்தாலி மனித உரிமைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ரிகார்டோ நவுரி, “இந்தப் பிரிவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த படங்கள் கலந்துகொண்டன. அவைகள் அனைத்துமே மனித உரிமைகளைப் பேசும் படங்களே. எனினும், இயக்குநர் வெற்றி மாறனின் ‘விசாரணை’ திரைப்படம் தனித்துவம் மிகுந்தது. விசாரணைக் கைதியாக இருந்து தற்போது சமூகப் போராளியாக இருக்கும் ஒருவரது அனுபவத்தை மிக அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது. இந்தியாவில் உள்ள காவல் நிலையங்களில் நிகழும் மனித உரிமை மீறல்களையும், கொடுமைகளையும் இப்படம் பதிவு செய்துள்ளது. இதனால், இப்படத்துக்கு இந்த வெனிஸ் திரைப்பட விழாவில், ‘மனித உரிமைகளுக்கான சினிமா’ என்ற பிரிவில் விருது கொடுக்கப்பட்டுள்ளது..” என்றார்.
இப்படத்தின் அனைத்துலக விநியோக உரிமைகளையும் லைகா நிறுவனம் பெற்றிருக்கிறது. விரைவில் படம் வெளியாகவுள்ளது.