full screen background image

“தனுஷ் சிங்கத்தின் பால்; தாணு ஸார் தங்கக் கிண்ணம்…” – நடிகர் விவேக்கின் ஒப்பீடு..!

“தனுஷ் சிங்கத்தின் பால்; தாணு ஸார் தங்கக் கிண்ணம்…” – நடிகர் விவேக்கின் ஒப்பீடு..!

கலைப்புலி எஸ்.தாணு அவர்களின் வி கிரியேஷன்ஸ் மற்றும் நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் இணைந்து தயாரித்து, சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான படம் ‘வேலையில்லா பட்டதாரி–2’.

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ள இந்த படத்தில் தனுஷ், கஜோல், அமலாபால், சமுத்திரக்கனி மற்றும்  விவேக் நடித்துள்ளனர்.

கடந்த 11-ம் தேதி வெளியான இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. மேலும் இந்த படத்தின் ஹிந்தி மற்றும் தெலுங்கு வெர்ஷன்கள் இம்மாதம் 18-ம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தின் வெற்றியை கொண்டாடும்வகையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று மதியம் தி பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ், விவேக், இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஆகியோர் கலந்து கொண்டார்.

படத்தின் கதாநாயகன் தனுஷ் பேசியபோது, “இந்தப் படத்தின் கதையை இயக்குநரிடம் கொடுக்கும்பொழுதே வி.ஐ.பி. முதல் பாகம் அளவிற்கு இந்த இரண்டாம் பாகத்தின் கதை இருக்காது என்று சொல்லிதான் கொடுத்தேன்.

dhanush

முதல் பாகத்தோடு தான் அனைத்து விஷயங்களையும் ஒப்பிடுவார்கள் என்பது தெரியும். ரீமேக் படங்கள் செய்யும் போதும், ஒரிஜினல் படத்தில் நடித்தவர்களின் நடிப்புதான் சிறப்பாக இருந்ததாக கருதுவார்கள். இது இயல்புதான்.

இருந்தாலும் படத்திற்குக் கிடைத்துள்ள இந்த மிகப் பெரிய வெற்றி எனக்கு மிகுந்த சந்தோஷத்தை தருகிறது. படத்திலிருக்கும் வலுவான கதைதான் படத்தின் வெற்றிக்கு முதல் காரணம்.

எனது திரையுலக வாழ்வில் முதன்மையான 3 வெற்றிப் படங்களில் இப்படமும் இருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் நேர்மறையான விஷயங்களைச் சொன்னது மட்டுமே. அன்பைப் பரப்பியதால் மட்டுமே மக்கள் குடும்பமாக வந்து படத்தைப் பார்க்கிறார்கள்.

பாஸிட்டிவிட்டிக்கு என்றைக்குமே ஒரு எனர்ஜி இருக்கும், அதுதான் இந்தப் படத்தில் ஒர்க் அவுட்டாகி இருக்கிறது. ஒரு தாய் இல்லாத வீட்டில் ஒரு தந்தை தாயாகவும், மகனுக்கு நல்ல தோழனாகவும் இருக்க வேண்டும். அதேபோல, படத்தின் இறுதியில் வில்லியாக வரும் பெண்  தோற்பதுதான் தமிழ் சினிமாவின் வழக்கமான கிளைமாக்ஸ். ஆனால் இதில் அப்படி இருக்கக் கூடாது. ஆண், பெண் இருவருமே சமம் என்று கருத்தினை வலியுறுத்திதான் கதையை மாற்றி அமைத்திருந்தேன்.

dhanush

ஒரு சிலர் படத்தில் சொல்லப்பட்ட திருக்குறள் பாக்களுக்கு அர்த்தம் சொல்லியிருக்கலாமே என்றார்கள். அப்படி சொல்லியிருந்தால் யாருமே அதற்கான அர்த்தம் என்னவென்று பார்த்திருக்க மாட்டார்கள். வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களுமே திருக்குறளில் இருக்கிறது என மக்களுக்கு தெரிந்து, படித்துப் பார்க்க வேண்டும். எனது நண்பர்கள் பலர் இப்போது திருக்குறள் புத்தகம் வாங்கிப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவே இப்படத்தின் வெற்றியாக கருதுகிறேன்.

இப்படத்தின் கதையைத் தாண்டி, முதுகெலும்பு என்றால் தாணு சார் என் மீது வைத்திருந்த நம்பிக்கை. ஒரு நடிகராக எனக்கொரு மார்க்கெட் இருக்கிறது. அதைத் தாண்டி கதையின் மீது நம்பிக்கை வைத்து தாராளமாக செலவு செய்தார் தாணு சார். இந்தளவுக்கு பிரம்மாண்டமான வெற்றி என்பது தாணு சார் இல்லாமல் நடந்திருக்குமா என்று தெரியவில்லை.

இந்த ‘வி.ஐ.பி-2’ படம் தென்னிந்தியாவில் பெரும் வெற்றியைப் பெற்றதையடுத்து வட இந்தியாவில் முதலில் 420 தியேட்டர்களை கிடைத்திருந்த நிலையில், இப்போது 1600 தியேட்டர்கள் புக் ஆகியுள்ளது. கண்டிப்பாக இந்தப் படம் ஹிந்தியிலும் நல்ல வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.

‘வேலையில்லா பட்டதாரி 3’ கண்டிப்பாக வெளிவரும். எப்போது என்பது சரியாக தெரியவில்லை. இரண்டாம் பாகத்துக்கு இருந்த பிரச்சினை, 3-ம் பாகத்துக்கு இருக்காது. அப்படத்தையும் நான் எழுதி முடித்தவுடன்தான் மற்ற விஷயங்கள் முடிவு செய்யப்படும்…” என்றார் தனுஷ்.

நடிகர் விவேக் பேசும்போது, “தாணு சாரிடம் ஒரு இன்டியூஷன் இருக்கிறது. ஏனெனில் வளர்ந்து  வருகின்ற கதாநாயகனாக இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அப்போதே அவர் சூப்பர் ஸ்டார் என்று இனம் கண்டவர். இப்போது அவருடைய ஆசிர்வாதமான கரங்கள் தனுஷிற்கு கிடைத்துள்ளது.

vivek

மேலும் டாப் 10 ஹீரோக்களில் தனுஷ் அவர்கள் இப்போது இடம் பிடித்திருப்பது மிகவும் பெருமையாக உள்ளது. வைரமுத்து அவர்கள் ஒரு பாடலில் சொன்னது போல் ‘சிங்கத்தின் பாலாகவே இருந்தாலும் அதை தங்கக் கிண்ணத்தில் வைத்துதான் கொடுக்க வேண்டும்.’ அதே போல் தனுஷ் சிங்கத்தின் பால்.. தாணு ஸார் ஒரு தங்கக் கிண்ணம்…” என்று கூறினார்.

மேலும் “பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கும் நிறுவனங்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். நீங்கள் தயாரித்து வெற்றியடையும் படங்களின் வியாபரத்தின் ஒரு சிறு பகுதியை, ஒரு சதவிகிதத் தொகையையாவது கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் செலவிட வேண்டும்…” என்று கேட்டுக் கொண்டார்.

இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசுகையில், “எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. படம் இப்போது பெரும் வெற்றியடைந்துள்ளது. இதற்கு முதல் காரணமாக இருந்த தாணு ஸாருக்கு எனது முதல் நன்றி. என்னை தன்னுடைய மகள் போல் பார்த்துக் கொண்டார்.

soundarya

பொதுவாகவே சீக்வல் படங்கள் எடுப்பதில் பெரிய சவால் இருக்கும். அதைத் தாண்டி நான் இயக்கிய படம் வெற்றி அடைந்திருப்பதில் எனக்கு பெரிய மகிழ்ச்சி. தாணு சார் பாக்ஸ் ஆபிஸ் விவரம் பற்றி சொன்னதை கேட்டபோது இது நான் இயக்கிய படமா என்று எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் ‘வி.ஜ.பி-3’-ம் பாக்த்தையும் நானே இயக்குவேன்..” என்றார்.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசும்போது, “இந்த ‘வி.ஐ.பி-2’ திரைப்படம் தற்போது உலகமெங்கும் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் இருந்து அழைத்த நண்பர் டாப் 10 ஹீரோ லிஸ்ட்டில் ‘வி.ஐ.பி-2’ படத்தின் மூலமாக தனுஷூம் இடம் பிடித்துள்ளார் என்று கூறினார். ‘வி.ஐ.பி-2’ தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் வெளிநாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது…” என்று அவர் கூறினார்.

பின்னர் வெளிநாட்டிலும், தமிழ்நாட்டிலும் (மாவட்ட வாரியாக) ‘வி.ஐ.பி.-2’ படத்தின் வசூல் பற்றிய புள்ளி விவரங்களை கூறினார். இந்தப் படத்தின் வெற்றிக்கு மிகவும் பலமாக இருந்த நடிகர் தனுஷ், இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் விவேக் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார். 

நடிகர் விவேக் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இந்தப் படத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தில் பத்து லட்சம் ரூபாயை கிராமப்புற பள்ளிகளை சீரமைக்கு தருவதாகவும் மேடையிலேயே ஒத்துக் கொண்டார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.

Our Score