தனுஷ் நடிப்பில், சவுந்தர்யா ரஜினிகாந்த் டைரக்ஷனில் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் 2–ம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் இந்தி நடிகை கஜோல் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த மாதம் திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று முன்தினம் மாலை நடந்தது.
இந்த விழாவில் நடிகை கஜோல், நடிகர் தனுஷ், நடிகர் சமுத்திரக்கனி, இயக்குநர் சவுந்தர்யா ரஜினிகாந்த், இசையமைப்பாளர் சீன் ரோல்டன், தயாரிப்பாளர் தாணு, இணை தயாரிப்பாளர் பரந்தாமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் நடிகை கஜோல் பேசுகையில், “20 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு மீண்டும் வந்துள்ளேன். 1997-ம் ஆண்டு ‘மின்சார கனவு’ படத்தில் நடித்தேன். அதன் பிறகு இப்போதுதான் 20 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழில், ‘வேலையில்லா பட்டதாரி–2’ என்ற இந்தப் படத்தில் நடித்துள்ளேன்.
இந்தப் படத்தில் நடிக்கவும் முதலில் நான் பெரிதும் பயந்தேன். ஏனென்றால் எனக்கு மொழிதான் பெரிய பிரச்சினை. ஆனால் இந்த படத்தில் என்னை நடிக்க சொல்லி தனுஷ்–ஐஸ்வர்யா தம்பதி மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோர் வற்புறுத்தி கேட்டனர்.
நான் தயங்கிய நேரத்தில், ‘இந்த கதாபாத்திரம் உங்களுக்குத்தான் நன்றாக அமையும். நீங்கள் நடியுங்கள், மீதியை நாங்கள் பார்த்து கொள்கிறோம்’ என்று ஊக்கம் அளித்தனர். அதேபோல் படப்பிடிப்பு தளத்தில் தமிழ் மொழியில் பேசி நடிக்க கஷ்டப்பட்டபோது தனுஷ், சவுந்தர்யா இருவரும் உதவி செய்தனர். எல்லா நேரத்திலும் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள்.
இந்த படத்தில் யாரும் வில்லனும் இல்லை, யாரும் ஹீரோவும் இல்லை. வெவ்வேறு மனநிலைகளுடன், வெவ்வேறு சூழ்நிலைகளில் வாழும், வெவ்வேறு எண்ணம் கொண்ட இருவர் சந்தித்தால் என்ன ஆகும் என்பதுதான் இப்படத்தின் கதை. இந்த இருவர் இடையே ஏற்படும் மோதல் சுவாரஸ்யமாக அமைந்திருக்கிறது. ரசிகர்கள் அதனை நிச்சயம் விரும்புவார்கள் என்று நம்புகிறேன்.
எனது இத்தனை ஆண்டு கால சினிமா பயணத்தில் இதுபோன்ற கதாபாத்திரம் எனக்கு அமைந்தது கிடையாது. இந்தப் படத்தில் நான் நடித்திருக்கும் வசுந்தரா என்கிற கதாபாத்திரத்தில் ஒரு மிடுக்கான பெண்ணாக நான் வாழ்ந்திருக்கிறேன்.
இந்தக் கதாபாத்திரம் பெண்மைக்கு வலு சேர்ப்பதாக அமையும். மன வலிமையுள்ள, எல்லாவகையிலும் பெருமைமிக்க ஒரு பெண் எப்படி இருப்பாள்.. அவளது குணாதிசயம் எப்படி இருக்கும் என்பதுதான் வசுந்தரா கதாபாத்திரத்தின் அடையாளம்.
எனக்கு சினிமா மீதான மோகம் குறையாது. அதேசமயம் எனது குடும்பத்தையும் அக்கறையுடன் வழி நடத்திக் கொண்டிருக்கிறேன். எனது குழந்தைகளை கவனித்துக் கொண்டே சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். பல நேரங்களில் நல்ல படங்களை தவறவிட்டு இருக்கிறேன். அதற்காக பல நேரங்களில் அழுததும் உண்டு. எனவே தொடர்ந்து நடிப்பேன்.
எனது அழகுக்கு என்ன காரணம்? எப்படி இவ்வளவு இளமையாக இருக்கிறீர்கள்? என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். எனக்கு வயதின் மீது நம்பிக்கை இல்லை. மனம் என்ன நினைக்கிறதோ, அதுதான் முகத்தின் வெளிப்பாடாக அமையும். நல்ல மனதுள்ளவர்கள் அழகாக தெரிவார்கள். அந்த வசீகரத்துக்கு காரணம் இதுதான். அப்படித்தான் நினைக்கிறேன்.
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் நடிக்க மிகவும் ஆசையாக இருக்கிறேன். ஆனால் அதற்கான நேரம் அமையவேண்டும். நல்ல கதையும் கிடைக்க வேண்டும். அதற்காகக் காத்திருக்கிறேன்…” என்றார் நடிகை கஜோல்.