full screen background image

சமுத்திரக்கனி இயக்கியிருக்கும் ‘விநோதய சித்தம்’ படம் ஓடிடியில் வெளியாகிறது

சமுத்திரக்கனி இயக்கியிருக்கும் ‘விநோதய சித்தம்’ படம் ஓடிடியில் வெளியாகிறது

‘லாக்கப்’, ‘கபெ.ரணசிங்கம்’, ”மதில்’, ‘ஒரு பக்க கதை’, ‘மலேஷியா  டு  அம்னீஷியா’,  ‘டிக்கிலோனா’ உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி  ரசிகர்களை  மகிழ்வித்ததை  தொடர்ந்து மேலும் சுவாரஸ்யமான படங்கள் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

இந்த வரிசையில் தனது அடுத்த பிரத்தியேக படமாக  விநோதய சித்தம்’ என்ற படம் வெளியாகப் போவதாக அறிவித்துள்ளது ஜீ-5 நிறுவனம்.

இந்தப் படத்தை தமிழ்ச் சினிமாவின் முன்னணி  இயக்குநரும்,  நடிகருமான  சமுத்திரக்கனி  இயக்கியதோடு அல்லாமல் படத்தின் முதன்மை  கதாபாத்திரத்திலும்  நடித்துள்ளார். பிரபல  நடிகர்  தம்பி இராமையா இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில்  முனிஸ்காந்த்,  சஞ்சிதா ஷெட்டி,  ஜெயப்பிரகாஷ்  உள்ளிட்டோர்  நடித்துள்ளனர். மூத்த ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் ஒளிப்பதிவை மேற்கொள்ள ரமேஷ்  படத் தொகுப்பு செய்துள்ளார்.

இந்தப் படம் குறித்து நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி கூறுகையில், ‘மனித  மனம்  வேடிக்கையான முறையில் நடந்து கொள்கிறது. நம்மால் அவற்றை கட்டுப்படுத்த முடியாது. இதுதான் இப்படத்தின் அடிப்படை கரு. அனைவராலும் இப்படத்தின் கதையை  உணர்ந்து கொள்ள  முடியும்.  இந்தக்  கதை  பார்வையாளர்களுடன்  உரையாடும். இந்தப்  படத்தை  பார்வையாளர்களுக்கு  காண்பிப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி…’ என்றார்.

நடிகர் தம்பி இராமையா பேசும்போது, “இந்தக்  கதை  அனைத்து  மக்களையும்  இணைக்கிறது.  இந்தப் படம் பார்த்து முடிந்தவுடன் பார்வையாளர்கள்  ஒரு  தத்துவ  நாவலை படித்து முடித்தைப்போல்  உணர்வார்கள்.  படத்தை மிகவும்  விரும்புவார்கள்..” என்றார்.

நடிகர் முனிஸ்காந்த் அவர்கள் பேசும்போது, “இந்தப் படத்தில் சமுத்திரக்கனியின்  இயக்கத்தில்  நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் எனக்கு  மிகவும்  மகிழ்ச்சிதான். ‘முண்டாசுப்பட்டி’,  ‘பசங்க-2’,  ‘மாநகரம்’,  ‘மரகத நாணயம்’ படங்களை போல் இப்படமும் எனக்கு நல்ல பெயரைத் பெற்று தரும்…”  என்றார்.

நடிகை சஞ்சிதா ஷெட்டி பேசும்போது, “அனைத்து  பெற்றோர்களும்,  குழந்தைகளும்  இந்தப் படத்தை முழுமையாக விரும்புவார்கள். இது ஒரு குடும்ப பொழுதுபோக்காக  இருக்கும்.  இந்த படத்தில் நடித்ததை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்..” என்றார்.

தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் பேசும்போது, ”தன்னால்  மட்டுமே  தனது  குடும்பத்தை  கவனித்துக்  கொள்ள  முடியும்.  தான்  இல்லையென்றால்  தனது  குடும்பத்தின்  நிலை  மிகவும்  கவலைக்கிடமாகிவிடும்  என்று  நினைக்கும்  ஒவ்வொரு  நபருக்கும்   தகுந்த  பதிலை  கூறும்  படமே இந்த ‘விநோதய சித்தம்’.  இந்தப்  படத்தின்  மூலம் ஜீ-5 தளத்துடன்  இணைந்ததில் எனக்கு மிக்க  மகிழ்ச்சி”  என்றார்.

இந்த ‘விநோதய  சித்தம்’ திரைப்படம் வரும் அக்டோபர் 13-ம் தேதியன்று ஜீ-5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

 
Our Score