தயாரிப்பாளர்கள் ஆர்.கணேஷ் மூர்த்தி மற்றும் ஜி.சௌந்தர்யா இருவரும் இணைந்து தங்களது நிறுவனமான லெமன் லீஃப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மூலம் ஒரே சமயத்தில் மூன்று திரைப்படங்களை தயாரிக்கின்றனர்.
இவற்றில் முதல் திரைப்படமான யோகி பாபு, லக்ஷ்மி மேனன் முதன்மை இடங்களில் நடிக்கும் ‘மலை’ அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது.
இரண்டாவது படமான அசோக் செல்வன், சாந்தனு மற்றும் கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் நடிக்கும் ‘ப்ளூ ஸ்டார்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், லெமன் லீஃப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட்டின் மூன்றாவது திரைப்படம் இன்று (ஜூன் 7) சென்னையில் உள்ள அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயிலில் பூஜையுடன் இனிதே தொடங்கியது.
இயக்குநர்கள் சுசீந்திரன் மற்றும் சற்குணம் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ரமேஷ் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தில், விக்ரம் பிரபு, ஈசா ரெப்பா, ‘பர்மா’ படத்தில் நாயகனாக நடித்த மைக்கேல் தங்கதுரை ஆகியோர் நடிக்கின்றனர்.
ஜிப்ரான் இசை அமைக்கும் இத்திரைப்படத்திற்கு, ‘துப்பாக்கி முனை’ மற்றும் ‘கபடதாரி’ படங்களின் ஒளிப்பதிவாளர் ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். ‘விக்ரம் வேதா’ மற்றும் ‘சுழல்’ புகழ் ரிச்சர்ட் கெவின் படத் தொகுப்பை மேற்கொள்ள உள்ளார். சண்டை காட்சிகளுக்கு ‘ராட்சசன்’ மற்றும் ‘சூரரை போற்று’ புகழ் விக்கியும், கலை இயக்கத்திற்கு ‘சுல்தான்’ மற்றும் ‘மலை’ திரைப்படங்களின் கலை இயக்குநர் ஜெயச்சந்திரனும் பொறுப்பேற்றுள்ளனர்.
இன்று பூஜையுடன் தொடங்கிய நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற உள்ளது.












