‘பாகுபலி-2’ வெற்றிப் படத்தை வெளியிட்ட பட நிறுவனம் S.N.ராஜராஜனின் கே.புரொடக்ஷன்ஸ். அடுத்து ராணா, ரெஜினா சத்யராஜ் நடிக்க இயக்குநர் சத்ய சிவாவின் இயக்கத்தில் தமிழில் ‘மடை திறந்து’ என்ற படத்தையும், தெலுங்கில் ‘1945’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறது.
இதற்கடுத்து தயாரிப்பாளர் எஸ்.என்.ராஜராஜன், ஒய்.எஸ்.ஆர் பிலிம்ஸ் சார்பில் அதன் தயாரிப்பாளரும், இசையமைப்பாளருமான யுவன்சங்கர்ராஜா, தயாரிப்பாளர் இர்பான் மாலிக் மூவரும் இணைந்து புதிய திரைப்படம் ஒன்றை கூட்டாகத் தயாரிக்கிறார்கள்.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதியும், அஞ்சலியும், நாயகன் நாயகியாக நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு – விஜய் கார்த்திக், படத் தொகுப்பு – ரூபன், இசை – யுவன் சங்கர்ராஜா, தயாரிப்பு மேற்பார்வை – சிவசங்கர், தயாரிப்பு – S.N.ராஜராஜன், யுவன்சங்கர்ராஜா, இர்பான் மாலிக், எழுத்து, இயக்கம் – அருண்குமார்.
இயக்குநர் அருண்குமார் ஏற்கெனவே விஜய் சேதுபதி நடித்த ‘பண்ணையாரும் பத்மினியும்’, மற்றும் ‘சேதுபதி’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது இவர் இயக்கும் மூன்றாவது படமாகும்.
‘சேதுபதி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அருண்குமார் இயக்கும் கமர்ஷியல் பார்முலாவுடன் கூடிய வித்தியாசமான படமான இதன் தலைப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் போன்ற இடங்களில் 30 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் தொடங்கியது. 40 நாட்கள் இடைவிடாமல் தாய்லாந்து மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் படமாக்கப்படவுள்ளது.
“படத்தின் கதையும், திரைக்கதையும் வெளிநாட்டில் நடப்பதுபோல இருப்பதால்தான் படப்பிடிப்பை வெளிநாடுகளில் நடத்துகிறோம்…” என்கிறார் இயக்குநர் அருண்குமார்.