இளைய தளபதி விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெயர் என்ன என்பது பற்றி வழக்கம்போல பலவித கிசுகிசுக்கள் பரவி வந்தன.
வரும் பொங்கல் தினத்தன்று புதிய படத்தின் பெயரை விஜய்யே அறிவிப்பார் என்று நேற்று அந்தப் படக் குழுவினர் தெரிவித்திருந்தார்கள்.
ஆனால் இன்று காலை 11 மணிக்கு திடீரென்று அவர்களே பெயரை வெளியிட்டுவிட்டார்கள்.
‘புலி’ என்று விஜய் நடிக்கும் அடுத்த படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார்களாம்.
இந்த டைட்டில் ஏற்கெனவே தயாரிப்பாளர் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டிருந்தது. பதிவு செய்திருந்தவர் இயக்குநர் ப்ளஸ் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா.
இந்த டைட்டிலிலேயே சூர்யா இயக்கத்தில் விஜ்ய முன்பு ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பும் சில நாட்கள் நடைபெற்று பின்னர் விஜய்க்கும், எஸ்.ஜே.சூர்யாவுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் படம் கைவிடப்பட்டதாம்.
தற்போது சிம்புதேவன் இயக்கும் இந்தப் படத்துக்கு ‘புலி’ என்ற டைட்டில் பொருத்தமாக இருக்கும் என்று படக் குழு தீர்மானித்ததால், இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவிடம் விஜய்யே பேசி டைட்டிலை வாங்கிவிட்டாராம்.
இந்த ‘புலி’ படம் சரித்திர கால மற்றும் சமகால பின்னணியுடன் கூடிய பேன்டஸி வகைப்பட்ட படம். இதில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாஸன், ஹன்சிகா ஆகியோர் நடிக்கிறார்கள்.
மேலும் ஸ்ரீதேவி, கிச்சா சுதீப், பிரபு, விஜயகுமார், தம்பி ராமையா, சத்யன், இமான் அண்ணாச்சி, கருணாஸ், ரோபோ சங்கர், ஜோ மல்லூரி, வித்யுலேகா ராமன், நரேன், அஜய் ரத்னம் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – நட்டி நட்ராஜ்
இசை – ஸ்ரீதேவி பிரசாத்
கலை இயக்கம் – டி.முத்துராஜ்
பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து
படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத்
நடனம் – ராஜு சுந்தரம்
உடைகள் – மனீஷ் மல்கோத்ரா, சாய் சிவா, தீபாளி நூர், சைதன்ய ராவ்
சிறப்பு மேக்கப் – என்.ஜி.ரோஷன்
இப்படத்தில் விஜய் குள்ள மனிதராக நடிப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் அவர் குள்ள மனிதராக நடிக்கவில்லை. அதே சமயம் அவர் இரட்டை வேடங்களில் நடிப்பது உண்மையே என்கிறார்கள் படக் குழுவினர்.