இயக்குநர் சுப்ரமணியம் சிவாவின் இயக்கத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ள ‘வெள்ளை யானை’ படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
2003-ம் ஆண்டு ‘திருடா திருடி’ என்ற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகத்தில் அறிமுகமானவர் இயக்குநர் சுப்ரமணியம் சிவா. அதனைத் தொடர்ந்து ‘பொறி’, ‘யோகி’, ‘சீடன்’ ஆகிய படங்களையும் சுப்ரமணியம் சிவா இயக்கியுள்ளார்.
மேலும் இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் ‘வட சென்னை’, ‘அசுரன்’ ஆகிய படங்களில் நடித்தும் உள்ளார். தற்போது இவர் நடிகர் மற்றும் இயக்குநரான சமுத்திரக்கனியை வைத்து இயக்கியுள்ள படம் ‘வெள்ளை யானை’.
இந்த ‘வெள்ளை யானை’ திரைப்படத்தை ‘WHITE LAMB TALKIES’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் S.வினோத் குமார் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடிகை ஆத்மியா நடித்துள்ளார். இவர் தமிழில் ‘மனங்கொத்தி பறவை’ என்னும் படத்தில் அறிமுகமானவர்.
மேலும் யோகிபாபு, E.ராமதாஸ், இயக்குநர் மூர்த்தி, S.S.ஸ்டான்லி, பவா செல்லத்துரை, ‘சாலை ஓரம்’ ராஜு ஆகியோரும் நடித்துள்ளனர் .
எழுத்து – இயக்கம் – சுப்ரமணியம் சிவா, தயாரிப்பு – S.வினோத்குமார் (WHITE LAMB TALKIES), தயாரிப்பு மேற்பார்வை – S.A.சிவச்சந்திரன், கலை இயக்கம் – ஆ.ஜெகதீசன், ஒளிப்பதிவு – விஷ்ணு ரங்கசாமி, படத் தொகுப்பு – ஏ.எல்.ரமேஷ், சண்டை இயக்கம் – தினேஷ் சுப்பராயன், சிறப்பு ஒலிகள் – சேது, ஆடை வடிவமைப்பு – நாகு, ஒப்பனை – A.சரவணக் குமார், B.ராஜா, விளம்பர வடிவமைப்புகள் – சசி & சசி, மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மது.
தற்போது இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். முழு படத்தையும் பார்த்த சந்தோஷ் நாராயணன் படம் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், இன்றைய விவசாயிகளின்ன் வாழ்க்கையைச் சொல்லும் மிக முக்கியமான வரலாற்றுப் பதிவாக இத்திரைப்படம் இருக்கிறது. நம் தாய் மண்ணின் இசையோடு இந்த படத்திற்கு இசையமைக்க தான் பெரும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
விவசாயம், விவசாயிகளின் வாழ்க்கையை நையாண்டியாகவும், நகைச்சுவையாகவும் சொல்லியுள்ளார் இயக்குநர் சுப்ரமணியம் சிவா.
தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.