வித்தியாசமான படைப்புகளின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்துள்ள இயக்குநர் பாலா இப்படத்தை இயக்கி வருகிறார். பாலாவின் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ‘வணங்கான்’.
சிலம்பரசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘மாநாடு’ படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சியின் ‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’ மற்றும் இயக்குநர் பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்து வருகின்றன.
இந்தப் படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோர் நடிக்கின்றனர்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதுகிறார். ஒளிப்பதிவை ஆர்.பி.குருதேவ் மேற்கொள்ள படத் தொகுப்பை சதீஷ் சூர்யா கவனிக்கிறார். கலை இயக்குனராக ஆர்.பி.நாகு பொறுப்பேற்றுள்ளார். சண்டைக் காட்சிகளை சில்வா வடிவமைக்கிறார்.
இந்த ‘வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
ஒரு கையால் பிள்ளையார் சிலையை வைத்துக் கொண்டு மற்றொரு கையால் பெரியார் சிலையை அணைத்துக் கொண்டு, சேறு படிந்த உடம்புடன் காட்சியளிக்கும் நடிகர் அருண் விஜய்யின் வித்தியாசமான தோற்றம், மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளதுடன் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
வரும் 2024 பொங்கல் பண்டிகையில் இப்படத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.