திங்க் பிக் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.எல்.அழகப்பன் தயாரிப்பில், இயக்குநர் விஜய் இயக்கியிருக்கும் படம் ‘வனமகன்’.
அடர்ந்த வனப் பகுதியை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் சாயீஷா ஜோடியாக நடித்துள்ளனர். முதன்முறையாக ஹரீஸ் ஜெயராஜ் மற்றும் மதன் கார்க்கியுடன் கை கோர்த்திருக்கிறார் இயக்குநர் விஜய்.
படத்துக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இது ஹாரிஸ் ஜெயராஜின் 50-வது படமாகவும் அமைந்திருக்கிறது. வரும் ஜூன் 23-ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.
முதலில் பேசிய பாடலாசிரியரான மதன் கார்க்கி, “பழங்குடியினர் வாழ்க்கையை சொல்லும் ஒரு மிக முக்கியமான படம். ஜெயம் ரவி இந்த மாதிரி வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதால்தான் அவர் படத்தில் வேலை செய்யும் மற்ற கலைஞர்கள் அவர்களின் திறமையை வேறு பரிமாணத்தில் வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கின்றன..
எனக்கு இந்தப் படத்துல எந்த கஷ்டமான வேலையும் இல்லை. வெறுமனே ஏ.சி. ரூம்ல உட்கார்ந்து ஈஸியா பாடல் எழுதி கொடுத்துட்டேன். ஆனா மொத்த டீமும் காட்டுல கஷ்டப்பட்டு பாட்டை ஷூட் பன்ணிட்டு வந்துருக்காங்க. அவங்க உழைப்புக்கு எனது பாராட்டுக்கள்..” என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது, “நான் பெரிய நடிகன்.. என் படத்தை ரசிகர்கள் வந்து பார்ப்பார்கள் என நினைத்து எடுக்கப்படும் படங்கள் ஒரு வகை. இன்னொரு வகை சின்சியராக நடிப்பது மட்டுமே என் வேலை என கதைக்காக மெனக்கெட்டு நடிப்பவர்கள். அந்த வகையில் ஜெயம் ரவி ரொம்ப, ரொம்ப சின்சியரான நடிகர்.
தேவையில்லாத வசனங்கள் எதுவும் படத்தில் இருக்காது. படத்தில் புலியுடனான சண்டைக் காட்சி சிறப்பாக அமைந்திருக்கிறது. படம் முடியும்போது எல்லோரும் மனநிறைவோடு திருப்தியுடன் வெளியே போவார்கள்.
தரமான படத்தை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தன் சொந்த பணத்தை எந்தவித தயக்கமும் இன்றி செலவு செய்ய நினைத்த விஜயின் கலை தாகம் பாராட்டுக்குரியது…” என்றார்.
நடிகர் தம்பி ராமையா பேசும்போது, “24 துறைகளும் மிகவும் ஆராய்ச்சி செய்து வேலை செய்துள்ள படம்தான் இந்த ‘வனமகன்’. தனி மனித உழைப்பை அதிகப்படுத்திய ஒரு படம்தான் இந்த ‘வனமகன்’.
‘மைனா’, ‘கும்கி’ படங்களுக்கு பிறகு கொஞ்சம் இடைவெளிவிட்டு காடு, மலை, பள்ளத்தாக்கு என அலைந்து திரிந்து நான் நடித்துள்ள படம் இது. படத்தில் ஆதிவாசி மனிதர்களை மிகவும் நேர்மையான முறையில் சித்தரித்து விஜய் இயக்கியிருக்கிறார்.
பழம்பெரும் நடிகர் திலீப் குமாரின் மகள் வழி பேத்தியான சாயிஷா ஒரு பேரழகி. அதனால்தான் முதல் படம் ரிலீஸ் ஆகும் முன்பே இரண்டு படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். பேராண்மை படத்தில் ஜெயம் ரவி எவ்வளவோ சிரமப்பட்டு நடித்திருந்தாலும், அதையும் தாண்டி இதில் இன்னும் சிரமப்பட்டு நடித்திருக்கிறார்…” என்றார்.
படத்தின் இயக்குநரான விஜய் பேசும்போது, “ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு படம் எனக்கு முக்கியமான படமாக அமைந்திருக்கிறது. ‘வனமகன்’ அப்படி ஒரு படம். ஜெயம் ரவி இல்லாமல் இந்த ‘வனமகன்’ இல்லை. படத்திற்காக அபாரமாக உழைத்திருக்கிறார் ஜெயம் ரவி.
தமிழ் சினிமாவுக்கு ஒரு முழுமையான நடிகையாக சாயிஷா கிடைத்திருக்கிறார். அவர் ஒரு சிறந்த டான்ஸர். சில்வா மாஸ்டரின் சண்டை வடிவமைப்பு தமிழ் சினிமாவில் சிறந்த இடத்தை பிடிக்கும்.
2010-லேயே தனஞ்செயனுக்கு இந்த கதை தெரியும். இந்த படத்தை துவக்கும் நேரத்தில் நானும் அந்த படத்தில் இருப்பேன் என தனஞ்செயன் முன் வந்தார். வினியோகஸ்தர்கள் தயவு செய்து எல்லா படத்தையும் ஆதரிக்க வேண்டும். படத்தின் பட்ஜெட்தான் விலையை நிர்ணயிக்கிறது. நீங்கள் ஆதரவு கொடுத்தால்தான் பாகுபலி, சங்கமித்ரா மாதிரி படங்கள் வர முடியும். தயாரிப்பாளர் சங்கம், தயாரிப்பாளர்களை காப்பாற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்…” என்று கோரிக்கையும் வைத்தார்.
முத்தாய்ப்பாக படத்தின் நாயகன் ஜெயம் ரவி பேசும்போது, “நான் மட்டும்தான் ஈஸியா வேலை செஞ்சேன்னு மதன் கார்க்கி சொல்றதுலாம் சுத்த பொய். அவர் மூளையை கசக்கி கஷ்டப்பட்டுத்தான் பாட்டு எழுதியிருக்கிறார்.
என் படத்தில் என்னுடன் நடித்தால் பெரிய ஹீரோயின் ஆகிடுவாங்கனு சொல்வாங்க. நிச்சயம் சாயிஷா பெரிய ஹீரோயின் ஆகிடுவாங்க.
விஜய் மாதிரி சினிமாவை நேசிக்கும் ஒருவரால்தான் இந்த படத்தை எடுக்க முடியும். இந்த படம் ஒரு நல்ல விஷயத்தை அழுத்தமாக சொல்லியிருக்கிறது. கூட்டுக் குடும்பமாக வாழும் மலை சார்ந்த மக்களை பற்றிய படம்தான் இது. சின்சியராக உழைத்து இந்த படத்தை எடுத்திருக்கிறோம்.
இந்தப் படத்தின் கதை மேல் நம்பிக்கை வைத்து படத்துக்காக உழைத்த நல்ல கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பால்தான் இந்த படம் இத்தனை சிறப்பாக உருவாகியிருக்கிறது.
போட்ட பணத்தை நிச்சயம் இந்த படம் திரும்ப எடுக்கும். அப்படி படம் ஒடலைனா அடுத்து சம்பளம் வாங்காமல் விஜய்க்கு ஒரு படம் பண்ணி கொடுக்கிறேன்..” என்ற நாயகன் ஜெயம் ரவி, கடைசியில் சொன்னதுதான் நிகழ்ச்சிக்கே ஹைலைட்டாக அமைந்தது.
“நீங்கள் நல்ல தமிழனாக இருந்தால் இந்தப் படத்தை நெட்டுல போடாதீங்க…” என்று கேட்டுக் கொண்டார் ஜெயம் ரவி.
இது எத்தனை மீம்ஸ் கலைஞர்களை உசுப்பிவிடப் போகிறதோ.. தெரியலை..!